உடல் ஆரோக்கியம் காப்பதற்காக நாம் பல வகை உணவுகளை உண்டு வருகிறோம். அவற்றுள் பழங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள் அதிசயிக்கத்தக்கவை. பழங்கள் துடிப்பான மனநிலை தரவும் மூளையின் மேம்பட்ட இயக்கத்திற்கும் உதவுகின்றன. சூழ்நிலை இறுக்கம் குறைக்கவும் செய்கின்றன. ஊட்டச் சத்துக்களின் அடிப்படையில் பழங்கள் மேலும் எத்தனை நன்மைகள் தருகின்றன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
பழங்களை நம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அவற்றிலிருந்து கிடைக்கும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்தவும், மொத்த ஆரோக்கியத்தை காக்கவும் உதவுகின்றன.
இனிப்பூட்டிகள் சேர்த்து செயற்கை முறையில் தயாரிக்கப்படும் லட்டு, ஜிலேபி போன்ற உணவுகளை உண்பதை விட, பழங்களை உண்ணும்போது அவற்றிலிருந்து கிடைக்கும் இயற்கையான இனிப்புச் சத்து அதிக ஆரோக்கியம் தரும்; இரத்த சர்க்கரை அளவையும் சமநிலையில் பராமரிக்க உதவும்.
பழங்களிலுள்ள நார்ச்சத்து சீரான செரிமானத்துக்கு உதவும். மலச் சிக்கலைத் தவிர்க்கவும் செய்யும். பழங்களிலுள்ள அதிகளவு ஊட்டச் சத்துக்களானவை இதய நோய், ஸ்ட்ரோக் மற்றும் கேன்சர் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் ஆபத்தைத் தடுக்க உதவுகின்றன.
மஞ்சள், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, டார்க் பர்பிள் போன்ற துடிப்பான நிறங்களுடைய பழங்கள், அவற்றில் நோயை எதிர்த்துப் போராடக்கூடிய ஃபைட்டோ கெமிக்கல்ஸ், ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள்கள் நிறைந்திருப்பதைக் குறிப்பவை.
பழங்கள் நம் டைனிங் டேபிளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓர் அலங்காரப் பொருள் அல்ல; உடல் ஆரோக்கியம் காக்க உதவும் சரிவிகித உணவின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, அன்றாடம் பழங்கள் உண்பதை வழக்கமாக்கிக் கொண்டு வாழ்வோம் வளமுடன்!