

பொதுவாகக் கோடைக்காலத்திலோ அல்லது மிகவும் காரசாரமான உணவுகளைச் சாப்பிடும்போதோ உடலில் வியர்வை உண்டாவது இயற்கையானது. இது உடலின் வெப்பநிலையைச் சமன் செய்ய நடக்கும் ஒரு செயல்முறை ஆகும்.
ஆனால், குளிர்ந்த சூழலில் இருக்கும்போது கூட அல்லது காரமே இல்லாத சாதாரண உணவைச் சாப்பிடும்போது முகம், கழுத்து, தலையில் அதிகப்படியான வியர்வை வழிந்தால், அதைச் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடாது. மருத்துவ உலகில் இந்த நிலையை ஒரு முக்கியமான அறிகுறியாகப் பார்க்கிறார்கள். இது ஏன் ஏற்படுகிறது என்பதையும், இதன் பின்னணியில் உள்ள ஆரோக்கியச் சிக்கல்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மருத்துவ ரீதியாக இதை Gustatory Sweating என்று அழைக்கிறார்கள். பொதுவாக நெற்றி, மூக்கு, மேல் உதடு மற்றும் கன்னத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த வியர்வை அதிகமாகத் தோன்றும். எப்போதாவது ஒருமுறை, குறிப்பாக சூடான ரசம் அல்லது மிளகு கலந்த உணவை உண்ணும்போது இப்படி நிகழ்ந்தால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் ஒவ்வொரு முறை உணவு உண்ணும்போதும், எந்தக் காரணமும் இல்லாமல் வியர்வை கொட்டினால், உடல் நமக்கு ஏதோ ஒரு செய்தியைச் சொல்ல வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய்!
இந்த நிலைக்குப் பல மருத்துவக் காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது நீரிழிவு நோய் ஆகும். நீண்ட நாட்களாகச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாதபோது நரம்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக முகத்தைச் சுற்றியுள்ள நரம்புகள் பாதிக்கப்படும்போது, உணவு உண்ணும் தூண்டுதல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வியர்வைச் சுரப்பிகள் இயக்கப்படுகின்றன. இது சர்க்கரை நோய் முற்றிய நிலையை அல்லது நரம்புத் தளர்ச்சியை உணர்த்தும் ஒரு குறியீடாகும்.
தைராய்டு!
அடுத்ததாக, தைராய்டு சுரப்பியில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை இருந்தால், உடல் வெப்பநிலையைச் சீராக வைப்பதில் சிக்கல் ஏற்படும். ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்கு வளர்சிதை மாற்றம் அதிகமாக இருப்பதால், சாப்பிடும்போது உடல் சூடாகி வியர்வை வெளியேறலாம். இதுதவிர, சிலருக்கு மரபணு ரீதியாகவும் இந்தப் பிரச்சனை இருக்கலாம்.
பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் இது ஏற்படலாம். குழந்தைகள் சாப்பிடும்போது உணவை மென்று விழுங்கவும், செரிமானம் செய்யவும் அதிக ஆற்றலைச் செலவிடுவதால் அவர்களுக்கு வியர்ப்பது இயல்பு. ஆனால் குழந்தை மிகவும் சோர்வாகக் காணப்பட்டாலோ, வியர்வையோடு நடுக்கம் இருந்தாலோ மருத்துவரை அணுகுவது நல்லது. பெரியவர்களைப் பொறுத்தவரை, திடீரென எடை குறைதல், நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் வியர்வையோடு சேர்ந்து தென்பட்டால், உடனடியாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகும்.
இந்தப் பிரச்சனையைக் குறைக்க அல்லது கட்டுப்படுத்தச் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். அதிக மசாலா, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஒரே நேரத்தில் வயிறு முட்டச் சாப்பிடுவதை விட, சிறுகச் சிறுகச் சாப்பிடுவது ஜீரணத்தை எளிதாக்கும் மற்றும் உடல் வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்கும்.
நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலைக் குளிர்ச்சியாக வைக்கும். மன அழுத்தம் இல்லாமலும், போதிய உறக்கத்துடனும் இருப்பது நரம்பு மண்டலத்தைச் சீராக வைக்கும். யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் மன பதற்றத்தைக் குறைத்து வியர்வையைக் கட்டுப்படுத்த உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)