உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துமாவு தயாரிப்பது எப்படி தெரியுமா?

சத்துமாவு
சத்துமாவு

காலையில் எழுந்தவுடன் நாம் பெரும்பாலும் டீ அல்லது காபி இந்த இரண்டைத்தான் அருந்துவோம். இது நடைமுறையில் உள்ளது. ஆனால், நமது முன்னோர்கள் காலை எழுந்தவுடன் முதலில் சாப்பிடுவதே சத்தான உணவுதான். அதனால்தான் அவர்கள் வாழ்வின் இறுதி நாட்கள் வரை பெரும் நோய்கள் எதுவும் பாதிக்காமல் வாழ்ந்து வந்தார்கள்.

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. அதிலும் சத்துமாவு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. இது மகிழ்ச்சி தரும் விஷயம்தான். ஆனால், அந்த சத்துமாவை நாம் கடையில் டப்பாக்களில் அடைத்து வைத்திருப்பதை வாங்கியே பயன்படுத்துகிறோம். அது முழுமையான சத்துமாவுதானா என்பது கேள்விக்குறிதான். ஆனால், நாம் வீட்டிலேயே சத்துமாவை மிக எளிமையாக தயார் செய்யலாம். அது எப்படி என்பதை பார்ப்பதுதான் இந்தப் பதிவு.

சத்துமாவு தயாரிக்க பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. செய்வதை ஒரு முறை பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். சமையலில் திறமை உள்ளவர்களுக்கு அதுவும் தேவையில்லை. செய்முறையை படித்துப் பார்த்தே செய்து விடுவார்கள்.

சத்துமாவு தயாரிக்கத் தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ, சோளம் 2 கிலோ, கம்பு 2 கிலோ, பாசிப்பயறு அரை கிலோ, கொள்ளு அரை கிலோ, மக்காசோளம் 2 கிலோ, பொட்டுக்கடலை ஒரு கிலோ, சோயா ஒரு கிலோ, தினை அரை கிலோ, கருப்பு உளுந்து அரை கிலோ, சம்பா கோதுமை அரை கிலோ, பார்லி அரை கிலோ, நிலக்கடலை அரை கிலோ, அவல் அரை கிலோ, ஜவ்வரிசி அரை கிலோ,வெள்ளை எள் 100 கிராம், கசகசா 50 கிராம், ஏலம் 50 கிராம், முந்திரி 50 கிராம், சாரப் பருப்பு 50 கிராம், பாதாம் 50 கிராம், ஓமம் 50 கிராம், சுக்கு 50 கிராம், பிஸ்தா 50 கிராம், ஜாதிக்காய் 2, மாசிக்காய் 2.

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்துமாவு தயார். இதனால் 12 கிலோ சத்துமாவு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பாப்கார்ன் - நோய்களை நொறுக்கும் நொறுக்குத்தீனி!
சத்துமாவு

சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளிலேயே கிடைக்கின்றன. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

பயன்கள்: ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு, உப்பு அல்லது உப்பு-மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியே கூட அருந்தலாம். காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும்போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவு.

சத்துமாவை காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com