

உடலை தாங்கும் பாதங்கள் உறுதியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நம்மில் பலர் உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, பாதத்திற்கு குடுப்பதில்லை. குறிப்பாக பாதவலியைக் கூட கால்வலி என்றே வகைப்படுத்தி கையில் இருக்கும் மருந்துகளை போட்டு சமாளிப்பர்.
சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களில் பாத பராமரிப்பும் ஒன்று. சிறு கல் குத்தினாலும் ஏற்படும் வலி அவர்களால் தாங்க முடியாததாக இருக்கும்.
அதே போல் கருமை படர்ந்த கணுக்கால், வெடிப்பு நிறைந்த பாதம், பழுப்பேறிய நகங்கள், செருப்பு அணிவதால் உண்டாகும் கருமை என பாத பிரச்சனைகள் பலவிதம்.
இவற்றை ஆரம்பத்திலேயே கவனித்து பராமரிக்க பிரச்சனைகளை கொடுக்காது. சில எளிய பராமரிப்பு விஷயங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாதம், உள்ளங்கால் வறண்டு இருந்தால் 4 சொட்டு கிளிசரின், 4 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து தூங்கச் செல்லும் போது நகம், விரல்கள், பாதம் முழுவதும் தடவி, காய்ந்தவுடன் சாக்ஸ் அணிந்து உறங்கலாம். இதனால் பாதம் ஈரப்பதத்துடன் வறட்சியின்றி பளபளப்பாக இருக்கும்.
நீண்ட பிரயாணம் முடிந்து வந்த பிறகு பாத வீக்கம், வலி இருக்கும். இதை போக்க வெதுவெதுப்பான நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அந்த தண்ணீரில் பாதங்களை வைத்திருந்து எடுக்க கால் வலி சரியாகும். கருமை படர்ந்த சரும நிறமும் இயல்பான நிறத்திற்க்கு வரும்.
குளிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணைய் கலந்து நன்றாக தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.
சிறிது கற்றாழை ஜெல்லுடன் கடலை மாவைக் கலந்து மிக்ஸியில் அரைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உள்ளங்கால், பாதம், கணுக்கால் முழுவதும் தேய்த்துக் கழுவ காயத்தால் ஏற்பட்ட தழும்புகள், கருமை மறைந்து சருமம் இயல்பான நிறத்துக்கு மாறும்.
நான்கு துளி விளக்கெண்ணெய்யை உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு நன்றாக சூடு பறக்க தேய்த்து, இரண்டு பாதங்களிலும் தேய்த்து வர பாதம் மினுமினுப்பாக மாறும்.
மாதம் இருமுறை வெள்ளை எள்ளை அரைத்து பாதம், நகங்களில் பத்து போல போட்டு கழுவவும். இது நகத்தின் இடுக்குகளில் படிந்துள்ள மண், அழுக்குகளை அகற்றி நல்ல பளபளப்பை கொடுப்பதுடன் வெடிப்பு வராமலும் பாதுகாக்கும். பாலில் நனைத்த பஞ்சு கொண்டு நகத்தில் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.
கால இடைவெளியில் பெடிக்யூர், மெனிக்யூர் செய்து கொள்ள நக சொத்தை, பாதங்கள், விரல்களில் சுருக்கம், வீக்கம் போன்றவை வராது. பாதங்கள் மென்மையாக பட்டு போல் கருமை நீங்கி நன்றாக இருக்கும்.
கால்வலி, பாத பிரச்சனைகளுக்கு நாம் போடும் காலணிகளும் காரணமாக அமைந்து விடுகிறது. சரியான அளவில், தரமான காலணிகளை தேர்ந்தெடுத்து அணிய பெரும்பாலான பாத பிரச்சனைகள் வராமல் நாம் தவிர்க்க முடியும். நீண்ட நாட்களுக்கு ஒரே செருப்புகளை அணிவதும், பிளாஸ்டிக் செப்பல்கள், அலங்கார காலணிகளை தவிர்த்தல் நல்லது.
நைட் கிரீம் தடவி பாதங்களை பாதுகாக்க பாதங்கள், நகங்கள், விரல்கள் பளபளப்புடன் மென்மையாக இருக்கும்.
சத்துள்ள உணவுகளும் சரும பராமரிப்புக்கு உதவும். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் நம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து, நம்மை இளமையாக வைத்திருக்க உதவும்
இவ்வாறு பல்வேறு வழிகளில் நம் பாதங்களை நாம் பராமரிக்க பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.
இவை யாவும் நான் வழக்கமாக வீட்டில் செய்து பலன் பெறுவதை எழுதியுள்ளேன்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference