காய்ச்சல் வந்தாலே நம்மால் இயல்பான நிலையில் இருக்க முடியாது. உடல்சோர்வு, பலவீனம், உடல்வலி என அனைத்தும் நம்மை சூழ்ந்துக்கொள்ளும். இதனால் காய்ச்சல் என்பது அனைவராலும் வெறுக்க கூடிய ஒன்றாக தான் இருக்கும்.
உண்மையில் காய்ச்சல் நம் உடலை பாதுகாக்க தான், என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம். அதிகமான காய்ச்சலுக்கு மருத்துவரை அணுகுவது முக்கியம் என்றாலும், லேசான காய்ச்சல் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அப்படி என்ன நன்மைகள் என்றுதானே யோசிக்கிறீர்கள்? அதை பற்றிய பதிவுதான் இது.
காய்ச்சலின் நன்மைகளை விளக்கும் ஆய்வுகள்:
1. இம்யூனாலஜி மற்றும் செல் உயிரியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், காய்ச்சல் நமது உடலிற்கு நன்மை அளிப்பதாக கணடறித்துள்ளனர். அதன் படி,
காய்ச்சலின் போது உடல் வெப்பநிலை அதிகரிப்பதால் எலும்பு மஜ்ஜை அதிக வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய தூண்டுகிறது. இது நமது உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலம் , பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து தாக்குகிறது.
பல நோய்க்கிருமிகள் உடலின் இயல்பான வெப்பநிலையான 37°C (98.6°F) ஐ விரும்புகின்றன. காச்சலின் போது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், இந்த நுண்ணுயிரிகளின் அளவு குறைந்து விடும்.
2. ஜர்னல் ஆஃப் வைராலஜியின் ஆராய்ச்சி,
அதிக உடல் வெப்பநிலை, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போன்ற சில வைரஸ்களின் வளர்ச்சியை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அவற்றின் வளர்ச்சியைக் குறைப்பது நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு தற்காப்பை அளிக்கும் என்பதை கண்டறிந்துள்ளது.
3. ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேஷனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி,
காய்ச்சலால் நமது உடலில் உண்டாகும் வெப்பநிலையானது நியூட்ரோபில்ஸ் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்திறனை மேம்படுத்தி, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
4. நேச்சர் ரிவியூஸ் மாலிகுலர் செல் உயிரியலில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின்படி,
காய்ச்சலின் போது உண்டாகும் வெப்பநிலை வெப்ப அதிர்ச்சி புரதங்களைத் தூண்டுவதால், இதன் மூலம், காய்ச்சல் தொற்று அல்லது வீக்கத்தால் சேதமடைந்த செல்கள் மிகவும் திறமையாக சரிசெய்யப்படுவதை உறுதிசெய்து, விரைவாக மீட்க உதவுகிறது.
5. ஜர்னல் ஆஃப் டாக்ஸிகாலஜி அண்ட் என்விரான்மெண்டல் ஹெல்த் என்ற இத,
காய்ச்சலின் போது உண்டாகும் அதிக வியர்வை உடலில் இருந்து சில நச்சுக்களை அகற்ற உதவும் என்று கூறுகிறது. எனவே, காய்ச்சல் காலத்தில் நமது உடலில் சுரக்கும் வியர்வை தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றுவதால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இது பங்களிப்பதாக கூறுகிறது.
6. ஜர்னல் ஆஃப் எக்ஸ்பெரிமென்டல் மெடிசின் ஆய்வின்படி,
காய்ச்சல் வெப்பநிலை டி செல்கள் மற்றும் பி செல்கள் போன்ற நோயெதிர்ப்பு நினைவக செல்கள் உருவாக்குவதை மேம்படுத்துவதாக கூறுகிறது. எனவே இந்த ஆய்வின்படி, காய்ச்சல் வருவது உண்மையில் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை எதிர்கால நோய்த்தொற்றுகளில் இருந்து சிறப்பாகப் பாதுகாத்து, நீண்ட காலத்திற்கு உடலை வலிமையாக்கும் என்பதை விளக்குகிறது.
இது போன்ற ஆய்வுகளில் இருந்து காய்ச்சல் பல நன்மைகளை அளிக்கிறது என்பது உறுதியாகிறது. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் காய்ச்சல் வந்தால் மருத்துவரின் ஆலோசனையும் முக்கியமே. காய்ச்சல் வந்தால் நன்மை என்று கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். அதிக காய்ச்சல் இருக்கும் போது மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிக மிக அவசியம்.