40 வயதை தாண்டிவிட்டதா? உங்கள் பார்வையை பறிக்கும் 3 கண் நோய்கள்... தப்பிப்பது எப்படி?

அறிகுறிகள் இல்லாமலேயே பார்வையை பறிக்கும் குளுக்கோமா மற்றும் கண்புரை நோய்களில் இருந்து தப்பிக்கும் வழிகள்!
Eye care | கண் பராமரிப்பு
Eye care | கண் பராமரிப்பு
Updated on

வயதாகும் பொழுது பார்வையில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ஆனால் அவை எப்போதும் இயல்பானவை அல்ல. முதுமையினால் ஏற்படும் கண் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பெரும்பாலும் தடுக்கவோ அல்லது சிகிச்சை அளிக்கவோ முடியும். முதுமை காரணமாக நம் கண்களில் கண்புரை (Cataract), குளுக்கோமா (Glaucoma) மற்றும் வயது தொடர்பான விழித்திரை சிதைவு (AMD) போன்ற பல நலிவடைதல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முதுமையினால் ஏற்படும் கண் பிரச்சனைகளிலிருந்து நம் பார்வையை பாதுகாக்க சில எளிய வழிகளைக் கையாளலாம்.

வழக்கமான கண் பரிசோதனை:

40 வயதிற்குப் பிறகு வருடத்திற்கு ஒரு முறையாவது கண் மருத்துவரை சந்தித்து முறையான கண் பரிசோதனை (Dilated Eye Exam) செய்து கொள்வது கண் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும்.

குளுக்கோமா போன்ற வியாதிகள் ஆரம்பத்தில் எந்த அறிகுறியையும் காட்டாது. எனவே இதனை பரிசோதனை மூலமே கண்டறிந்து பார்வை இழப்பை தடுக்க முடியும்.

சத்தான உணவுகள்:

பச்சை இலைக் காய்கறிகள், கீரைகள், முட்டைகோஸ் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பாதாம், மீன் மற்றும் அக்ரூட் பருப்புகள் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின் A, C மற்றும் E நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வது விழித்திரை சிதைவைத் தடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு:

வெளியே செல்லும்போது குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை புற ஊதாக் கதிர்களில் இருந்து (UV rays) கண்களை பாதுகாக்க தரமான வெயில் கண்ணாடிகளை (Sunglasses) அணிய வேண்டும்.

அகலமான விளிம்பு கொண்ட தொப்பிகளை அணிவதன் மூலம் சூரியக் கதிர்கள் நேரடியாகக் கண்களை தாக்குவதைத் தவிர்க்கலாம்.

கண்களுக்கு ஓய்வு அளித்தல்:

டிஜிட்டல் திரைகளை முறையாகக் கையாள்வது கண்களை பாதுகாக்க உதவும். ஸ்மார்ட் ஃபோன்களும் தொலைக்காட்சிகளும் நமது வாழ்க்கையை மிகவும் வசதியாக்கியுள்ளன. ஆனால் அவற்றின் அதிகப்படியான பயன்பாடு கண் சோர்வுக்கு வழிவகுக்கும். கணினி அல்லது மொபைல் திரையைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும். இந்த 20-20-20 விதி நம் கண்களை பாதுகாக்க உதவும்.

நீண்ட நேரம் தொலைக்காட்சி அல்லது கைப்பேசி பார்ப்பதை தவிர்த்து கண்களுக்கு சிறிது ஓய்வு அளிக்க வேண்டியது அவசியம்.

திரைகளைப் பார்க்கும் பொழுது கண்களை அடிக்கடி சிமிட்டுவதன் மூலம் கண்கள் வறண்டு போவதைத் (Dry Eyes) தடுக்கலாம்.

Eye care | கண் பராமரிப்பு
Eye care | கண் பராமரிப்பு

நாள்பட்ட நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது:

நாள்பட்ட நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். நீரிழிவு நோய் கட்டுப்பாடற்று இருந்தால் அது நீரிழிவு ரெட்டினோபதி (Diabetic Retinopathy) போன்ற கடுமையான கண் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உயர் ரத்த அழுத்தமும் கண்ணில் உள்ள ரத்த நாளங்களை பாதிக்கும் என்பதால் அதைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உடலில் சுரக்கும் இந்த எண்ணெயை தடுத்தால் ஆபத்து? சருமத்தில் நடக்கும் மாற்றம் இதுதான்!
Eye care | கண் பராமரிப்பு

கண்களைத் தேய்க்காமல் இருப்பது:

அரிப்பு அல்லது சோர்வு ஏற்படும் போது கண்களைக் கைகளால் அழுத்தி தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். வயதானவர்களுக்கு பொதுவாக ஏற்படும் கண் வறட்சியை தவிர்ப்பதற்கு உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

போதுமான தூக்கம்:

தினமும் இரவில் தேவையான அளவு ஆழ்ந்த தூக்கம் பெறுவது கண்களின் சோர்வைக் குறைத்து பார்வையை பாதுகாக்க உதவும்.

மேலும் முதுமையினால் ஏற்படும் கண் பிரச்சனைகளில் இருந்து கண்களை பாதுகாக்க எளிய கண் பயிற்சிகள் செய்யலாம். உள்ளங்கைகளைத் தேய்த்து கண்களின் மேல் வைத்தல், கண்களை சுழற்றுதல் போன்ற எளிய கண் பயிற்சிகள் கண் தசைகளை தளர்த்த உதவும்.

இதையும் படியுங்கள்:
கீரை சாப்பிடாத குழந்தைகள் விரும்பி கேட்கும் மொறுமொறு முசுமுசுக்கை தோசை!
Eye care | கண் பராமரிப்பு
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com