

நாம் கடந்துக் கொண்டிருக்கும் இந்தக் கோடைக்காலத்தில் உடலின் ஆற்றல், நீரேற்றம் என்று நம் ஒட்டுமொத்த நல்வாழ்வைக் காப்பதில் நம்முடைய உணவுத் தேர்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும் அசைவ உணவுகள் என்றால் சிலருக்கு இந்தக் காலகட்டங்களில் சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும்; அதை எப்படி சமாளிக்கலாம் என்பதை பார்ப்போம்.
எளிதில் கிடைக்கும் அசைவ உணவுகள்:
மீன், கொழுப்பற்ற கோழி இறைச்சி, முட்டைகள் போன்ற அசைவ உணவுகள் கோடைக்காலத்தில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. காரணம் பிற கனமான சிவப்பு இறைச்சிகளுடன் ஒப்பிடும்போது அவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை.
மீன் வகைகளில் குறிப்பாக ஒமேகா-3 (omega-3) கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை; இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் குளிர்ச்சியான புரதங்களையும், ஆரோக்கியமானக் கொழுப்புகளையும் வழங்குகின்றன. அதே சமயம் வெப்பத்தில் ஒருவரை மந்தமாக உணரவைக்கும், வயிற்றில் உணரப்படும் கனமான தன்மையையும் அவை தவிர்க்கின்றன.
நாட்டுக்கோழி போன்ற இறைச்சிகள் செரிமான மண்டலத்திற்குச் சுமையாக இல்லாமல் உடலுக்கு ஆற்றலை வழங்கும் கொழுப்பற்ற புரத (Lean protein) மூலத்தை வழங்குகின்றன. இறுதியில் பல்துறைப் பயன்பாடுள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டைகள் வெப்பமான காலநிலையில் ஆற்றல் அளவைத் தக்கவைக்க உதவும் அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் (amino acids), வைட்டமின்களையும் வழங்குகின்றன.
இந்த உணவுகள் சில இடங்களுக்கு ஏற்ப மாறுபடுமா?
இப்படிப்பட்ட உணவுகளுக்கானப் பரிந்துரைகள் அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் தன்மை, சில சமையல் மரபுகளைப் பொறுத்து மாறுபடலாம். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமான கடல் மீன்கள் (Fresh fish) சுலபமாகக் கிடைப்பதால் இயல்பாகவே அதற்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.
அதே சமயம் மாநிலத்தின் உள் பகுதிகளில் வசிப்பவர்கள் கோழி இறைச்சி அல்லது முட்டைகளை அதிகம் எதிர்பார்க்கலாம். இந்த வேறுபாடு கலாச்சார ரீதியானது மட்டுமல்ல, நடைமுறை ரீதியானதும்கூட. காரணம் உள்ளூரில் கிடைக்கும் உணவுகளை உட்கொள்வது சிறந்த தரத்தையும் அந்தந்தப் பருவத்திற்கு ஏற்ற பொருத்தத்தையும் உறுதி செய்கிறது.
கோடைக்காலத்தில் இலகுவான புரதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்குக் காரணம் உடல் குளிர்ச்சியாக இருக்கத்தான். சாப்பிடுவதற்குக் கனமாக உணரும் இறைச்சிகள் செரிமானம் ஆவதற்கு அதிகப்படியான வளர்சிதை வெப்பத்தை வெளியேற்றும்; இது இந்தக் கால கட்டத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டியது.
அப்போ சைவ பிரியர்கள்?
சைவ வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்களுக்கு தாவர அடிப்படையிலான மாற்று உணவுகள் மூலம் இதே போன்ற ஊட்டச்சத்து நன்மைகளைப் பெறலாம்.
பயறு, கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள் புரதம், நார்ச்சத்தை வழங்குகின்றன. அதே சமயம் டோஃபு (tofu), டெம்பே (tempeh) போன்ற சோயா பொருட்கள்; இறைச்சி புரதங்களில் கிடைக்கும் அமினோ அமில அமைப்பைக் கொண்டுள்ளன.
நட்ஸ் அல்லது விதைகள் போன்ற பொருட்களில் குறிப்பாக பாதாம், ஆளி விதைகளில் (flax seeds) மீன்களில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகின்றன.
கீரை வகைகள், பருவகால காய்கறிகளில் தேவையான நீரேற்றம், தாதுக்கள் (minerals), பின் வெப்ப அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைச் தருகின்றன.
இந்தச் சைவ உணவுகளைத் தெளிவாக தேர்வு செய்வதன் மூலம்; அசைவ உணவுகள் வழங்கும் புரதம், ஆற்றல், குளிர்ச்சியான ஊட்டச்சத்துக்களை ஒருவர் அடையலாம். இது கோடைக்காலம் முழுவதும் அனைவருக்கும் ஒரு ஆரோக்கியமான, புத்துணர்ச்சியான உணர்வை உறுதி செய்கிறது.