கோடையை இதமாக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ராகி மோர்!
https://www.youtube.com

கோடையை இதமாக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ராகி மோர்!

கோடைக்காலத்தில் மூன்று வேளையும் திட உணவு எடுத்துக்கொள்வதைவிட கஞ்சி, கூழ், மோர், இளநீர் போன்ற திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. பொதுவாக, கோடைக்காலத்தில் உடலினை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நம் முன்னோர்கள் கேப்பைக்கூழ் மற்றும் கம்மங்கூழ் அருந்துவதை வழக்கமாக வைத்து இருந்தார்கள்.

இக்காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சாப்பிட வைப்பதே பெரும்பாடாக உள்ளது. ஆனால், இந்த சுவையான ராகி மோரினை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். இந்த மோரினை செய்வது மிகவும் எளிது. மேலும், வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ராகியில் அதிகம் உள்ளன. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இந்த ராகி மோர் அற்புத பலனைத் தரவல்லது. இந்தப் பதிவில் ராகி மோரின் நன்மைகளைத் தெரிந்து கொள்வோம்!

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போஹைட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சியம் சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது. கால்சியம் சத்துதான் உடலின் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது. ராகியில் இந்த கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை ராகி உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.

ராகியில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் உடல் உறுப்புகள் சீராக இயங்கும். ராகியில் நார்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகும். அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ராகியை கோடைக்காலத்தில் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் அதிகரிப்பதைத் தடுத்து உடலை குளிரச் செய்யலாம். ராகி மோர் எளிதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பானம் ஆகும். ராகியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனைத் தருகிறது. இதிலுள்ள அதிகப்படியான இரும்புச்சத்து அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது. விரைவில் முதுமையடைவதை தவிர்க்கவும் உதவுகிறது. ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்கள் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது.

இதையும் படியுங்கள்:
நவகுஞ்சரம் பற்றி தெரியுமா?
கோடையை இதமாக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ராகி மோர்!

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும். குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே இது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது. ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

கர்ப்ப காலத்திற்கு ஏற்ற உணவுகளில் ஒன்று ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல, தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ராகி, கம்பு போன்ற சிறுதானியங்களின் கஞ்சியோ, கூழோ தினமும் ஒரு வேளை சாப்பிடுபவர்களுக்கு ஆயுளும், உடல் நலமும் நல்லபடியாக இருக்கிறது. அவர்களின் ஆயுள் இதனால் 15 சதவீதம் மற்றவர்களை விட கூடுகிறது என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக, தானியக் கூழ் சாப்பிடுகிறவர்களுக்கு இருதய நோய் அபாயம் தவிர்க்கப்படுகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி.

logo
Kalki Online
kalkionline.com