

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு அருகே ஆத்தூரில் உள்ள நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு செம்பருத்திப் பண்ணை, உள்ளூர் சந்தைக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் 'இதழ்' (Idhazh) என்ற ஆரோக்கியமான செம்பருத்தித் தேநீரை உற்பத்தி செய்து வருகிறது.
1961 ம் ஆண்டு ஆத்தூரில் 34 ஏக்கர் பரப்பளவில் தமிழக தோட்டத் துறை பண்ணை உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக செம்பருத்தி தோட்டத்தில் 45 வகையான செம்பருத்தி பூக்களை பயிரிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையால் நிர்வகிக்கப்படும் இங்கு கைகளால் பறிக்கப்படும் செம்பருத்தி பூக்களை சூரிய ஒளியில் உலர்த்தி அதனுடன் உலர்ந்த இஞ்சி, மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் உலர்ந்த நெல்லிக்காய் கலந்து பவுடராக அரைத்து தேநீர் தூள் பக்குவத்தில் தமிழக தோட்டக்கலை நிறுவனங்களான தன்ஹோடா (TANHODA) மூலம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்கிறது.
செம்பருத்தித் தேநீர் (Hibiscus tea) அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளின் காரணமாக, உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. காஃபின் இல்லாத, இனிமையான புளிப்புச் சுவையுடன், சுவை நிரம்பிய, பிரகாசமான மாணிக்கச் சிவப்பு நிறத் தேநீரை செம்பருத்தி சப்தரிஃபா செடியின் உலர்ந்த புல்லி இதழ்களை (இதழ்களுக்குக் கீழே உள்ள பகுதி) கொண்டு தயாரிக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகள் முதல் தென்கிழக்கு ஆசியா வரை உலகெங்கிலும் உள்ள மக்கள், செம்பருத்தி தேநீரை அதன் சுவைக்காக மட்டுமல்லாமல், அதன் வெளிப்படையான குணப்படுத்தும் ஆற்றலுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். செம்பருத்தி தேநீர் அருந்துவதால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
இந்தத் தேநீரில் ஆந்தோசயனின்கள் மற்றும் ஃபீனாலிக் அமிலங்கள் மற்றும் இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செறிந்துள்ளன. இது, உடலின் செல்களைச் சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது . தினமும் செம்பருத்தி தேநீர் அருந்துவது, இரத்த அழுத்தத்தை குறைக்கும். இந்தத் தேநீரில் உள்ள பொருட்கள் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ஆகிய இரண்டு வகை இரத்த அழுத்தங்களையும் குறைக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு ஆய்வின்படி, நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செம்பருத்தி தேநீர் இரத்தக் கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடுகளின் அளவை திறம்பட குறைக்க உதவுகிறது என உறுதிப்படுத்தியுள்ளது.
செம்பருத்தி தேநீர், எல்.டி.எல் (கெட்ட கொழுப்பு) மற்றும் டிரைகிளிசரைடுகளைக் குறைக்கக்கூடும் என்றும், சில சமயங்களில் எச்.டி.எல் (நல்ல கொழுப்பு) அளவை அதிகரிக்கக்க உதவும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. குறைந்த அளவிலான எல்.டி.எல் மற்றும் டிரைகிளிசரைடுகள், இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதோடு தொடர்புடையவை.
செம்பருத்தி தேநீரை, வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகவும், வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவக்கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
செம்பருத்தித் தேநீரில் கலோரிகள் இல்லை. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து உட்கொள்ளும்போது, இது மிதமான எடை இழப்புக்கு உதவக்கூடும் என்கிறார்கள். செம்பருத்தித் தேநீர் அழற்சிக் அறிகுறிகளை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதய நோய், மூட்டுவலி மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற பல நாள்பட்ட நோய்களுக்கு அழற்சியே அடிப்படையாக உள்ளது.
செம்பருத்தி தேநீர் அதிக கொழுப்புள்ள உணவுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கல்லீரலைப் பாதுகாப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. செம்பருத்தியில் உள்ள சேர்மங்கள் சில பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுப்பதாக கண்டறிந்துள்ளனர்.
செம்பருத்தித் தேநீரில் காஃபின் இல்லாததால், இது உடலில் நீர்ச்சத்தை சீராக வைத்திருக்க உதவும். மேலும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற நுண் கனிமங்களை வழங்கி, திரவச் சமநிலைக்கு உதவுவதோடு, நரம்பு மற்றும் தசை செயல்பாட்டையும் ஆதரிக்கிறது. ஹார்மோன் சமநிலை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு செம்பருத்தி உதவும். அதில் மாதவிடாய்க்கு முந்தைய நோய்அறிகுறி (PMS) மற்றும் மாதவிடாய் நிறுத்தம் ஆகியவற்றின் அறிகுறிகளுக்குச் சிகிச்சை அளிப்பதும் அடங்கும்.
செம்பருத்தி தேநீர் பொதுவாக பல ஆரோக்கிய நலன் மற்றும் பாதுகாப்பானதாக இருந்தாலும், எல்லோரும் இதை அதிக அளவில் அருந்தக்கூடாது; ஆய்வுகள் பொதுவாக ஒரு நாளைக்கு 2-3 கோப்பை செம்பருத்தி தேநீர் (சுமார் 16-24 அவுன்ஸ் / சுமார் 500-700 மிலி) 4-6 வாரங்கள் வரை அருந்துமாறு பரிந்துரைக்கின்றன. நேரத்தைப் பொறுத்தவரை, உணவுக்குப் பிறகோ அல்லது உணவுகளுக்கு இடையிலோ அருந்துவது சரியாக இருக்கும் என்கிறார்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)