தீரா வலி தரும் தசை பிடிப்பு... இதுவும் ஒரு காரணம்!
நம் உடலில் தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று நம் உடலில் உள்ள நீரின் அளவு குறைவது ஆகும். இரவில் படுக்கும்போதும், பகலில் நடக்கும்போதும், உட்காரும்போதும், படுத்த நிலையில் இருந்து எழுந்திருக்கும்போதும் நமக்கு தசைகள் எப்போதாவது வலிப்பது உண்டு. இது இயல்பானது என்றாலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று ஆகும்.
நம் உடல் தசைகளில் லாக்டிக் அமிலம் குவிந்தாலோ, வைட்டமின்களும் பொட்டாசியமும் குறைந்தாலோ, தசைகளில் அடிக்கடி பிடிப்புகள் ஏற்படலாம். தசைப்பிடிப்பால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் அன்றாட உணவில் சத்தான பச்சை காய்கறிகள், பழங்கள், முட்டை, பால், இளநீர், எலக்ட்ரோலைட் பானங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது.
ஒருவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டால், உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ்கட்டியைத் தடவலாம். தசையில் இறுகுத்தன்மையை போக்க பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்யலாம். ஆனால், தசைகள் வலிக்கும் அளவுக்கு அழுத்தமாக மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். சூடான நீரில் ஒரு துண்டை நனைத்து வலி உள்ள பகுதியில் அதை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
ஒரு நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு வலியுள்ள உடல்பகுதியையோ, வலியுள்ள காலையோ 10 வினாடிகள் வரை உயர்த்திப் பிடிக்கலாம். இப்படி பல முறை செய்யும்போது வலியுள்ள தசைப்பகுதியில் இரத்த ஓட்டம் மேம்பட்டு தசை இறுக்கமும் வலியும் குறையும். இவ்வாறான உடற்பயிற்சிக்குப் பிறகும் நமது கால் தசைகள் வீங்கினாலோ, சருமத்தின் நிறம் மாறினாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
நமது உடல் சீராக இயங்கத் தேவையான நீரின் அளவை உடலில் பராமரிப்பது நீரேற்றம் எனப்படுகிறது. வழக்கமான உடல் செயல்பாடுகள், வியர்வை, சிறுநீர் கழித்தல், வழக்கமான சுவாசம், அதிக அளவிலான வாந்தி,பேதி போன்றவற்றின் மூலம் நமது உடல் நீர்ச்சத்தினை இழக்கிறது.
நீரேற்றம் நமது உடலுக்குத் தேவையான நீரை மீண்டும் அளிக்கிறது. செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாடு, உடல் உறுப்புகளின் சீராக செயல்பாடு, சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருத்தல், முறையான உடல் எடையை பராமரித்தல், பசியைக் கட்டுப்படுத்தி, அதிகமான உணவை எடுத்துக் கொள்வதை தவிர்த்தல் போன்றவற்றிற்கு நமது அன்றாடம் போதுமான நீரேற்றம் தேவை. நமது உடல் நீரேற்றமாக இருக்க நாம் தினமும் போதுமான அளவு தண்ணீர், பழங்கள், காய்கறிகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.
தலைசுற்றல், உடல் சோர்வு, வறண்ட வாய், வறண்ட சருமம், சிறுநீர் குறைவாக வெளியேறுதல், மலச்சிக்கல் போன்றவை நீரேற்ற இழப்பின் வழக்கமான அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன. எனவே, உடலில் போதுமான அளவு நீரை நமது உடலில் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.
முதியவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வதை தவிர்க்க விரும்புகிறார்கள்.மேலும், இயல்பிலேயே முதுமையில் அவர்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்படுவதில்லை. அதனால் பொதுவாக தினமும் அவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. அதனால், அவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. எனவே, அவர்களுக்கும், அவர்களை பராமரிப்பவர்களுக்கும் நீரேற்றம் குறித்த விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது.
சமீப காலமாக, இதுபோன்ற பிரச்சனைகள் இளைஞர்களிடமும் காணப்படுகிறது. அவர்கள் உட்காரும்போதும், நிற்கும்போதும் கூட தசைகளில் வலியை உணர்கிறார்கள். நமது வாழ்க்கை முறை இதற்குக் காரணமாக இருக்கலாம். எனவே, நாம் சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்.
பலமுறை தசைப்பிடிப்பு வலிக்கான உடற்பயிற்சிகளை செய்தும் சரியான நிவாரணம் கிடைக்கவில்லையெனில், அவ்வாறானவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது.