

தாகம் என்பது அனைவருக்கும் தோன்றக்கூடிய பொதுவான ஒரு உடல் செயல்பாடுதான். அதற்கு தண்ணீர் அதிகமாக குடித்தால் தாகம் அடங்கிவிடும். ஆனால், ஒரு சிலருக்கு மட்டும் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் உடனடியாக தாகம் அடங்குவது இல்லை. இந்த பிரச்னையை சாதாரணமாக நாம் கருதி அலட்சியமாக இருக்கக் கூடாது. அதிக தாகம் நம் உடலில் ஏற்படும் சில நோய்களின் முன்னறிவிப்பாக இருக்க கூடும். அதனால், இது போன்ற சாதாரண அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கலாம்.
பொதுவாக தண்ணீர் கொடுத்தாலே தாகம் தணிந்து விட வேண்டும். சில நேரங்களில் அதிகப்படியான உடல் உழைப்பு காரணமாகவும் அதிக தாகம் ஏற்படலாம். ஆனால், போதுமான அளவு தண்ணீர் குடித்த பின், குறிப்பிட்ட நேரம் கழித்து இந்த தாகம் அடங்கிவிடும்.
அதே நேரம் கடுமையான வெப்பம், காற்றில் ஈரப்பதம் குறைவாக இருத்தல், உடலின் அதிகப்படியான வியர்வை, சோர்வு போன்ற காலங்களில் இந்த தாகம் இருக்கலாம். மற்ற இயல்பான நேரங்களில் தண்ணீர் குடித்த பிறகும் கூட மீண்டும் மீண்டும் குடிக்க தாகம் தூண்டினால், நிச்சயமாக அது ஆரோக்கியத்தின் சமச்சீரற்ற நிலையை குறிக்கிறது.
அதீத தாகம் ஏற்பட்ட சூழ்நிலையில், வாய் வறட்சியாக இருப்பதும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படுவதும், சோர்வு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது, ஆரோக்கியத்தை முன்கூட்டியே மீட்டெடுக்க ஏதுவாக இருக்கும். இதில் புறக்கணித்தல் அல்லது தாமதப்படுத்துதல் என்பது ஆரோக்கியத்தில் நீண்ட கால எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். மருத்துவரின் ஆய்வின் படி இதற்கான காரணங்களை கண்டறிவது அவசியம்.
நீரிழிவு நோய்:
அடிக்கடி தாகம் எடுப்பது நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு தொடர்ச்சியாக அதிகரிக்கும் போது, சிறுநீர் மூலம் அதிகப்படியான சர்க்கரை வெளியேற்ற உடலின் செயல்பாடுகள் நடைபெறும். ஆனாலும், உடலின் செயல்பாடுகள் குறைந்த அளவு சர்க்கரையை தான் வெளியேற்ற முடியும். தொடர்ச்சியாக சிறுநீர் வெளியேற்றுவதன் மூலம் உடலில் உள்ள நீர் சத்து பெருமளவில் குறைந்து போய்விடும். இதன் காரணமாக அதீத தாகம், தலைவலி, சோர்வு, குமட்டல், வாய் வறண்டு போகுதல் போன்றவையும் துணை அறிகுறிகளாக ஏற்படும்.
ரத்தசோகை:
நீரிழிவு நோய் மட்டுமல்ல ரத்த சோகை நோயும் அதிக தாகத்தை ஏற்படுத்தும். பலரும் தாகத்தை சர்க்கரை நோயோடு தொடர்புபடுத்தி பார்க்கின்றனர். ஆனால், ஒரு சில நிலைகளில் இதை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். ரத்தசோகை நோய் காரணமாக, சிவப்பணுக்கள் உடலில் ஆக்சிஜனை சரிவர கடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த சூழலில் ரத்தத்தினை உடல் முழுக்க கடத்த, நீர்சத்து தேவை அதிகரிப்பதால் அதிக தாகம் ஏற்படும்.
புகையிலை பொருட்கள் மற்றும் மருந்துகளின் பக்கவிளைவுகள்:
சில நேரங்களில் புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை சார்ந்த போதைப் பொருட்களை பயன்படுத்துவர்களுக்கும் இது போன்ற தாகம் ஏற்படும். இந்த மோசமான பழக்கங்களுக்கு ஆளாகுபவரின் உடல்நிலையில், உடலில் உள்ள சில உறுப்புகள் தற்காலிகமாக பாதிக்கப்படுவதால் அதிக தாகம் ஏற்படுகிறது. சில மாத்திரைகளின் பக்க விளைவாக, அந்த மாத்திரையின் செயல்திறன் உடலில் இருக்கும் வரையில் அதீத தாகம் இருக்கலாம். இது தற்காலிகமானது தான். ஆயினும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)