மித்தோமேனியா (Mythomania) என்பது கட்டாய அல்லது பழக்கமான பொய்யின் நீண்ட கால நடத்தையாகும். எந்தவிதமான வெளிப்படையான காரணமும் இன்றி பொய் சொல்வார்கள். நோயியல் பொய் என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் இதற்கான தெளிவான வரையறை எதுவும் இல்லை. வெளிப்படையான காரணமோ ஆதாயமோ எதுவும் இல்லாமல் சொல்லப்படும் பொய்கள்.
இது வெவ்வேறு மன நோய்களில் குறிப்பாக ஆளுமை கோளாறுகளில் காட்டக்கூடிய அறிகுறிகளின் தொகுப்பாக உள்ளது. இது பொதுவாக குறைந்த சுயமரியாதை உள்ளவர்களை பாதிக்கும் ஒரு பிரச்னையாகும். அவர்கள் தங்களை முக்கியமானவர்களாக உணர பொய் சொல்கிறார்கள். பொய்கள் கூறுவதன் மூலம் கவனத்தை ஈர்க்க முயல்கிறார்கள்.
இந்த நோய் தாக்கியவர்கள் தாங்கள் சாதித்து விட்டதாக அல்லது தாங்கள் அடையாத ஒன்றை அனுபவித்ததாகக் கூறுவது போன்ற தவறான வரலாற்றை உருவாக்குவார்கள். ஒரு பிரபலமான நபருடன் தொடர்புடையவர்கள் என்று கூறுவது போன்ற பொய்களைக் கூறி மற்றவர்களை கவர்வார்கள். இப்படிப் பொய் சொல்வதை மிகைப்படுத்தி அசாதாரணமாக சொல்வதை ‘பழக்கவழக்க பொய்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த வகையை சேர்ந்தவர்கள் உண்மையை சொல்வதை விட பொய்களை சொல்வதில் வசதியாக இருக்கலாம். ஒரு நபர் கவனத்தை அல்லது புகழைப் பெற பொய் சொல்லலாம். நோயியல் ரீதியாக பொய் சொல்பவர்கள் தங்கள் பொய்களை மிகவும் நம்பகமானதாக மாற்றுவதற்காக உண்மையுடன் பொய்களைக் கலக்கலாம்.
மித்தோமேனியா என்பது ஒரு மனநல கோளாறாகும். இது பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்தால் வகைப்படுத்தப்படுகிறது. இது பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையையும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையையும் தீவிரமாக பாதிக்கும். இவர்கள் கூறும் பொய்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது போலவே இருக்கும். இதனால் அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம். இந்த நபர்கள் முக்கியமான அல்லது பொருத்தமற்ற உண்மைகளைப் பற்றி பொய் சொல்கிறார்கள். தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது ஒரு மன நோய் அல்லது எல்லைக்குட்பட்ட ஆளுமை கோளாறு எனவும் கூறலாம்.
இந்த மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் பொய் சொல்ல வேண்டும் என்ற கட்டாய விருப்பத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொய்கள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கும் அல்லது இவர்களால் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். இந்நோய் உள்ளவர்கள் இயல்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதில் சிரமம் உண்டாகலாம்.
அவர்கள் கூறும் பொய்கள் அவர்களின் உறவுகளிலும், வேலையிலும், வாழ்க்கையிலும் சிக்கல்களை உருவாக்கும். இவர்களே ஒரு மாயையான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவோ, காயப்படுத்தப்படுவதாகவோ நினைக்கலாம். இவர்கள் உண்மையை சொல்கிறார்களா இல்லையா என்பதை அறிவது மிகவும் கடினமாக இருக்கும்.
சிகிச்சை: இதற்கு சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ உதவும் வகையில் மருந்துகளும், உளவியல் சிகிச்சை மூலம் அவர்கள் தங்கள் பொய்களை அடையாளம் கண்டு அதனுடன் வாழவும் கற்றுக்கொள்ள உதவும். கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற கோளாறுகளின் அறிகுறிகளைப் போக்க மருந்துகள் உதவும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.