உடல் சுத்தம் தெரியும்; வயிறு சுத்தம் தெரியுமா?

உடல் சுத்தம் தெரியும்; வயிறு சுத்தம் தெரியுமா?

ற்கால உணவு முறை மாற்றம் நம் உடல் நல பாதிப்புகளுக்கு முக்கியக் காரணம் ஆகிறது. உடல் உழைப்பு சுருங்கி இருந்த இடத்திலேயே அனைத்தும் கிடைத்து விடுவதால் உண்ணும் உணவு செரிக்க வழியின்றி மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்ற பாதிப்புகளைத் தந்து நம் சுறுசுறுப்பைக் குறைத்து செயல்திறனைப் பாதிக்கிறது.

அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, பிரச்னை என்றாலும், சந்தோஷம் என்றாலும் நாம் நாடுவது பெரும்பாலும் பிடித்த உணவுகளைத்தான். அளவு தெரியாமல் சிந்தித்தபடி அல்லது கைபேசியில் கவனத்துடன் அளவுக்கு அதிகமாக உண்டு வயிற்றை அலற விடுகிறோம். அலறிய வயிறு கர்புர் என்று கதறி பெருமூச்சு விடுகிறது. அளவை மீறும் எதுவும் ஆபத்தையே தரும்.

அக்காலத்தில் சூரியன் வரும் முன் விழித்து சத்தான தானியங்களின் கஞ்சி குடித்து சூரியன் மறைந்ததும் வீடு வந்து இரவு நிம்மதியுடன் உறங்கினர். அவர்களும் நன்றாக உணவுகளை உண்டார்கள். ஆனால், உண்ட உணவு செரிக்கக் கடும் உழைப்பைத் தந்தனர். மேலும், விரதங்கள் மூலம் அல்லது நாட்டு வைத்தியம் பின்பற்றி அவ்வப்போது வயிற்றைக் காயவைத்து சுத்தமும் செய்தார்கள். இதனால் இறுதி வரை படுக்கையில் முடங்காமல் நடமாடும் உடல்நலனைப் பெற்றனர்.

ஆனால், இன்றோ சத்தற்ற உணவுகள், இருந்த இடம் தேடி வரும் சொகுசான வாழ்க்கை என உடல் நலனைக் கவனிக்கும் நேரத்தை இழக்கிறோம். எந்த நோய் வந்தாலும் எத்தனை மருத்துவரிடம் சென்றாலும் எண்ணற்ற மருந்துகளை எடுத்தாலும் வயிறு சுத்தமின்றி நலம் பெற முடியாது. சரி வயிறு சுத்தமாக என்ன செய்ய வேண்டும்?

* முதலில் வயிற்றை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பசியைக் கவனிக்க வேண்டும்.

* பசித்த வயிறு முழு அளவு நிரம்பாமல் உணவை உண்பது சிறந்தது.

* இரவில் எளிமையான உணவுடன் பழங்களை உண்பது செரிமானம் தந்து வயிற்றைச் சுத்தமாக்கும்.

* முடிந்த அளவு வயிற்றை பாதிக்கும் ரசாயனக் கலப்புமிக்க உணவுகளைத் தவிர்த்து நாட்டுக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.

* வாரம் ஒரு வேளையாவது எதுவும் சாப்பிடாமல் வயிற்றுக்கு ஓய்வு தரலாம். ஓய்வு தரும் வயிறு புத்துணர்வுடன் இயங்கும்.

* ஒவ்வாத தீனிகளை அதன் ருசிக்காக எடுத்துக்கொள்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

* வயிறு சுத்தம் செய்ய மருத்துவர்களை நாடுவதும் சிறந்தது.

தினம் குளித்து வெளி உடலை சுத்தம் செய்யும் நாம், நம் உடலின் உள்ளே இருக்கக்கூடிய உறுப்புகள் நல்முறையில் இயங்க, முதற்கண் நம் வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். நம் வயிறு சுத்தமாக இருந்தால்தான் மனம், உடல் இரண்டுமே சுறுசுறுப்புடன் இயங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com