
இந்தியா மக்கள்தொகை பெருக்கம், சுகாதார சீர்கேடு, குறைவான மருத்துவ வசதி போன்ற காரணங்களால் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக காசநோய், மலேரியா, வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களும் நீரிழிவு நோய், இதய நோய்கள், சுவாசக் கோளாறுகள் போன்ற தொற்றா நோய்களும் அதிகரித்து வருகின்றன. நாட்டில் மக்கள் அதிகமானோர் இறப்பதற்கு காரணமாக சில நோய்கள் கூறப்படுகின்றன.
இதயநோயினால்தான் இந்தியாவில் அதிகமானோர் இறக்கிறார்கள். நகர்ப்புறமயமாக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு, அதிகரித்து வரும் மனஅழுத்தம் போன்றவையே இந்நோய்கள் அதிகரிப்பதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன. நெஞ்சு வலி, தலைசுற்றல், சோர்வு, குமட்டல், கழுத்து தாடை, முதுகு அல்லது கைகளில் வலி போன்றவை இதய நோயின் பொதுவான அறிகுறிகளாகும்.
நம்மை ஆச்சுறுத்தும் அடுத்த நோய் பக்கவாதம் ஆகும். இந்நோய் மக்களிடையே அதிகரித்து வருவதால் இந்நோயினை தடுப்பதற்கான முழுமையான திட்டங்கள் தற்போதைய தேவையாக உள்ளது.
திடீரென கை, கால் முகத்தின் ஒரு பகுதி மட்டும் உணர்வின்றி மறத்துப்போதல், வாய் குளறுதல், நடையில் தள்ளாட்டம், கடுமையான தலைவலி போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
இந்தியாவில் புகைப்பிடிக்கும் பழக்கம், காற்று மாசுபாடு போன்றவை அதிகமாக இருப்பதால் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. மூச்சுவிடுவதில் சிரமம், சளியுடன் இருமல், நெஞ்சுப் பகுதில் இறுக்கம், மூச்சுத்திணறல் போன்றவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். இந்நோய் முற்றிய நிலையில் உடல் எடை அபரிதமாக குறையும், தினசரி வேலைகளைக் கூட செய்ய முடியாத அளவு உடலில் சோர்வு அதிகரிக்கும்.
வயிற்றுப் போக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கை சிறுவர்களிடையே அதிகமாக இருப்பது இன்றும் காணப்படுகிறது.. மோசமான சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர் இல்லாமை, மோசமான உணவுப் பழக்கம், குறைவான மருத்துவ வசதி போன்றவை காரணமாக இந்நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலகின் நீரிழிவு நோயின் தலைநகரம் எனச் சொல்லுமளவிற்கு இந்தியாவில் அதிகமானோர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புறமயமாக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மரபணு ஆகியவற்றைக் கூறலாம்.
அடுத்து, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு வரும் சிக்கல்கள், மகப்பேறு சமயத்தில் வரக்கூடிய மூச்சுத்திணறல் போன்றவையால் பச்சிளம் குழந்தையின் இறப்பு விகிதமும் இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது.
இந்தியாவின் பொது சுகாதாரத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக நாள்பட்ட சிறுநீரக நோய் உருவெடுத்துள்ளது. உயர் இரத்த அழுத்தம், நீண்ட நாள் நீரிழிவு நோய், உடல் பருமன், போதுமான மருத்துவ வசதி இல்லாமை போன்றவற்றால் இந்நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சோர்வு, கை, கால்களில் வீக்கம், உடல் பலவீனம், கவனச்சிதறல், பசியின்மை, அரிப்பு போன்றவை நாள்பட்ட சிறுநீரக நோயின் பொதுவான அறிகுறிகளாகும். எனினும் இந்நோய் சில சமயங்களில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமலும் இருக்கலாம்.
ஹெபாடிட்டிஸ், குடிப்பழக்கத்தால் வரும் கல்லீரல் நோய் ஆகும். குடிப்பழக்கம் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவற்றால் இந்தியாவில் பலர் இறக்கிறார்கள். உடல் பருமன், மதுப்பழக்கம், வைரஸ் தொற்று, போன்றவை இந்நோய் வருவதற்கான காரணங்களாக அறியப்படுகின்றன.
முறையான உடற்பயிற்சி, சத்தான உணவு, போதுமான உறக்கம், மன அழுத்தத்தை வீட்டிலும், பணியிலும் குறைத்தல், நல்ல நட்புகளுடனும், இறைபக்தியிலும் அன்றாடப் பொழுதினை கழித்தல் போன்றவற்றின் மூலம் நம்மால் உறுதியான உடலுடனும், திடமான மனத்துடனும் நன்கு வாழமுடியும். முயன்று தான் பார்ப்போமே.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.