மூக்கடைப்பு, அலர்ஜி, சைனஸ் பிரச்னை, மூக்கு உள்ளே சதை வளர்ச்சி போன்றவை காரணமாக மூக்கில் அடைப்பு ஏற்படும். இதனால் காற்று சுவாச பாதையில் தடை ஏற்பட்டு அதன் காரணமாக குறட்டை ஏற்படலாம். உள்நாக்கு வளர்ச்சி, குரல் வளையை ஒட்டி சதை தொங்குவது ஆகியவையும் குறட்டை ஏற்படக் காரணமாக இருக்கலாம். உடல் பருமனும் குறட்டை ஏற்பட ஒரு காரணம். புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் குறட்டை ஏற்பட காரணமாகலாம். மது அருந்துவதால் சுவாசப் பாதை சுருங்கத் தொடங்கி குறட்டை உண்டாகிறது. படுத்து உறங்கும் பொசிஷனும் ஒரு முக்கியக் காரணமாகும்.
குறட்டை விடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், நம்முடன் சேர்ந்து தூங்குபவர்களின் தூக்கத்தை அது கெடுக்கும் விஷயமாக அமைந்து விடுவதால் அருகில் படுப்பவர்கள் நம்மை வெறுப்பாகவும் எரிச்சலாகவும் பார்ப்பார்கள். குறட்டை சத்தத்தால் வெளிநாடுகளில் விவாகரத்து பெற்றவர்களும் கூட அதிகம் உண்டு. ஆண்களில் நான்கில் ஒருவருக்கும் பெண்களில் மூன்றில் ஒருவருக்கும் இரவில் குறட்டை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
குறட்டை விடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகி கலந்து ஆலோசிப்பது நல்லது. ஏனெனில், குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும்போது மூச்சு அதிகமாக உள்ளிழுக்கப்படும்போது சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு முழுவதுமாக மூச்சு நின்றுவிட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒழுங்கற்ற சுவாசத்துடன் குறட்டை விடுவது இதய நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். மூச்சுத் திணறல் குறட்டைக்கான வாய்ப்பை அதிகரிக்கும். எதனால் குறட்டை ஏற்படுகிறது என்பதனை ஆராய்ந்து சில பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்வதன் மூலம் குறட்டை வராமல் தடுக்கலாம். உடல் எடை அதிகரித்த பின்னர்தான் குறட்டை விடும் பழக்கம் வந்தது என்றால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வது நல்லது.
அதேபோல், நாம் தூங்கும் நிலையும் (பொசிஷன்) குறட்டை ஏற்படுவதற்கு காரணமாகிறது. மல்லாந்து படுத்தால் குறட்டை ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே தூங்கும்போது பக்கவாட்டில் படுப்பது நல்லது.
குறட்டையை தவிர்க்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்:
1. படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சூடான நீரில் ஆவி பிடித்தல், சூடாக நீர் அருந்துதல் போன்றவை மூக்கடைப்பு சரியாகி, குறட்டை வருவது நிற்கும்.
2. மருத்துவ குணம் நிறைந்த ஏலக்காய் சுவாசப் பாதையில் உள்ள அடைப்புகளை சரி செய்வதோடு, நெஞ்சு சளியையும் குறைக்கும். எனவே, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் ஏலக்காய் பொடியை போட்டு கலக்கி படுக்கச் செல்லும் முன் தினமும் பருக நல்ல பலன் கிடைக்கும்.
3. காலையிலும் இரவிலும் படுக்கச் செல்வதற்கு முன்பு இரண்டு சொட்டு பிராமி எண்ணெயை மூக்கில் விட்டுக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
4. சளி, ஜலதோஷம் இருந்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள குறட்டை விடுவதைத் தவிர்க்க முடியும்.
5. மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு போன்றவற்றை கடைப்பிடிக்கலாம்.
6. ஒரு கப் நீரில் இரண்டு துளிகள் புதினா எண்ணெய் கலந்து படுக்கச் செல்லும் முன் வாயை கொப்பளிக்கவும்.
7. படுக்கச் செல்லும் முன் அரை ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் சிறிது தேன் கலந்து பருக சுவாசப் பாதையில் உள்ள வீக்கத்தை குறைத்து திசுக்களை மென்மையாக்கி சுவாசத்தை சீராக்கும். அத்துடன் ஆலிவ் ஆயில் தொண்டையில் உள்ள அதிர்வை குறைத்து குறட்டை பிரச்னையையும் தீர்க்கும்.