
'ஹைப்பர் ஆக்டிவிட்டி' என்பது கவனக்குறைவு ஹைப்பராக்டிவிட்டி கோளாறு போன்ற நிலைகளில் காணப்படும் ஒரு நரம்பியல் வளர்ச்சி கோளாறாகும். ADHD(Attention-deficit hyperactivity disorder) என்பது கவனக்குறைவு ஹைப்பராக்டிவிட்டி கோளாறு என்பதைக் குறிக்கிறது.
இது தன்னிச்சையான செயல்பாடு, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் மிகை உற்சாகம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த அறிகுறி குழந்தைகளில் மிகவும் பொதுவானது. ஒழுங்கற்ற இயக்கம், மனக்கிளர்ச்சி, பணிகளை முடிக்க சிரமப்படுத்தல், எளிதில் திசைதிருப்பப்படுதல் மற்றும் தூண்டுதல்களை கட்டுப்படுத்த இயலாமை ஆகியவற்றுடன் தொடர்புடையது. இது குழந்தைகளின் கற்றல் மற்றும் சமூகத் தொடர்புகளை பாதிக்கிறது.
ஹைபராக்டிவிட்டியின்(hyperactivity) முக்கிய அறிகுறிகள்
1. அதிகப்படியான உடல் இயக்கம்
குழந்தை அல்லது பெரியவர்கள் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார சிரமப்படுவார்கள். மேலும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பார்கள்.
2. கவனக்குறைவு
பணிகளை செய்யும் பொழுது அல்லது விளையாடும் போது விவரங்களில் கவனம் செலுத்தத் தவறுதல். அதாவது கவனக்குறைவாக இருப்பது. பள்ளி அல்லது வேலை விஷயத்தில் கவனம் செலுத்துவதில் சிரமம் இருக்கும். கவனம் எளிதில் திசை மாறும். விவரங்களை கவனக் குறைவாக கவனிப்பது, உரையாடல்களில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுவது.
3. மனக்கிளர்ச்சி
செயல்களை செய்வதற்கு முன் யோசிக்காமல் செய்யும் பழக்கம். அதிகம் பேசுவது, அமைதி இன்றி தவிப்பது, சுலபமாக திசை திருப்பப்படுவது மற்றும் பொறுமையாக காத்திருக்க சிரமப்படுவது போன்றவை ஏற்படும்.
4. சகிப்புத்தன்மை குறைவு
இவர்களுக்கு சகிப்புத்தன்மை மிகவும் குறைவாக இருக்கும். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட எரிச்சல் அடைவார்கள்.
ஹைபராக்டிவிட்டி(hyperactivity) ஏற்படுவதற்கான காரணங்கள்
ADHDன் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், இதில் மரபியல் காரணிகள் (குடும்ப வரலாறு) ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்ப வரலாற்றில் ADHD இருந்தால் ஏற்பட வாய்ப்புள்ளது. மரபணுக் காரணிகள் ஒருவரின் ADHD நிலையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாதகமான குடும்ப சூழல்கள், வறுமை, கொடுமைப்படுத்துதல் மற்றும் எதிர்மறையான பெற்றோர் வளர்ப்பு போன்ற சமூக மற்றும் குடும்ப சூழல்கள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் காரணமாகவும் ஏற்படலாம்.
அதிர்ச்சிகரமான மூளைக் காயங்கள், முன்கூட்டிய பிறப்பு மற்றும் கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படும் சில வெளிப்பாடுகள் காரணமாகவும் ஏற்படலாம்.
தீர்வுகள்
தூண்டுதல் மருந்துகள் கவனத்தை மேம்படுத்தவும், அதிவேகத்தன்மையை கட்டுப்படுத்தவும் உதவும். நடத்தை சிகிச்சைகள் மனக்கிளர்ச்சியை குறைக்கவும், சுயமரியாதையை மேம்படுத்தவும் உதவும். மேலும் நடத்தை சிகிச்சைகள் உறவுகளை மேம்படுத்தும் உத்திகளை கற்றுக் கொடுக்கிறது.
இப்பிரச்சனை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு, குழந்தைகளை நிர்வகிப்பதற்கான திறன்களை கற்றுக் கொடுக்கிறது. போதுமான தூக்கம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான சமச்சீர் உணவுகள் எடுத்துக் கொள்ளுவது போன்றவை கவனக்குறைவை கட்டுப்படுத்த உதவும்.
உளவியல் ஆலோசனை எனப்படும் சைக்கலாஜிக்கல் கவுன்சிலிங் சிக்கல்களை சமாளிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உணர்ச்சிகளை நிர்வகிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும். அத்துடன் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)