

நமது வீடுதான் நமக்குப் பாதுகாப்பான இடம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணுயிரிகளும், வேதிப்பொருட்களும் நம் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல சிதைக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பூஞ்சைகள் முதல் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வரை உங்கள் வீட்டில் ஒளிந்திருக்கும் அபாயங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. சுவர்களில் வளரும் கரும்பூஞ்சை:
ஈரப்பதம் உள்ள சுவர்கள், குளியலறை மூலைகள் மற்றும் ஏசி வென்ட்களில் வளரும் பூஞ்சைகள் நச்சுயிரிகள் ஆகும். இவை காற்றில் வெளியிடும் நுண் துகள்கள் ஆஸ்துமா, மூச்சுத்திணறல், ஒவ்வாமை மற்றும் தீராத தலைவலியை உண்டாக்கும். இதற்குத் தீர்வாக வீட்டின் ஈரப்பதத்தை 50% கீழ் வைத்திருக்க வேண்டும். கசிவுள்ள குழாய்களை உடனே சரி செய்வைத்து சிறந்தது.
2. மெத்தைகளில் வாழும் தூசிப் பூச்சிகள்:
நமது மெத்தைகள், தலையணைகள் மற்றும் தரைவிரிப்புகளில் லட்சக்கணக்கான தூசிப் பூச்சிகள் வாழ்கின்றன. இவை மனிதனின் இறந்த சருமச் செல்களை உண்டு வாழ்கின்றன. சில சமயங்களில் அதிகாலையில் தும்மல், சரும அரிப்பு மற்றும் கண்கள் சிவப்பாவதற்கு இவைதான் முக்கிய காரணம். எனவே, வாரத்திற்கு ஒருமுறை படுக்கை விரிப்புகளை கை தொடுமளவு சூடாக உள்ள நீரில் துவைக்கலாம்.
3. சமையலறை ஸ்பாஞ்ச்:
ஆராய்ச்சிகளின்படி, சமையலறை ஸ்பாஞ்சில்தான் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு நச்சுத்தன்மை மற்றும் வயிற்றுப் போக்குக்கு வழிவகுக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஸ்பாஞ்சை மாற்றவும் அல்லது பயன்படுத்திய பின் நன்கு உலர வைக்கவும்.
4. ஆவியாகும் கரிம சேர்மங்கள்:
பெயிண்ட், நறுமணத் தெளிப்பான்கள் மற்றும் தரை சுத்தம் செய்யும் திரவங்களில் இருந்து வெளியேறும் இரசாயனங்கள் காற்றில் கலந்து விடுகின்றன. இவை நீண்ட கால அடிப்படையில் கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தலாம். வீடு காற்றோட்டமாகவும் சூரிய ஒளி உள்ளே வருமாறும் வீட்டின் சன்னல்களைத் திறந்து வைக்கலாம்.
வீடு என்பது பாதுகாப்பான இடம் என்றாலும், நம் கவனக்குறைவால் அது ஆபத்தான இடமாக மாறிவிடலாம். சிறிய மாற்றங்கள் மற்றும் சுத்தமான பழக்கவழக்கங்கள் மூலம் இந்த மறைமுக ஆபத்துகளை எளிதாக தவிர்க்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)