
கடல் உணவுகளில் பிரச்னை இல்லாதது மீன் உணவுகள் என்று நினைப்போம். ஆனால் விஷம் கொண்ட மீன் வகையை உணவுக்கும் பயன்படுத்துவதை அறிவீர்களா?
ஃபுகு என்றும் அழைக்கப்படும் பஃபர்பிஷ், சில உணவு வகைகளில், குறிப்பாக ஜப்பானில் ஒரு சுவையான உணவாக இருக்கிறது. இருப்பினும், அதன் நச்சுத்தன்மை காரணமாக இது குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது.
ஆம். Puffer Fish எனப்படும் பேத்தை மீன்கள் விஷம் கொண்டவை. இதன் விஷம் அதன் தலையில் உள்ளது என்றும் இந்த வகை மீனில் ருசியும் முள்ளும் இன்றி நடுவில் ஒரு முதுகெலும்பு மட்டுமே உண்டு என்றும் சொல்கின்றனர்.
உலகில் உள்ள மீனினங்களில் விஷத்தன்மை கொண்ட மீன் வகைகள் பல உள்ளன. இதில் மிக கொடிய விஷத்தன்மை கொண்டு அச்சத்தை தருகிறது (Puffer fish) "பஃபர்பிஷ்". ஜப்பானிய உணவுகளில் இடம் பிடிக்கும் இவைகள் நம் இந்தியாவிலும் அதிகம் காணப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
பார்ப்பதற்கு முள்ளம்பன்றிபோல் தோற்றமளிக்கும் இது வினோதமான கடல் மீனாகும். பேத்தை, பேத்தா, தவளை மீன், முள்ளம்பன்றி மீன், பலாச்சி என பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. இதன் முக்கிய அமைப்பு மனித முகம்போல் இருப்பது விந்தை.
இவ்வகையில் மொத்தம் 120 க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் பல வண்ணங்களில், வித்தியாசமான உடலமைப்புடன் காணப்படுகிறது என்கிறார்கள். இது ராமேஸ்வரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள இம்மீனானது தன் உடலை 10 மடங்கு பெரிதாக்கிக் கொள்வதுண்டு.
உலகில் முதுகெலும்புள்ள கொடிய வகை உயிரினங்களில் 2 வது இடத்தில் உள்ள இந்த மீனின் உடலின் மேற்பரப்பில் முட்கள் சூழ்ந்திருக்கும், மற்றும் தலை பகுதியில் அதிகளவில் நச்சுத்தன்மையை சுமந்துள்ளது. இந்த விஷத்துக்கு காரணமாக இதன் உடலில் உருவாகும் (tetrodotoxin) டெட்ரோடோடோக்ஸின் எனப்படும் கொடிய நியூரோடாக்சின் உள்ளது, இதை உட்கொண்டால் ஆபத்தானது. கொடிய இந்த நஞ்சை முறியடிக்க இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பேத்தை மீன் ஜப்பானின் கடல் உணவு வகைகளில் பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. காரணம் ஜப்பானில் இந்த மீனை சமைக்க தனி படிப்பு உண்டு. இரண்டு ஆண்டுகள் சிறப்பு பயிற்சியும், சான்றிதழும் முறையாக பெற்ற சமையல் கலைஞர்கள் மட்டுமே இந்த ஃபுகு மீனை தயாரிக்க அனுமதிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் நச்சு பாகங்களை எவ்வாறு அகற்றுவது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு கடுமையான பயிற்சி பெறுகிறார்கள். சரியான தயாரிப்புடன் கூட, சமையல்காரர் அனுபவம் இல்லாதவராக இருந்தாலோ அல்லது மீன் சரியாகக் கையாளப்படாவிட்டாலோ விஷம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் ஏற்படும் மருத்துவ அபாய விளைவுகள்:
டெட்ரோடோடாக்சின் விஷம் ஏற்படுத்தும் நரம்பியல் அறிகுறிகளாக உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் பக்கவாதம் ஏற்படும். கடுமையான விசுவாச செயலிழப்புக்கு வழிவகுக்கும், இது உயிருக்கு ஆபத்தானது. டெட்ரோடோடாக்சின் இருதய அமைப்பையும் பாதிக்கலாம், இதனால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பில் மாற்றங்கள் ஏற்படும்.
இத்தனை ஆபத்தானது எனத் தெரிந்தும் நம் நாட்டிலும் ஆங்காங்கு அதன் தலை போன்ற நச்சுப்பாகங்களை அகற்றி சமைப்பதாக சொல்லப்படுகிறது. சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து எனும் போது முறையற்ற சான்றிதழ் படிப்பு பெறாமல் இத்தகைய விஷப்பரீட்சைகளை கைவிடுவது நல்லது என்கின்றனர் உணவு ஆர்வலர்கள்.