

நமது நாட்டில் தேவ கனி என்றழைக்கப்படுவது எலுமிச்சைக் (Lemon) கனி ஆகும்.
இந்த பழங்களின் சிறப்பு என்னவென்றால், நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை உடையவை. ஆதலால் தான் ஆன்மீக வழிபாடுகளிலும் சில மாந்திரீக வழிபாடுகளிலும், ஆலய வழிபாடுகளிலும் எலுமிச்சை கனியை பயன்படுத்துகிறார்கள்.
அதே வேளையில் இந்த எலுமிச்சை கனி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. இந்த கனி வைட்டமின் சி சத்து கொண்டது. சற்று அமிலத்தன்மையும் உள்ளடக்கியது. இதன் சாறு (Lemon juice) கலந்த நீர் அருந்துவதால் உடலில் நீர் வறட்சி, நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்னை மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
அத்தோடு உடல் எடை பராமரிப்பு, புத்துணர்ச்சி, இயல்பான சுவாசம் மற்றும் உடலில் உள்ள நோய்க் கிருமிகளை அழித்தல் ஆகிய வேலைகளைச் செய்கின்றது.
கல்லீரல் மற்றும் சிறுநீர் பாதை நன்கு செயல்பட உதவுகிறது.
இதை அருந்துவதால் பல பயன்கள் உள்ளதாக ஹார்வேர்ட் பல்கலைக்கழக மருத்துவர் ஒருவர் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.
இதை அருந்துவதால் ஏற்படும் பயன்கள் என்ன?
உடல் வறட்சி – நம் உடலில் நீர்ச்சத்து நிரம்பி உள்ளது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் பலவீனமாகி விடும். ஆதலால் பற்பல சரும நோய்களும் பின்விளைவாக நம்மைத் தாக்கும். எனவே அவற்றினை தடுக்க எலுமிச்சை சாறு நீர் அருந்தலாம்.
செரிமான பிரச்னை – இந்த நீர் அருந்துவதால் செரிமானம் நன்கு நடைபெறுகிறது. எலுமிச்சைக் கனியில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் செரிமானக் கோளாறுகளை தீர்க்க உதவி புரிகின்றது. அத்தோடு வயிற்று பொருமல், வயிறு உப்புசம் ஆகியவற்றைத் தடுக்கிறது.
சரும ஆரோக்கியம் - வைட்டமின் சி உள்ளதால் உடலில் உள்ள நச்சுத்தன்மையுள்ள கழிவுகள் அகற்றி சருமம் மென்மையாகவும், பளப்பளப்பாகவும் இருக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் தேமல், சிரங்கு மற்றும் படர்தாமரை, கரும்புள்ளிகள், கருவளையம் ஆகியவற்றை வராமல் தடுக்கின்றது.
உடல் எடை - ஒரு சிலர் அதிக எடையுடன் நடக்கவே சிரமப்படுவார்கள். நடக்கும் பொழுது அவர்களுக்கு மூச்சிறைக்கும். அப்படிப்பட்ட நபர்கள் உடல் எடையைக் குறைக்க எலுமிச்சை சாறு நீர் அருந்தலாம். விரைவில் நல்ல பலன் கிடைக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு சத்தினை அகற்றுவதோடு, உடலில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களையும் அகற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.
சுவாசம் - சிலருக்கு சுவாசம் இயல்பாக இருக்காது. அப்படிப்பட்ட நபர்கள் இந்த நீரை அருந்தி வந்தால் இயல்பான சுவாசம் நடை பெறும். அதோடு வாய் நாற்றம், பற்களின் இடையே தங்கியுள்ள உணவு துணுக்குகள் ஆகியவற்றை அகற்றி வாய் ஆரோக்கியம் ஏற்படுகிறது.
இவ்வளவு பயன்கள் சொல்லப்படுகிறதே! எப்படி அதை தயாரிப்பது என்று சொல்ல வில்லையே என ஒரு வாசகர் கேட்பது புரிகிறது. இதோ அதற்கான பதில், நீரில் அரை மூடி எலுமிச்சைச் சாறு, சிறிய இஞ்சி துண்டு, கூடவே சிறிய அளவு மல்லித்தழை மற்றும் புதினா இலைகள் சில சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிய பின் சற்று ஆறவிட்டு அதனில் சில துளிகள் தேன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மேற்கண்ட பலன்கள் நிச்சயமாக நடைபெறும்.
தேவகனி நம் தேகத்தின் ஆராக்கியத்திற்கே!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)