கால நிலையில் மாற்றம் ஏற்படும்போது நமது உடல் நிலையிலும் மாற்றம் உண்டாவது சகஜம். காலநிலை மாற்றத்தின் தொடர்ச்சியாக புதுப்புது வகையில் சில நோய்களும் உருவாகி நம் உடலைத் தாக்க ஆரம்பிக்கும். அவற்றை எதிர்கொள்ள நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் எப்பொழுதும் வலு உள்ளதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் இயற்கை முறையில் பின்பற்ற வேண்டிய சில வழி முறைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
* நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் குணம் துளசிக்கு உண்டு. தினமும் காலையில் துளசி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு டீ தயாரித்து அருந்துவது அல்லது சில இலைகளை வாயிலிட்டு மென்று தின்பது நல்ல பலன் தரும்.
* மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற கூட்டுப் பொருள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. ஒரு டீஸ்பூன் மஞ்சளை சூடான பாலில் கலந்து அருந்துவது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
* சிறப்பான செரிமானத்துக்கு உதவுவது இஞ்சி. இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
* சிறிதளவு தேன் சேர்த்து இஞ்சி டீ தயாரித்து அருந்தலாம் அல்லது தினமும் சிறு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்று தின்னலாம்.
* அந்தந்த சீசனில் விளையக்கூடிய பழங்களையும் காய்கறிகளையும் ஃபிரஷ்ஷாக உண்ணும்போது அவற்றிலுள்ள வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்ய சிறந்த முறையில் உதவும்.
* யோகர்ட்டில் இயற்கையாகவே ப்ரோபயோடிக்ஸ் அதிகம் நிறைந்துள்ளன. இவை சிறப்பான செரிமானத்துக்கு உதவிபுரிந்து நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன.
* ஆழ்ந்த மன நிறைவோடு மெடிடேஷன் செய்யும்போது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அடக்கப்பட்டு ஒருவித அமைதியும் நிம்மதியும் உண்டாகும். இதுவும் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவும்.
* ஜிலோய் (Giloy) என்றொரு மூலிகை ஆயுர்வேதத்தில், ‘அம்ருதம்’ என்று கூறப்பட்டு, அது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும் நம்பப்படுகிறது.
இதை எவ்வளவு உண்ணலாம் எப்படிப் பயன்படுத்தலாம் என்ற விவரங்களுக்கு உரிய மருத்துவரை கலந்து ஆலோசனை செய்வது அவசியம்!