மஞ்சள் கிழங்கின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

ஜூலை 14, உலக மஞ்சள் தினம்
மஞ்சள் கிழங்கு, பொடி
மஞ்சள் கிழங்கு, பொடி
Published on

ஞ்சள் கிழங்கில் மூன்று வகைகள் உள்ளன. முதல் வகை முகத்திற்குப் போடும் மஞ்சள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். இது வெள்ளை நிறத்தோடு, தட்டையாக நிறைந்த மணத்தோடு இருக்கும். மூன்றாம் வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்று பெயர். கறி மஞ்சளும் இதுதான்.

புதிதாக ஒரு வீட்டில் குடியேறுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை சாமி படத்தின் முன்பு வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுவார்கள். புத்தாடை அணியும் முன்பு அதில் சிறிதளவு மஞ்சள் வைத்து அணிவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதனால் நோய் கிருமிகள் நம்மை அண்டாது. பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவது வழக்கம். கிராமப்புறங்களில் திருவிழா காலங்களில் உறவினர்கள் மீது மஞ்சள் நீரை தெளித்து விளையாடுவார்கள். வாசல் படிகளில் மஞ்சள் பூசுவதற்கும் வீடு முழுவதும் மஞ்சள் கரைத்து தெளிப்பதற்கும் மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பதே காரணம்.

பொதுவாக, இந்தியர்களின் சமையல்களிலும் மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. மஞ்சள் ஒரு இயற்கையான நிறமாக இருப்பதால் பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் தென்பகுதிகளில் சாம்பார், முட்டைக்கோஸ் கறி போன்றவற்றை மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதுபோல், வட இந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

நீண்ட காலமாகவே தமிழகப் பெண்கள் தங்கள் முகத்தையும் உடலையும் அழகுப்படுத்திக்கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாகப் பயன்படுவதால் இந்தியப் பெண்கள் இதை சருமத்துக்கு ஊட்டம் அளிக்கும் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இது முகத்தில் ரோமங்கள் வளருவதைத் தடுக்கிறது. மஞ்சள் தூளை நேரடியாக சருமத்தில் தேய்த்துக் கழுவினால் அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருள் கரும் புள்ளிகளையும் சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்திற்கு சரியான பாதுகாப்பு கொடுக்கிறது. சருமத்தில் உள்ள காயங்களை குணமாக்க மஞ்சள் தூளுடன் தேன் கலந்து தடவி ஊறவைத்து கழுவ வேண்டும்.

கால்களில்  உள்ள வெடிப்புகளைப் போக்குவதற்கு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து வெடிப்புள்ள பகுதியின் தடவி வந்தால் விரைவில் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும். அம்மை நோயால் பாதிக்கப்பட்டால் மஞ்சளுடன் வேப்ப இலைகளை அரைத்து பூசுவது வழக்கம். அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரை தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சுற்றுச்சூழலின் நண்பர்களான சுறா மீன்களைப் பாதுகாப்பதன் அவசியம் தெரியுமா?
மஞ்சள் கிழங்கு, பொடி

மஞ்சள் வயிற்றுப் பசியை தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் குணம் கொண்டது. இது இரத்தத்தை சுத்தப்படுத்தி குடல் பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. நீரிழிவு மற்றும் தொழு நோயை கட்டுப்படுத்தி, குறைப்பதோடு சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தியும் மஞ்சளுக்கு உண்டு.

சுத்தமான விரலி மஞ்சள் தூள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு வயிறு தொடர்பான நோய்களையும் போக்குகிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது. விரலி மஞ்சளை சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால் ஜலதோஷம், கடும் தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து உடம்பில் பூசினால் படைகள், விஷக்கடிகள் நீங்கும்.

புதிதாகப் பறிக்கப்பட்ட மஞ்சளில் வைட்டமின் சி உள்ளது. மஞ்சளில் பொட்டாசியம் இருப்பதினால் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. மஞ்சளில் தாது பொருட்களான மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம் போன்றவை அடங்கியுள்ளன. மஞ்சள் தூளையும் பெருங்காயத் தூளையும் நீரில் கலந்து கொதிக்க வைத்து வேது பிடித்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும். மூக்கடைப்பு ஏற்பட்டால் மஞ்சளை சுட்டு அதன் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாகும். இத்தனை சிறப்பு வாய்ந்த மஞ்சளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி பலன் பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com