

நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பு பாதிப்பு மற்றும் இரத்த ஓட்டம் குறைதல் காரணமாகப் பாதங்களில் உணர்ச்சி குறைந்து, சிறு காயங்கள் கூடப் பெரிய புண்களாக மாற வாய்ப்புள்ளது. எனவே, பாத நலனைப் பாதுகாப்பது (Diabetic Foot Care Tips) மிகவும் அவசியமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் எந்தவொரு சிறிய வெட்டுக்காயம், கொப்புளங்கள் மற்றும் புண்கள் கூடத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். பாதங்களில் உணர்திறன் இழப்பு ஏற்படுவதால், காயங்களோ அல்லது வலியில்லாத கொப்புளங்களோ உருவாகும் அபாயம் உண்டு. நரம்பு பாதிப்பு காரணமாகப் பாதங்களில் உள்ள தசைகளும் சரியாகச் செயல்படாமல் போகலாம். எனவே, நோய்த்தொற்று ஏற்பட்டால் உடனடியாகச் சிகிச்சை பெறுவது அவசியம்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் கால்களைப் பாதுகாக்கச் சில முக்கிய அறிகுறிகளைக் கவனித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கால் தோலின் நிறத்தில் மாற்றங்கள்
கணுக்கால் அல்லது காலில் வீக்கம்
நகப் பாதிப்புகள்
கால் வலி, காலில் புண் அல்லது காயம்
மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும். நரம்புகள் பாதிக்கப்படுவதால் கால்களில் வலி அல்லது காயம் ஏற்பட்டால் அது எளிதில் தெரியாது; இது பின்னாட்களில் பெரிய புண்களாக மாறக்கூடும். எனவே, தினமும் பாதங்களைச் சுயமாகப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
வெதுவெதுப்பான நீர் மற்றும் மென்மையான சோப்பு கொண்டு தினமும் பாதங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகு, கால் விரல்களுக்கு இடையில் உள்ள பகுதியை நன்கு துடைத்து உலரவிட வேண்டும்.
அமர்ந்திருக்கும் பொழுது கால்களைச் சற்று உயர்த்தி வைக்கலாம். அவ்வப்போது கால் விரல்களை அசைப்பதன் மூலமும், பாதங்களைச் சுழற்றுவதன் மூலமும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்.
பாதங்களைக் கழுவிச் சுத்தம் செய்த பின்பு, நன்கு துடைத்து உலரவிட வேண்டும். பாதங்களில் தோல் வறண்டு போகாமல் இருப்பதற்கு மாய்ஸ்சரைசர் (Moisturizer) அல்லது லோஷன் தடவலாம். ஆனால், கால் விரல்களுக்கு இடையில் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில், அங்கிருக்கும் ஈரப்பதம் பூஞ்சை தொற்றுக்கு (Fungal Infection) வழிவகுக்கும்.
வீட்டுக்குள்ளும் வெளியிலும் எப்பொழுதும் பொருத்தமான, அதேசமயம் மென்மையான காலணிகளையே அணிய வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் வெறும் காலில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், மிகவும் இறுக்கமான சாக்ஸ்களை (Socks) அணியக் கூடாது; பருத்தியினால் ஆன (Cotton) சாக்ஸ்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
நீரிழிவு நோயாளிகள் நகப் பராமரிப்பில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். நகங்களை நேராக வெட்ட வேண்டும்; அவற்றின் ஓரங்களை மழுங்கச் செய்ய வேண்டும். பக்கவாட்டில் வளைத்து வெட்டுவது நகம் தோலுக்குள் வளர்வதற்கு (Ingrown nail) வழிவகுத்துவிடும். நகங்களை வெட்டும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; நகத்தின் உள் சதைப்பகுதியில் வெட்டுப்பட்டால், அந்த காயம் ஆறுவதற்குக் கூடுதல் நாட்கள் எடுக்கும்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பது நரம்புச் சேதத்தைத் (Nerve damage) தடுக்க உதவும். பாதங்களில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள், ஆறாத புண்கள் அல்லது உணர்ச்சியற்ற தன்மை போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.
வெறும் காலில் நடப்பது.
வெப்பத்தை உணர முடியாத நிலை இருக்கக்கூடும் என்பதால், அதிகச் சூடான தண்ணீரை கால்களுக்கு அருகில் வைத்துப் பயன்படுத்துவது.
பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சுயமாக மருத்துவர் ஆலோசனையின்றி சிகிச்சை அளிப்பது.
புகைப்பிடித்தல் பாதங்களில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கும் என்பதால், புகைப்பிடிக்கும் பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது அவசியம்.
குறிப்பு: பாதங்களில் உணர்ச்சியற்ற தன்மை அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெற வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)