

வயதானவர்களுக்கு உண்டாகும் டிமென்ஷியா (Dementia) எனப்படும் மறதி நோய் குறைய உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய பொருட்கள் எவை தெரியுமா?
நம் நாட்டில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதன் காரணமாய் முதியவர்களின் எண்ணிக்கை வெகு அதிகமாக உயர்ந்துகொண்டு போவதை காண்கிறோம். வயதான காரணத்தால் அவர்கள் டிமென்ஷியா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட தொற்றாத நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாவதையும் நாம் காண்கிறோம்.
உலகளவில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட மக்களில் அறுபது சதவிகிதம் பேர் இந்தியா போன்ற நடுத்தர மற்றும் அடித்தட்டு வர்க்க மக்கள் அதிகமுள்ள நாடுகளை சார்ந்தவர்களாக உள்ளனர்.
மரபு வழிக்காரணிகள் மறதி நோய்க்கு அடித்தளம் அமைப்பவையாக கூறப்பட்டாலும், ஊட்டச் சத்து குறைபாடுகள், குறிப்பாக நுண்ணுயிர் சத்துக்கள் (Micronutrients) உணவில் குறைவதும் மூளை ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மறதி நோயின்றி ஆரோக்கியமாக மூப்படைய, தெலங்கானா மாநிலத்தில் டிமென்ஷியா வருவதற்கான அறிகுறிகளை தெளிவுபடுத்தும் உபகரணங்களை பயன்படுத்தி 40-80 வயதிற்கு உட்பட்ட, நகரங்கள் மற்றும் நாட்டுப்புற மக்கள் என இரு தரப்பினரும் கலந்த, 570 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் அவர்களின் அறிவாற்றல் செயல் திறனும் மான்ட்ரியல் காக்னிட்டிவ் அஸ்ஸஸ்மென்ட் (Montreal Cognitive Assessment) என்ற கருவியை பயன்படுத்தி ஆராயப்பட்டது.
ஆய்வில் நவீன தொழில் நுட்ப கருவிகளின் உதவியை பயன்படுத்தி இரத்தத்தில் கலந்திருக்கும் வைட்டமின்களின் அளவு கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் உட்கொள்ளும் நார்ச்சத்தின் அளவும் மதிப்பீடு செய்யப்பட்டது.
முடிவில், ஆய்வில் பங்கேற்ற 40 சதவிகித நபர்களுக்கு டிமென்ஷியா வரும் அறிகுறிகள் அதிகம் காணப்பட்டன. அவர்கள் உடலில் வைட்டமின்கள் D, B2, B6 மற்றும் B12 ஆகிய ஊட்டச் சத்துக்களின் அளவு, தேவையை பூர்த்தி செய்யாமல் குறைந்த அளவில் இருந்தது தெரிய வந்தது. அவர்கள் நார்ச்சத்து மற்றும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கிய உணவுகளை குறைவாகவும், சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிக அளவிலும் எடுத்துக் கொண்டதும் தெரிந்தது.
நகரங்களில் வாழ்பவர்களை விட நாட்டுப் புற மக்களுக்கு டிமென்ஷியா அறிகுறிகள் அதிகம் தென்பட்டுள்ளது. இதிலிருந்து நுண்ணுயிர்ச் சத்துக்கள் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் டிமென்ஷியா எனப்படும் மறதி நோய் வரும் அபாயத்தை தவிர்க்க முடியும் என்பது தெளிவாகிறது.
இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மறதி நோயால் பாதிப்படைவர்களின் எண்ணிக்கையும் கூடவே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"மறதி நோய் வந்தபின் நோயை மாற்றியமைக்கும் சிகிச்சை (Disease Modifying Therapy) முறைகளை நாடிச் செல்வதை விட நோய் வரும் முன்பே அந்நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவது ஆரோக்கியம்.
அதற்கு நாம், பல வகையான கீரை வகைகள், நார்ச் சத்துக்கள் அடங்கிய பழங்கள், காய்கறிகள் மற்றும் பயறு வகைகளை தினசரி உணவில் சேர்த்து உண்பது அவசியம் என்றும்" இந்த ஆராய்ச்சிகளை முன்னெடுத்து நடத்திய விஞ்ஞானி டாக்டர் G. பானுப்பிரகாஷ் ரெட்டி, ICMR-National Institute of Nutrition மற்றும் அதன் இயக்குனர் டாக்டர் பாரதி குல்கர்னி அவர்களும் கூறுகின்றனர்.
இவர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் The Lancet Regional Health - Southeast Asia என்னும் அறிவியல் இதழில் (Science Journal) வெளியிடப்பட்டுள்ளது.
(மருத்துவ மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை (Disclaimer): இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. இந்த இணையதளத்தில் நீங்கள் வாசித்த தகவல்களைக் கொண்டு, முறையான மருத்துவ சிகிச்சையைத் தவிர்க்கவோ அல்லது தாமதப்படுத்தவோ வேண்டாம். ஏதேனும் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கோ அல்லது அவசர உதவி மையத்திற்கோ தொடர்பு கொள்ளவும். நாங்கள் எந்தவொரு வீட்டு வைத்தியத்தையும் தொழில்முறை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பரிந்துரைக்கவில்லை.)