

நீண்ட நேரம் ஏசி ரூமிலே இருந்தால்?
பகல், மதியம் அல்லது இரவு என எந்த நேரத்திலும் ஏசியால் குளிரூட்டப்பட்ட அறையிலே நீண்ட நேரம் செலவிடுவது, மனித உடலில் அறிவியல் பூர்வமாக சில மாற்றங்களை உருவாக்குகிறது.
இதில் உடனடியாக நாம் உணர்வது சருமம், கண்களில் ஏற்படும் வறட்சியாகும் (dryness). காரணம், ஏசி காற்று ஈரப்பதத்தை குறைத்து (lower humidity), நம் சருமத்தில் (skin) இருக்கும் மிச்சமுள்ள ஈரப்பதத்தையும் எடுத்துவிடுகின்றன.
இதனால் உடலுக்குள் இருக்கும் சுவாசப் பாதையும் (respiratory systems) ஈரப்பதத்தை இழக்கிறது. இது தொண்டையில் எரிச்சல், இருமல் அல்லது அடைப்பு போன்ற உணர்வையும் ஏற்படுத்தக்கூடும். அறிவியல் ஆய்வுகள், குறைந்த ஈரப்பதமானது, மூக்கு அல்லது தொண்டையில் உள்ள சளி சவ்வுகளை (mucous membranes) பலவீனமாக்கி, குளிர்ந்த காற்றில் சுலபமாகப் பரவும் ஒவ்வாமை (allergens) போன்ற பிரச்னைகளை எளிதில் அதிகமாக்குகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மற்றொரு மாற்றம் உடல் வெப்பநிலையில் (thermoregulation) எதிரொலிக்கிறது. உடல் இயற்கையாகவே சுற்றுப்புற (Ambient) வெப்பநிலைக்குத் தகுந்தபடி ஒண்டிப்போகிறது. ஆனால், ஏசி போன்ற செயற்கையாகக் குளிர்விக்கப்பட்ட காற்றில் நீண்ட நேரம் இருப்பது உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாட்டைக் (metabolic activity) குறைத்து, ரத்த நாளங்களைச் (blood vessels) சுருக்கக்கூடுமாம். இது சில சமயங்களில் தலைவலி அல்லது சோர்வாக நம்மை உணரவைக்கும்.
மனிதர்களுக்கு மிகவும் அவசியமான Circadian Rhythms குறித்த ஆராய்ச்சியில், ஏசி உண்டாகும் குளிர்ச்சியான சூழல்கள் மக்கள் வேகமாகத் தூங்குவதற்கு உதவக்கூடும் என்பதைக் காட்டுகிறது. அதனால் ஏற்படும் அதிகப்படியான வறட்சி (Skin dryness) அல்லது குளிர், ஒருவரின் ஆழ்ந்த தூக்க (Deep sleep stage) நிகழ்வைச் சீர்குலைத்து; காலையில் அவர்களைப் புத்துணர்ச்சியற்றவர்களாக உணரவைக்குமாம். இதோடு, குளிர்ந்த காற்று நம் உடல் தசைகளைச் சுருங்க வைக்குமாம். இது தசையை இறுக்கமாக்குமாம் (Muscle stiffness). இதனால்தான் குளிரூட்டப்பட்ட அறையில் உறங்கியபிறகு சிலர் மூட்டு (joint) அசௌகரியத்துடன் அல்லது வலியுடன் எழுகிறார்கள்.
அனைத்து காலநிலையிலும் இது எதிரொலிக்குமா?
இந்த மாற்றங்கள் அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வெப்பமான நேரங்களில் ஏசி உடலின் வியர்வையை வேகமாக ஆவியாக்கி (evaporate) முழு உடலுக்கான நீர்ச்சத்து இழப்பு (Dehydration) அபாயத்தை அதிகரிக்கிறது. இதே வறண்ட காலநிலைகளில் ஏற்கனவே குறைவாக உள்ள ஈரப்பதம் மேலும் குறைந்து சருமம் அல்லது சுவாச குழாய்களில் பிரச்சனையைத் தீவிரப்படுத்துகிறது. ஆக, ஏசியை அநாவசியமாக பயன்படுத்துவது, நமக்குத் தேவையற்ற சோர்வையும், பிரச்னையையும்தான் அதிகப்படுத்துகிறது.
சரி, அப்போ கோடை காலத்தில் எப்படி பயன்படுத்தலாம்?
கோடைக்காலத்தில் ஏசியால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைச் சமாளிக்க சிறந்த வழி ஏசியை அதீத குளிரில் வைக்காமல் மிதமான வெப்பநிலையில் பராமரிப்பதே சரியான முறையாகும். இதனால் உடல் திடீர் வெப்ப மாற்றங்களை (Temp changes) எதிர்கொள்ளாது. அதோடு நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் (Hydrate) வைத்திருப்பது, ஏசியால் உடலில் நிகழும் ஈரப்பதக் குறைபாட்டை ஈடுசெய்கிறது.
இறுதியில் ஏசியைத் தவறாமல் சுத்தம் செய்வது அல்லது பராமரிப்பது, தூசி, பூஞ்சை (fungus) அறைக்குள் பரவுவதைத் தடுக்கிறது. ஏசி உபயோகிக்கும்போது நடுவில் சிறு இடைவெளிகள் எடுத்துக்கொண்டு வெளியில் கிடைக்கும் இயற்கையான காற்றையும் சுவாசிக்க நேரம் ஒதுக்கலாம். இது உடல் அதன் இயல்பான இயக்கத்தைப் ஒவ்வொரு நாளும் பராமரிக்கவும், சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)