உயரத்திற்கு ஏற்ப உடல் எடை சரியாக இருந்தால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியும். உடற்பருமன் பலவித நோய்களுக்கு வழிவகுக்கிறது. உடல் எடை பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது வெந்தயம். அதை எடுத்துக் கொள்ளும் ஐந்து விதமான வழிகளைத்தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
வெந்தயத்தின் பயன்கள்:
லேசான கசப்பு சுவையுடன் இருக்கும் வெந்தயம் நார்ச்சத்து நிறைந்தது. இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும். இது காப்பர், பொட்டாசியம், போலிக் ஆசிட், கால்சியம், இரும்புசத்து, மாங்கனிஸ், வைட்டமின் சி, ஏ, கே, பி6 மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்தது. இது உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, உடல் எடை அதிகரிக்க விடாமல் தடுத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது. எடையைக் குறைக்கவும் செய்கிறது.
வயிறு உப்புசத்தை தடுத்து, நல்ல ஜீரணத்திற்கும் உதவுகிறது பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கச் செய்கிறது. முடி வளர்ச்சிக்கு மிகச் சிறந்தது வெந்தயம் நன்றாக முடி வளரச் செய்வதோடு, முடி உதிர்வு, பொடுகு, இளநரையைத் தடுத்து முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். வெந்தயத்தை உண்பதோடு, தண்ணீரில் ஊற வைத்து அரைத்து முடியிலும் முகத்திலும் போட்டுக் கொள்ளலாம். இதில் உள்ள பீட்டா கரோட்டின், விட்டமின் சி இரண்டும் முகத்தையும், தலைமுடியையும் பளபளப்பாக வைத்திருக்கும்.
வெந்தயத்தை உண்ண ஐந்து சிறந்த வழிகள்:
1. வெறும் வயிற்றில் வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்து விட்டு வெந்தயத்தைச் சாப்பிட வேண்டும்.
2. வெந்தய டீ: கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து அதன் கசப்பு சுவை உள்ளே இறங்கும் வரை காத்திருந்து அதை வடிகட்டி, சிறிது நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கலாம்.
3. முளைக்கட்டிய வெந்தயம்: வெந்தயத்தை முளைக்கட்டி வைத்து உண்ணலாம். இதில் சத்துக்கள் அதிகம். சாலடுகளுடன் கலந்து உண்ணலாம் அல்லது மாதுளம் பழம் முத்துக்களுடன் கலந்து உண்ணலாம்.
4. வெந்தயப் பவுடர்: வெந்தயத்தை லேசாக வறுத்து அதை பவுடராக தூளாக்கிக் கொள்ளலாம். இதை சூப்புகள், ஸ்மூத்தீஸ் போன்றவற்றில் கலந்து கொள்ளலாம். பொரியல்களில் கூட லேசாகத் தூவி விடலாம்.
5. மாத்திரை போல விழுங்குவது: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடலாம். நீரில் ஊற வைத்து, குடிப்பதால், அதன் கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது. அதற்குப் பதில், தினமும் காலையில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை மாத்திரை போல வாயில் போட்டுக்கொண்டு பின்பு தண்ணீர் ஊற்றி விழுங்கி விடலாம். ஊற வைத்த வெந்தயத்தை போலவே இதிலும் சத்துக்கள் கிடைக்கும். கசப்பும் இருக்காது.