அர்ட்டிச்சோக் (Artichoke) எனப்படும் முள் முட்டைகோஸ் காயில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பலவித நன்மைகள் அடங்கியுள்ளன. கொர்சிடின்(quercetin), ரூட்டின்(rutin), அந்தோசியானின் (anthocyanin), சிலிமரின் (Silymarin) போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் இக்காயில் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தி மொத்த உடலுக்கும் தேவையான ஆரோக்கியத்தை அளிக்கின்றன. உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க வல்லது; வயிற்று வலி, பொருமல், வயிற்றுப் போக்கு போன்றவற்றை குணமாக்கும்.
இதிலிருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்தானது, ஜீரண உறுப்புகளின் இயக்கத்தை சீராக்கி ஸ்மூத்தான முறையில் செரிமானம் நடைபெற உதவுகிறது; மலச்சிக்கலையும் தவிர்க்கிறது. இக்காயை உண்பது அடிக்கடி உண்டாகும் பசியுணர்வை நீக்கி நீண்ட நேரம் வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வைத் தரும். மேலும் ஜீரண உறுப்புகளிலுள்ள மைக்ரோஃபுளோரா என்னும் உடலுக்குள் சக்தியை உறிஞ்ச உதவும், நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது.
இதிலுள்ள அர்ட்டிச்சோக், கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும் குணம் கொண்டது. இது இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தி இதய நோய்கள் வரும் அபாயத்தைப் போக்குகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்துகிறது.
கல்லீரல் சேதமடையும்போது அர்ட்டிச்சோக்கானது இழந்த செல்கள் மற்றும் திசுக்களை புதுப்பித்து மீண்டும் புத்துயிர்ப்புடன் இயங்கச் செய்கிறது. கல்லீரலின் தலையாய கடமையான நச்சுக்களை உடலிலிருந்து வெளியேறச் செய்யும் செயல் தடையின்றி மீண்டும் தொடர்வதற்கு காரணமாகிறது இந்த முள் முட்டைக்கோசு. மேலும் இது ஆழ்ந்த நீண்ட நேர தூக்கத்துக்கு உதவி புரிவதோடு, வயதான தோற்றம் வருவதையும் தள்ளிப்போடும்.
இத்தனை நற்பயன்கள் கொண்ட இந்த அர்ட்டிச்சோக் காயை நாமும் அடிக்கடி உட்கொண்டு நலம் பல பெறுவோம்.