நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண் பாண்ட சமையல் சென்ற தலைமுறையில் சற்று குறைந்திருந்தது. தற்போது அதன் நன்மைகளையும், ஆரோக்ய சிறப்பையும் தெரிந்து கொண்டதால் எங்கும் இதன் சிறப்பு அறியப்பட்டு, தற்போது மண் பாண்ட சமையலுக்கு என்றே பிரத்யேக உணவகங்கள் பிரபலமாகியுள்ளன.
நிலத்திலிருந்து மண் பாண்டங்கள் செய்யப்படுவதால் அதன் பல்வேறு நன்மைகள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. மண் பாண்டங்களில் நமது உடலுக்குத் தேவையான கால்சியம், மக்னீசியம், தாமிரம் போன்ற 16 வகையான கனிமங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் மண் பாண்டங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் கூடுதலாக நன்மைகளை, சத்துக்களை தருவதாக உள்ளது. மண் பானையில் உள்ள காரத்தன்மை உணவின் அமில மதிப்பை சமன் செய்கிறது. மண் பானைகளில் உள்ள துளைகள் மூலமாக வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை ஒழுங்குபடுத்துவதால் உணவின் ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்க ஏதுவாகிறது.
நம்மில் பலருக்கு இன்று இருக்கும் அசிடிட்டி மற்றும் வாயு பிரச்னைகளை இது சரி செய்வதோடு, உணவின் அமில மதிப்பையும் சமன் செய்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், புண், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளைப் போக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. மண் பாண்டத்தில் சமைக்க குறைந்த அளவில் எண்ணெய் தேவைப்படுவதால் உணவின் ருசி, சத்துக்கள் மேம்படுகிறது.
உலோகப் பாத்திரங்களில் சமைப்பதால் ஏற்படும் பாதிப்பை, மண் பாத்திர சமையல் குறைக்கிறது. உணவு சூடாக சற்று நேரம் எடுப்பது போலவே, உணவு சமைத்த பின்னரும் நெடு நேரம் சூடு தங்கியிருக்கும். உணவு வேக வைக்கும் நேரம் குறைகிறது. காசரோல், ஹாட் பாக்ஸ் இல்லாத காலங்களிலேயே உணவை அதன் ருசி கெடாமல் நீண்ட நேரம் வைத்திருக்க மண் பாண்ட சமையல் உதவி இருக்கிறது.
பூரி ஜெகந்நாதர் ஆலய பிரசாதங்கள் தனித்துவ ருசியில் இருப்பதற்கு மண் பாண்டங்களில் சமைக்கப்படுவதே காரணமாகக் கூறப்படுகிறது. குத்வா எனப்படும் பெரிய அளவிலான மண் சட்டிகளில் வெப்பத்தைத் தாங்கும் வகையில் இந்த மண் பாத்திரங்களை வடிவமைத்துள்ளனர்.
அகன்ற வாய் உள்ள மண் பாண்டங்கள் ஒரே சீராக வெப்பத்தை கடத்தி உணவுப் பொருட்களை ஒரே மாதிரியாக வேக துணை புரிகிறது. வேகும் நேரத்தையும் குறைத்து உணவின் சுவையைக் கூட்டுவதால் மண் பாண்ட சமையல் சிறப்பு பெறுகிறது.
மண் பாண்டத்தில் சமைப்பதால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த முடிகிறது. உணவின் சத்துக்களும் முழுமையாக கிடைக்க ஏதுவாகிறது. பராமரிப்பதற்கு சுலபமான மண் பாண்டங்களை சமையலுக்கு பயன்படுத்துவோம். ஆரோக்யத்தை காப்போம்.