நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் பாதிப்பு இப்போது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் பொது உடல்நல பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகமாக இருப்பதே சர்க்கரை நோயின் அடிப்படைக் காரணமாகிறது.
இரத்த சர்க்கரை அளவு சராசரி அளவைத் தாண்டும்போது ஒருவர் மயக்கம், நடுக்கம் போன்ற பல உபாதைகளை சந்திக்க வேண்டியுள்ளது என்பதால் மருத்துவர்கள் மருந்துகளை மட்டும் நம்பாமல் உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க அவர்களிடம் வலியுறுத்துவார்கள்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் அவர்களுக்கான உணவு முறைகளை எடுத்துச் சொல்லி, தனி ஆலோசனை மற்றும் அச்சடிக்கப்பட்ட அட்டவணையைத் தருவது வழக்கம். நீரிழிவு நோயாளிகள் எதைச் சப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். சர்க்கரை நோயாளிகள் அவசியம் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. தர்பூசணி, உலர்ந்த பிளம்ஸ், அன்னாசிப்பழம், பழுத்த வாழைப்பழங்கள், ஆரஞ்சு, திராட்சை மற்றும் பேரீச்சம்பழம் போன்ற பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் இவற்றை சாப்பிடும்போது விரைவில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மேலும், மாம்பழம், ஆப்பிள் ஆகியழற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே இந்தப் பழங்களையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
2. பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றிக்கொழுப்புடன் தயாரிக்கப்பட்ட பீன்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருக்கும் வாய்ப்பு உண்டு என்பதால் இவையும் நீரிழிவு நோயை அதிகரிக்கும்.
3. பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் இரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும் என்பதால் இவற்றையும் அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வெள்ளை நிறத்தில் உள்ளவை யாவும் சர்க்கரை நோய் பாதிப்புக்கு எதிரானதாகும்.
4. அதிக கிளைசெமிக் குறியீட்டு அளவைக் கொண்டுள்ள குளிர் பானங்கள், வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி மற்றும் உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், கிளைசெமிக் குறியீட்டுடன் கூடுதலாக, அதிக கார்போஹைட்ரேட் அளவு கொண்ட உணவுகள் சர்க்கரை நோயை மேலும் அதிகப்படுத்துவதாகும்.
5. அதிக கொலஸ்ட்ரால் உள்ள தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றில் சமைத்த உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த இனிப்புப் பலகாரங்கள், சிப்ஸ், முறுக்கு, பூரி, சமோசா போன்றவற்றை தவிர்ப்பதும் உடலுக்கு நலம் பயப்பவையாகும்.
6. துரித உணவுகளாகிய ப்ரைடு ரைஸ், ஃப்ரைடு நூடுல்ஸ் போன்ற மசாலா நிறைந்த உணவுகளில் கொழுப்பு, கார்ப், சோடியம், கலோரி போன்றவை அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு இவை அதிக ஆபத்தை விளைவிக்கும். இவற்றையும் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
எந்த உணவாக இருந்தாலும் அதை இடைவெளி விட்டு குறிப்பிட்ட அளவுகளில் எடுத்துக்கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.