இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் அந்த நீரை குடித்து வந்தால் உடலில் வளர்சிதை மாற்றத்தை விரிவுப்படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி, இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
நீரிழிவு, மலச்சிக்கல், முடி உதிர்தல், பசியின்மை போன்றவற்றைப் போக்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது. வெந்தயத் தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான நுகர்வு சிலருக்கு தீங்கு விளைவிக்கும். அந்த வகையில் வெந்தய நீர் குடிக்கக் கூடாதவர்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள்: வெந்தயத் தண்ணீர் குடித்தால் ஒவ்வாமை காரணமாக சருமத்தில் வெடிப்பு, அரிப்பு, வீக்கம் மற்றும் சிவந்து காணப்படுதல் போன்ற சருமம் தொடர்பான பிரச்னைகள் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்ல, சுவாசிப்பதில் சிரமம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும் என்பதால் ஒவ்வாமை ஏற்படும் பிரச்னை இருந்தால் வெந்தயத் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
2. வாயு மற்றும் அஜீரணம்: வெந்தய நீர் குடித்த பிறகு சிலருக்கு அஜீரணக் கோளாறு, வாயு, வயிற்றில் புளிப்பு, ஏப்பம் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதோடு, வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தும். எனவே, வெந்தய நீர் குடித்த பிறகு இது மாதிரியான பிரச்னைகளை எதிர்கொண்டால் வாயு மற்றும் அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் அதைக் குடிக்க வேண்டாம்.
3. மூச்சுத் திணறல் உள்ளவர்கள்: வெந்தயத்தின் ஒவ்வாமையானது சுவாசிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உறுப்புகளை பாதிக்கும் என்பதால் சிலருக்கு வெந்தயத் தண்ணீர் குடித்த உடனேயே மூச்சுத் திணறல் ஏற்படும். எனவே, ஏற்கெனவே மூச்சுத் திணறல் பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே இந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
4. இரத்த சர்க்கரை குறைவுள்ளவர்கள்: அதிக நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி வெந்தய நீர் மிகவும் நன்மை பயக்கும். இருந்தாலும் வெந்தய நீரை அளவுக்கு அதிகமாகக் குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்து விடும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் வெந்தய நீர் குடிப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
5. கர்ப்பிணிகள்: வெந்தய நீரை கர்ப்பிணிப் பெண்கள் குடிக்கும்போது அது சில சமயங்களில் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது என்று ஆய்வு கண்டறிந்துள்ளனர்.
முக்கியமாக, வெந்தய நீர் மற்றும் வெந்தயத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உணவில் சேர்க்கும்போது இது கரு சிதைவுக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஒருவேளை கர்ப்பிணிகள் வெந்தய நீர் குடிக்க வேண்டும் என்றால் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
மேற்கூறிய ஐந்து பேரும் வெந்தய நீர் குடிக்கும்போது ஒரு முறைக்கு பலமுறை மருத்துவரை ஆலோசித்த பின்பே குடிக்க வேண்டும்.