
நாம் அனைவருமே நீண்ட நேரம் வேலை செய்யவும், நல்ல எனர்ஜியுடன் இருக்கவும் பலவிதமான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், காலை உணவு சாப்பிட்டதும் நெஞ்செரிச்சல், உப்புசம், தூக்கம் போன்ற உணர்வுகள் ஏற்டுகிறது. இதற்கு நாம் சாப்பிடும் உணவுகள் தான் காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சாப்பாடு சாப்பிடும் போது ஒரு சில தன்மைக்கொண்ட உணவுகளை வேறு சில தன்மைக்கொண்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது சில பிரச்னைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி விரிவாக இந்தப்பதிவில் காண்போம்.
1. பால் மற்றும் வாழைப்பழம்
பால் மற்றும் வாழைப்பழம் இவை இரண்டுமே ஆரோக்கியமான உணவு என்பது நமக்கு தெரியும். குறிப்பாக பாடிபில்டர் போன்றவர்கள் இவை இரண்டையும் சேர்த்து வாழைப்பழ மில்க் ஷேக்காக அருந்துவார்கள். பாலில் அதிகமாக கால்சியம் உள்ளது. இது எலும்புகளுக்கு நல்லது என்றாலுமே வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடும் போது செரிமான மந்தநிலை உண்டாகும்.
இதற்கு காரணம் என்னவென்றால், பாலில் 80 சதவீதம் Casein என்னும் மெதுவாக ஜீரணமாகக்கூடிய புரதம் உள்ளது. இதுவே வாழைப்பழம் விரைவில் ஜீரணமாகக்கூடிய தன்மையைக் கொண்டது. எனவே, இவற்றை சேர்த்து சாப்பிடும் போது செரிமான பிரச்னைகள் ஏற்படும்.
2. தயிர் மற்றும் மீன்
நிறைய பேர் தயிர் சாதத்திற்கு மீனை சேர்த்து சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆயுர்வேதப்படி தயிர் உடலுக்கு குளுமையைக் கொடுக்கக்கூடிய உணவு, மீன் உடலுக்கு சூட்டை கொடுக்கக்கூடிய உணவு. இரண்டிலுமே புரதம் அதிகமாக இருக்கிறது. இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து சாப்பிடும் போது உடலில் வாததோஷ சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு செரிமான மந்தநிலை ஏற்படும்.
3. வெள்ளேரிக்காய் மற்றும் தக்காளி
உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சாலட் அதிகம் விரும்பி உண்பார்கள். அதில் அதிகம் இருப்பது வெள்ளேரிக்காய் மற்றும் தக்காளி தான். ஆனால், ஆயுர்வேதப்படி வெள்ளேரிக்காய் 90 சதவீதம் நீர்ச்சத்துக் கொண்ட ஆல்கலைன் என்று சொல்லக்கூடிய காரத்தன்மை கொண்ட காய்கறி. தக்காளி Malic மற்றும் Citric acid கொண்ட அமிலத்தன்மை கொண்ட பழம். இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து வயிற்றில் Acid reflex ஏற்பட்டு நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
4. டீ மற்றும் பால்
டீயுடன் பால் சேர்த்துக் குடிக்கும் பழக்கம் நம் அனைவருக்குமே உண்டு. டீயில் catechins போன்ற Polyphenolic components உள்ளது. இது நம் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்டை அதிகரிப்பதோடு கேன்சர் வராமலும் தடுக்கிறது. ஆனால், இத்துடன் பால் சேர்க்கும் போது பாலில் உள்ள புரதம் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டை தடுக்கும். எனவே, பிளாக் டீயை பால் சேர்க்காமல் குடிப்பதே சிறந்ததாகும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.