

நாம் ஆரோக்கியத்துடன் இருந்தாலும் சளி என்பது உடலில் உற்பத்தி ஆகிக் கொண்டே தான் இருக்கும். சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள் நமது வாய், மூக்கு, தொண்டை, நுரையீரல், இரைப்பை போன்ற பகுதிகளில் காணப்படும். சளி வெளியேறாமல் மாத்திரைகளால் கட்டுப்படுத்தப்படுவதால் இருமல், தும்மல், இளைப்பு போன்ற பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறது.
சளியை இயற்கையாக வெளியேற்ற சில தீர்வுகளாக...
ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் தேனை வெந்நீரில் கலந்து அருந்தி வர சளி உற்பத்தியை குறைக்கலாம். இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். தேன் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது போட்யூலிசத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இஞ்சியை பச்சையாக சாறாக அருந்தலாம். இது சுவாசக் குழாய் மற்றும் தொண்டையில் தங்கும் சளியை குறைக்க உதவும். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பூண்டு இயற்கையாகவே புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. தொடர்ந்து இருமும் போது தொண்டையில் புண் ஏற்படும். பூண்டைத் தேனில் கலந்து சாப்பிடும்போது சளி மற்றும் கடுமையான இருமலால் வறண்டு போகும் தொண்டையை தணித்து நீரேற்றமாக உடலை வைக்க உதவும். தொண்டையில் உள்ள சளியை கரைத்து நிவாரணம் தரும்.
ஆவி பிடிக்க அடைத்துள்ள சளி வெளியேற உதவியாக இருக்கும். ஆவி பிடிக்கும்போது யூகலிப்டஸ், துளசி, கற்பூரவள்ளி போன்றவற்றை சேர்த்து ஆவி பிடிக்க நல்ல பலன் தரும்.
இருமலுக்கு காரணம் சுவாசக் குழாயின் வீக்கம் ஏற்படுவதாலும் வரலாம். சுத்தமான வெதுவெதுப்பான நீர், உப்பு கலந்த நீர் கொண்டு நாசிப் பகுதிகளை கழுவ எரிச்சலை தணித்து சளியை அகற்ற உதவும்.
சிறிது உப்பு கலந்த வெந்நீர், சிறிதளவு மஞ்சள் போட்டு தொடர்ந்து கொப்பளித்து வர தொண்டை வலி, தொண்டை கரகரப்பு குணமாகும்.
துளசி, இஞ்சி, மஞ்சள் போன்றவற்றைக் கொண்டு கஷாயம் தயாரித்து குடிக்க சளியை வெளியேற்றி, மூக்கடைப்பை சரிசெய்யும்.
பனங்கற்கண்டு, மிளகு இவற்றை வாயில் அடக்கிக் கொண்டு சாறை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க தொண்டை கரகரப்பு, வலி சரியாகும்.
படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகு பொடி, பனங்கற்கண்டு சேர்த்து அருந்த சளி வெளியேறி, தொண்டைக்கு இதமளிக்கும்.
கற்பூரவள்ளி சாறு, வெற்றிலை சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை அருந்தி வர சளி வெளியேறி மூச்சு விடுதல் இயல்பாகும். மா இலை கொழுந்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தேனில் குழைத்து மென்று சாப்பிட தொண்டைக்கட்டு, குரல் கம்மல் நீங்கி நிவாரணம் கிடைக்கும். துளசி, வேப்பிலை, மிளகு சேர்த்து கஷாயமாக்கி அருந்தி வர சளியினால் ஏற்பட்ட தலைபாரம், உடல்வலி போகும்.