தினமும் தோன்றும் கொஞ்ச நேர மன அழுத்தத்தால் எந்த விதமான கெடுதலும் இல்லை. அது சில நேரங்களில் நாம் ஆக்டிவாக இருக்கக் கூட உதவுகிறது. ஆனால், அந்த மன அழுத்தம் நாள் முழுவதும் தொடர்ந்தால் அதுவே நமது நோய் எதிர்ப்பாற்றலை நாசப்படுத்துகிறது என்கிறார்கள். ஆகவே, நீண்ட நேர மன அழுத்தத்திற்கு முதலில் முடிவு கட்டுங்கள். அதிகப்படியான மன அழுத்தம் நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலை சிதைத்து, ‘ஆட்டோ இம்யூன்’ வியாதிகளை உருவாக்குவதாக ஐஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இவற்றைத் தவிர்க்க ரிலாக்ஸாக ஒரு டீ சாப்பிடுங்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். விரும்பிய விளையாட்டில் நேரம் செலவிடுங்கள்.
தினமும் எவ்வளவு சத்துள்ள உணவுகள் சாப்பிட்டாலும் சரி, அன்றைய பொழுது நீங்கள் சரியான அளவு தூங்காவிட்டால் அவ்வளவும் வீண்தான். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த தினமும் அளவான தூக்கம் அவசியம். சரியான நேரத்தில் இரவு தூங்கச் சென்று 6 முதல் 8 மணி நேரம் நிம்மதியாக தூங்கி எழுவது நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும்.
நீங்கள் எது சாப்பிட்டாலும் அதை உங்கள் வயிறு கிரகித்து சத்தாக மாற்றும் ஆற்றலை பெற்று இருந்தால்தான் உடலில் சத்து சேரும். இல்லாவிட்டால் வயிற்று பிரச்னைதான் தோன்றும். இதனை சரியான முறையில் கையாள தினமும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்களை சாப்பிடுங்கள். தினமும் தவறாமல் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும்.
உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதுதான் நோய் எதிர்ப்பாற்றல் குறைவுக்கு முக்கிய காரணம். அதனால்தான் நோய் தொற்று பலரை பலவீனப்படுத்தி விட்டுச் செல்கிறது. உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இரும்பு சத்து மற்றும் நைட்ரேட் சத்துள்ள உணவுகள் உதவுகின்றன என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். பீட்ரூட், பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள், மாதுளை, வெள்ளை பூண்டு, முட்டைக்கோஸ், காலிபிளவர், கொட்டை உணவுகள் மற்றும் மாமிச உணவுகளிலும் இவை அதிகமுள்ளது.
உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க போதுமான அளவு உடலில் நீர்ச்சத்து இருக்க வேண்டும். எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். வைட்டமின் சியும் அவசியம். இது நெல்லி, கொய்யா போன்றவற்றில் அதிகமுள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்காக, பேரீச்சம்பழம், நிலக்கடலை, பாதாம், பருப்புகள், எள், சூரியகாந்தி விதைகள் என்பனவற்றில் ஒமேகா3, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள முதன்மையான பொருட்களில் ஒன்றான குர்குமின், அதிக நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது.
உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உடலில் போதுமான இயக்கம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் 30 நிமிட நடைப்பயிற்சி அல்லது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி என எதுவாக வேண்டுமானாலும் ஒன்றை தினமும் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சியை வாரத்தில் மூன்று நாட்களாவது செய்யுங்கள் என்கிறார்கள்.
பொதுவாக, மனிதர்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டினால்தான் பலவிதமான தொற்று நோய்கள் ஏற்படுகின்றன என்கிறார்கள். அதனால் உடலில் வைட்டமின் டி சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு சூரிய ஒளியில் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் தினமும் இருக்க வேண்டும், இல்லையென்றால் ஒமேகா 3 உள்ள மீன் மற்றும் முட்டை, முளைகட்டிய தானியங்களை அவ்வப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
சிரிப்பும், மகிழ்ச்சியும் நமது நோய் எதிர்ப்பாற்றலை வலிமைப்படுத்துகின்றன. சிரித்த முகமும், புன்னகையும் சிறந்த மருந்துகள். ஆனால், இதனை பலர் உணர்வதில்லை. எப்போதும் கடுகடுப்புடன், சிடுமூஞ்சியாக உள்ளவர்களுக்கு எல்லா வியாதிகளும் பாதிக்க அதிக வாய்ப்புண்டு. சைக்கோ-நியூரோ இம்முனாலஜி என்ற பிரிவில் இதனை வலியுறுத்துகின்றனர்.
ஆன்மிக நாட்டமுள்ளவர்களின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து அவர்களின் வியாதிகள் விரைவில் குணமடைவதாக ஹன்டர்ஸ்பீல்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.