இந்தியர்களின் சமையலிலும், ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பிலும் மிக அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு வரும், உலகிலேயே விலையுயர்ந்த பொருள் குங்குமப் பூ (Saffron). இத்தாவரத்தின் பூக்களின் ஒரு பகுதியிலிருந்து கூடுதல் கவனத்துடன் கைகளால் இவற்றை சேகரிப்பதிலும், பதமாக இவற்றை உலர்த்தி வருத்தெடுக்கும் தயாரிப்பு முறையில் உள்ள சிரமங்களின் காரணமாகவும் இதன் விலை மிகவும் அதிகம். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இது விளைவிக்கப்படுகிறது. ஒரு பூவிலிருந்து மூன்று ஸ்டிக்மாக்களே எடுக்க முடியும் என்ற நிலையில் ஒரு கிலோ சஃப்ரான் தயாரிக்க சுமார் 1,80,000 பூக்கள் தேவைப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ரிச் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்: சஃப்ரானுக்கு கவர்ச்சிகரமான அதன் சிவப்பு நிறத்தைக் கொடுப்பது குரோசின் என்ற கூட்டுப்பொருள். இதிலுள்ள குரோசெடின், சஃப்ரனால் மற்றும் கெம்ப்ஃபெரால் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
2. கவலைகளைக் குறைத்து மகிழ்ச்சியான மனநிலை தரும்: இதிலுள்ள குரோசின் கவலைகள் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளின் விளைவாய் அல்ஸிமெர் மற்றும் பார்க்கின்சன் போன்ற வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கவும் உதவும்.
3. PMS அறிகுறிகளைக் குறைக்கும்: மாதவிடாய் காலத்திற்கு (Pre Menstrual Symptoms) முன்பு தோன்றும் தலைவலி, பிடிப்புகள் போன்ற அறிகுறிகள் குறையச் செய்யும்.
4. இதய ஆரோக்கியம் காக்க உதவும்: சஃப்ரான் உடலில் உள்ள LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசெரைட் ஆகியவற்றின் அளவைக் குறைக்க உதவும். இதனால் இரத்த அழுத்தம் உயராமல் சம நிலையில் வைத்துப் பராமரிக்க முடியும். இதய நோய்கள் வருவதைத் தடுக்கவும் முடியும்.
5. வீக்கங்களைக் குறைக்கும்: சஃப்ரான் குடலில் உண்டாகும் வீக்கங்களைக் குறைத்து செரிமான இயக்கங்கள் சிறப்பாக நடைபெற உதவும்.
6. பார்வைத் திறன் மேம்படும்: சஃப்ரான் மூப்பின் காரணமாக உண்டாகும் பார்வைக் குறைபாடுகளை நீக்க உதவி புரியும்.
7. இரத்த சர்க்கரை அளவு சமன்படும்: நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவும்.
8. பாலுணர்வைத் தூண்ட உதவும்: சஃப்ரான் பாலியல் சம்பந்தப்பட்ட எல்லா உணர்வுகளையும் தூண்டவும், இனப்பெருக்கத்திற்கு உதவி புரியவும் செய்யும்.
9. எடைப் பராமரிப்பிற்கு உதவும்: சஃப்ரான் பசியைக் குறைத்து எடையை சமநிலையில் வைத்துப் பராமரிக்க சிறந்த முறையில் உதவும். தினசரி ஒரு நாளைக்கு அறுபது மில்லி கிராம் என தொடர்ந்து மூன்று மாதங்கள் உட்கொண்டு வந்தால் கணிசமான அளவு உடல் எடை குறைவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இத்தனை நன்மைகள் இருந்தபோதும் கர்ப்பிணிப் பெண்கள் இதை குறைந்த அளவே எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சஃப்ரானில் விஷத்தன்மை கிடையாது. அதன் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வதில் அதிக கவனம் தேவை. ஏனெனில் அதே சாயல் கொண்ட வின்டர் கால்ச்சிகம் (Winter Colchicum) எனப்படும் போலி குங்குமப் பூ மிக அதிக விஷத்தன்மை கொண்டது. தவறுதலாக இதை உண்ண நேர்ந்தால் மரணம் கூட சம்பவிக்க வாய்ப்பாகும்.
சஃப்ரான் முழு ஸ்டிக்மாக்களாகவும் பவுடராகவும் கிடைக்கும். பவுடரில் போலிகள் கலந்திருக்கக்கூடிய சாத்தியம் உள்ளதால் ஸ்டிக்மாக்களை வாங்குவது நல்லது. இது சக்தி வாய்ந்த சுவையும் சிறிது கசப்பு டேஸ்ட்டும் கொண்டுள்ளதால் சமையலில் மிகக் குறைந்த அளவு சேர்ப்பதே நலம் தரும். சிறிதளவு சஃப்ரானை வெது வெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.
இது எல்லா வகை உணவுகளோடும் சுலபமாக சேர்ந்துகொள்ளும் குணமுடையது. இதனாலேயே இதை ஈரானியன் சஃப்ரான் ஐஸ் கிரீம் போன்ற உலகளாவிய கிளாசிக் உணவு வகைகளில் ஸ்டார் வேல்யு கொண்ட கூட்டுப்பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர். குங்குமப் பூவை வெது வெதுப்பான பாலில் சேர்த்து சிறிது தேனும் கலந்து நாளின் எந்த நேரமும் குடித்து வரலாம்.