

இன்றைய காலத்தில் அல்சைமர் மற்றும் டிமென்சியா போன்ற மறதி நோய்கள் பொதுவான ஒன்றாக மாறிவிட்டன. பிரிட்டனைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜோசப் ஜெபெல்லி என்பவர் நீண்ட காலமாக ஆய்வு செய்து, இந்த நோய்களுக்கான ஒரு எளிய தீர்வை கண்டறிந்துள்ளார். அவர் எழுதியுள்ள 'ஓய்வில் மூளை' என்ற புத்தகத்தின் மூலமாக மறதி நோய்களைப் பற்றி விவரித்துள்ளார். இந்த நோய்களுக்கு சிறந்த தீர்வு ஓய்வு எடுப்பது தான் என்பது அவரது கருத்தாகும்.
ஓய்வெடுப்பது என்பது 'வீட்டில் தொலைக்காட்சியை படுத்து கொண்டே படம் பார்ப்பது அல்லது அமைதியாக ஒரு ஆண்ட்ராய்டு மொபைலை நோண்டிக் கொண்டு இருப்பது' அல்ல. ஓய்வு என்பது மிகவும் அமைதியான ஒரு இடத்தில் இயற்கையை வேடிக்கை பார்ப்பது, பசுமையான சூழலில் எதையும் நினைக்காமல் நடப்பது, கடற்கரையில் அமர்ந்து அலைகளை வேடிக்கை பார்ப்பது போன்றவை தான்.
மூளைக்கு அதிக வேலையை கொடுக்காமல் அதன் வேலையை குறைப்பது, மிகவும் அமைதியான நிலையில் இருப்பது, மனதினை சாந்தமாக வைத்திருப்பது, சிறிய நேரம் படுத்து உறங்குவது போன்ற செயல்கள் தான் உண்மையான ஓய்வாகும்.
நமது மூளையில் இரண்டு 'வலையமைப்புகள்' இருவேறு நிலையில் இயங்குகின்றன. அதில் ஒன்று நாம் ஒரு வேலையைச் செய்யும்போது செயல்படும் 'செயல்பாட்டு வலையமைப்பு' (Executive Network). மற்றொன்று, நாம் ஓய்வாக இருக்கும்போது தானாகவே இயங்கும் 'இயல்புநிலை வலையமைப்பு' (Default Mode Network - DMN). இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், நாம் வேலை செய்யாத போது தான் மூளையின் 20% பகுதி சுறுசுறுப்பாகிறது.
இந்த இயல்புநிலை வலையமைப்பு தான் நமது படைப்பாற்றல், நினைவாற்றல் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனை மேம்படுத்துகிறது. உங்களின் கற்பனைத் திறன் அதிகரிக்கவும், சிந்திக்கவும் இந்த வலையமைப்பு செயல்படுகிறது. நம் ஓய்வின் போது மூளை தன்னைத்தானே பழுதுபார்த்து, புதிய நரம்பிணைப்புகளை உருவாக்கி பலப்படுத்துகிறது.
இது பற்றி ஆய்வு செய்த டாக்டர் ஜெபெல்லி தினமும் 5 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார். அவரது பெற்றோர்கள் கடுமையாக உழைத்து, பின் நாட்களில் மனஅழுத்தம், மறதி நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததை அவர் கண்டறிந்தார். அதிகப்படியான வேலைப்பளு மூளையில் ஏற்படுத்தும் விளைவுகள், மிகவும் கடுமையாக இருக்கும் என்று ஜெபெல்லி விளக்குகிறார். மேலும், அதிகப்படியான வேலைப்பளு காரணமாக ஆண்டுக்கு 745,000 பேர் உயிரிழக்கின்றனர். இது 2000-ஆம் ஆண்டிலிருந்து 29% உயர்ந்துள்ளது. 2019-ஆம் ஆண்டிலிருந்து 39% அதிகரித்துள்ளது.
1. அதிகப்படியான வேலைப்பளு மூளையின் முன்புறணியை மெலிதாக்குகிறது. இதனால் மூளையின் செயல்பாடுகள் குறைய தொடங்குகிறது. இது ஞாபகமறதி மற்றும் மந்த நிலையை ஏற்படுத்துகின்றன. அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களுக்கு மூல காரணங்களாக இருக்கின்றன.
2. ஆபத்தான காலங்களில் தப்பிக்க சொல்லி மூளையை தூண்டும் பணியை செய்யும் அமிக்டாலா என்ற பகுதி, அதிக வேலைப்பளு கொண்டவர்களின் மூளையில் விரிவடைகிறது. இதனால், அவர்கள் எப்போதும் பதட்டமாகவும் அமைதி இன்றியும் காணப்படுகிறார்கள். இது குறுகிய கால நினைவாற்றலுக்கு ஆதரவளிக்கும் ஹிப்போகேம்பஸ் பகுதியைச் சுருங்கச் செய்கிறது.
3. அதிக வேலை, நாள்பட்ட மன அழுத்தம் காரணமாக நியூரான்கள் அவற்றின் கிளை போன்ற அமைப்புகளான டென்ட்ரைட்டுகளை இழக்கின்றன. இவை தகவல் தொடர்புக்கு முக்கியமானவை. இவற்றை மீட்டெடுப்பது கடினமான செயல், அவற்றின் இழப்பு நினைவாற்றலை இழப்பதற்கு காரணமாகிறது. இது மூளையை விரைவில் முதுமையடையச் செய்கிறது. இதனால் அல்சைமர், டிமன்ஷியா போன்ற மறதி நோய்கள் ஏற்படுகின்றன.
அதேநேரம் சராசரியான உடற்பயிற்சி மற்றும் கற்பனைகள் பகல் கனவு காண்பது போன்றவை. உங்களின் நினைவாற்றல் திறனை மேம்படுத்துகின்றன. மேலும், மனச்சோர்வு மற்றும் மறதிநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் நீங்கள் குறைக்கிறீர்கள். இந்த கடினமான சூழலில் இருந்து உங்கள் மூளை மீண்டுவர மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்று டாக்டர் ஜெபெல்லி கூறுகிறார்.
இறுதியாக டாக்டர் சொல்ல வருவது 'எப்போதும் ஓய்வின்றி உழைக்க அவசியமில்லை. ஓய்வு காலம் உங்களின் மூளை செயல்பாடுகளை மீட்டெடுக்கும்' என்பதை உணர்ந்து கொண்டால் போதுமானது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)