இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நள்ளிரவு வரை முழித்திருப்பது, பலருக்கும் ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது. ஓடிடி தளங்களில் தொடர்களைப் பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவது என நமது தூக்கத்தை நாமே கெடுத்துக் கொள்கிறோம்.
காலையில் எழுந்து கடினமாக உடற்பயிற்சி செய்தும், கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்தும் உடல் எடை குறையவில்லையே என பலரும் புலம்புவதைக் கேட்டிருப்போம். இதற்கு அடிப்படை காரணமே நமது தூங்கும் நேரம் தான் என்பதை அவர்கள் உணர்வதில்லை. தூக்கத்திற்கும் நமது உடலின் ஆரோக்கியத்திற்கும் உள்ள நெருக்கமான தொடர்பு குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உடலின் இயற்கைக் கடிகாரம்!
நமது உடலுக்குள் ஒரு பயாலஜிக்கல் கடிகாரம் இயங்கி வருகிறது. இரவு பத்தரை மணியைத் தாண்டியவுடன் நமது உடலின் செரிமான மண்டலம் தனது வேகத்தைக் குறைத்து ஓய்வு நிலைக்குச் சென்றுவிடும். அந்த நேரத்தில் நாம் தூங்காமல் விழித்திருந்தால், உடல் பெரும் குழப்பத்திற்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறது.
இதன் காரணமாக 'கார்டிசோல்' எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் ரத்தத்தில் அதிகமாகக் கலக்கிறது. இது நடந்தால், நமது உடல் கொழுப்பைக் கரைக்கும் வேலையை நிறுத்திவிட்டு, அதை அப்படியே வயிற்றுப் பகுதியில் சேமித்து வைக்கத் தொடங்கிவிடும். நீங்கள் எவ்வளவு தான் சத்தான உணவைச் சாப்பிட்டாலும், இந்த ஹார்மோன் சுரந்தால் தொப்பை போடுவதை யாராலும் தடுக்க முடியாது.
முடி உதிர்வு!
இரவில் பதினோரு மணி முதல் அதிகாலை மூன்று மணி வரையிலான நேரம் நமது உடலுக்கு மிக முக்கியமானதாகும். பழுதடைந்த செல்களைச் சரிசெய்யும் வேலை இந்த நேரத்தில் தான் முழு வீச்சில் நடக்கும். இந்த மதிப்புமிக்க நேரத்தில் நாம் விழித்திருந்தால், உடலின் கழிவுகளை வெளியேற்றும் நச்சு நீக்கச் செயல்பாடு முற்றிலும் முடங்கிப் போகும்.
இதன் விளைவாக இன்சுலின் அளவு தாறுமாறாக அதிகரிக்கும். இது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் செயல்பாட்டைச் சீர்குலைத்து, நள்ளிரவில் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டும். இதனால் அஜீரணம், வயிறு உப்புசம் ஏற்படுவது மட்டுமின்றி, தலைமுடி கொத்துக்கொத்தாக உதிர்ந்து வழுக்கை விழும் மிகப்பெரிய அபாயமும் காத்துக்கொண்டிருக்கிறது.
தீர்வுகள்!
இந்த ஆபத்தான சுழற்சியில் இருந்து விடுபட சில எளிய நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக இருக்க நினைப்பவர்கள் கட்டாயம் இரவு பதினோரு மணிக்கு முன்பாகவே தூங்கச் செல்வதை ஒரு வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். எடுத்தவுடனே நேரத்தை மாற்றுவது கடினமாக இருந்தால், தினமும் படுக்கைக்குச் செல்லும் நேரத்தை ஒரு பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் முன்னதாக மாற்றிக் கொள்ளலாம்.
மிக முக்கியமாக, தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே உங்கள் மொபைல், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் திரைகளைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். அதேபோல, உங்களது இரவு உணவைத் தூங்குவதற்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கு முன்பே முடித்துவிடுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
இன்றிரவு முதலே நமது மொபைல் போன்களை சற்று தள்ளி வைத்துவிட்டு, சீக்கிரமாகத் தூங்கி நிம்மதியான வாழ்க்கைக்குப் பழகுவோம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)