ஒவ்வொருவரின் உடலிலும் ஒவ்வொரு வயதிலும், ஹார்மோன் மாற்றங்களால் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்படும். அவற்றுக்கு ஏற்றவாறு எப்படி கவனிப்பை தர வேண்டும் என்பது முக்கியம்.
பதின்பருவத்தில் மாதவிடாய் துவங்கும் போது பெண் குழந்தைகளின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களால் மார்பக வளர்ச்சி ஆரம்பிக்கும்.
இந்த மாற்றங்களால் பெண் குழந்தைகளின் மனதில் பயம், குழப்பம், கூச்சம், தயக்கம் போன்ற கலவையான உணர்வுகள் தோன்றும். இதை கவனித்தாலும் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் பெற்றோரும் அப்படியே விட்டு விடுவார்கள்.
இந்த வயதில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு முக்கியம். உடல் மாற்றம், உருவம் தொடர்பாக பள்ளிகளில் ஏதாவது பிரச்னை எதிர்கொள்கிறார்களா என்பதையும் கேட்க வேண்டும். உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றம் இயல்பானது என்பதை குழந்தைக்கு புரிய வைக்க வேண்டும்.
டீன் ஏஜில் உடல் வளர்ச்சியோடு மனவளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இப்போதெல்லாம் 11 முதல் 12 வயது வரை உள்ள பெண்கள் பருவம் அடைந்து விடுகின்றனர். மார்பக வளர்ச்சி ஏற்பட துவங்கி விடுகிறது. அது குறித்து பேச அவர்கள் தயக்கப்பட்டாலும் பெண்களின் தாய் அதை எடுத்துச் சொல்லி அதற்கேற்ற உள்ளாடையை அணிவிக்க சொல்லி குற்ற உணர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் அவர்கள் ஓடி ஆடி விளையாடும் போது கச்சிதமான உள்ளாடைகள் இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். உள்ளாடை அணியும்போது மார்பக வலி, கழுத்து வலி குறையும். இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம். என்னவெனில் மார்பக வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளாடைகளை மாற்ற வேண்டும் என்பதுதான்.
உள்ளாடை அணியும்போது மேற்கூறிய பாதுகாப்பு விஷயங்களை கடைபிடிக்கும் போது கூன் முதுகுடன் நடக்கும் பழக்கத்தையும் தவிர்க்கலாம். இதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் ஏற்படும். பாதுகாப்பாகவும் உணர்வார்கள்.
பெண் குழந்தைகள் எந்த வகையான மன ரீதியான பிரச்னைகள் எதிர்கொள்கிறார்கள் என்று பார்க்கலாம்.
பெண் குழந்தைகளின் தன்னம்பிக்கை குறைந்துவிடும். சக வயது குழந்தைகளுடன் சகஜமாக பழகுவதில் தயக்கம் ஏற்படும். இருபாலரும் படிக்கும் பள்ளி என்றால் எதிர்பால் இனத்தவர் கிண்டல் செய்தால் அதன் பின் இயல்பாக இருக்க முடியாமல் பய உணர்வு வந்து விடும்.
மாணவர்கள் இருக்கும் இடத்தை கடந்தாலே யாராவது கிண்டல் கேலி செய்வாரோ என்ற பதட்டம் வரும். இதை கவனிக்காமல் அப்படியே விட்டால் பயம், பதற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகள் எந்த ஒரு செயலையும் செய்வதையும் தடுக்கும்.
தடகள விளையாட்டில் 10 வயது வரை ஆர்வத்துடன் பங்குபெற்ற குழந்தை அதன்பின் விளையாட தயங்கும். பள்ளி நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதில் ஆர்வம் ஏற்படும். ஆனால், பல குழந்தைகள் உடல் மாற்றத்தை யாராவது கேலி செய்வாரோ என்ற தயக்கம் மற்றும் பயத்திலேயே கலந்து கொள்ள மாட்டார்கள்.
டீன் ஏஜ் குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அவர்களுக்கு உள்ளேயே வைத்து தாழ்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்வார்களே தவிர பெற்றோரிடம் சொல்ல மாட்டார்கள். இன்னொரு புறம் அதற்கான இடத்தை பெற்றோரும் தருவதில்லை.
பொருத்தமான உள்ளாடைகள் அணிவது குழந்தைக்கு எந்தளவு தன்னம்பிக்கை தரும் என்பதை பெரும்பாலும் பெற்றோர்கள் உணர்வதில்லை. சிலவகை உடைகளை அணிவதில் புதிதாக ஒன்றை கற்பதில் குழந்தைக்கு தயக்கம் இருக்கிறது என்றால் பொருத்தமான உடை அணிவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.