

கோடை கால உஷ்ணத்தின் தாக்கத்தால் நம் உடல் நீர்ச்சத்தை இழந்து சோர்வடைவது வழக்கம். அந்த இழப்பை ஈடு செய்ய நாம் பல வகையான பானங்களை அருந்தி வருகிறோம். மதிய உணவை எடுத்துக்கொண்ட பின் நம் உடலின் மந்த நிலை மேலும் அதிகரிக்கிறது. அந்நிலையில் உட்கொண்ட உணவு ஜீரணமாவதில் தாமதம் ஏற்படுகிறது. உறுப்புகளுக்கு இரத்தத்தின் அளவு சரிவர சென்றடைவதிலும் சிக்கல் உண்டாகிறது. இதனால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் உடல் சோர்வடைகிறது.
உடல் நீரேற்றம் பெற இம்லி (புளி) வாட்டர் சிறந்த முறையில் உதவுவதாக International journal of Innovative Research in Technology வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் புளிய மரத்தின் விதை, வேர், இலை, பழம் மற்றும் பட்டை என பல பாகங்களும், இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பாரம்பரிய மருத்துவத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிய உணவுக்குப் பின் உண்டாகும் மந்த நிலை நீங்க, இம்லி வாட்டரில் சீரகம் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து குடிக்கலாம். இதனால் புளி நீரின் சுவை கூடும். ஜீரண சக்தி அதிகரிக்கும். பித்தப் பையிலிருந்து தேவையான அளவு பித்த நீர் வெளிப்பட்டு குடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்கவும், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உடைத்து எளிதில் ஜீரணமாகவும் உதவும்.
புளியில் இயற்கையாக உள்ள அமிலங்கள் ஜீரணத்திற்கு உதவும் என்சைம்களை ஊக்குவிக்கின்றன. இம்லி வாட்டரில் அதிகளவு தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட்கள் சேர்ந்திருப்பதால் உடலை நீரேற்றம் குறையாமலும் குளிர்ச்சியுடனும் வைத்துப் பராமரிக்க முடியும். இதனால் மதிய நேர அசௌகரியங்கள் நீங்கவும், இரைப்பை குடல் இயக்க செயல்பாடுகள் குறைவின்றி நடைபெறவும் முடியும்.
பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் இம்லி வாட்டர் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.
அவற்றில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள், சிந்தடிக் ஃபுட் கலர்கள் (Synthetic Food Colours), பதனப் பொருட்கள் போன்ற இரசாயன சேர்மங்கள் நாளடைவில் குடல் இயக்க உறுப்புகள் சேதமடைவதற்கு காரணிகளாகி விடும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில், கொட்டை நீக்கிய புளியை ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி, அதில் வறுத்துப் பொடித்த சீரக தூள், பிளாக் சால்ட், வெல்லம், புதினா போன்றவை சேர்த்து அருந்தலாம்.
புதினா நச்சுக்கள் நீங்கவும், புத்துணர்ச்சி தரவும் உதவும். சென்ஸிட்டிவ் ஸ்டமக் (Sensitive stomach) போன்ற குடலின் தன்மைக்கேற்ப ஒவ்வொருவரும் புளி மற்றும் இனிப்பின் அளவை குறைத்து உபயோகிப்பது நலம். அதிக புளிப்பு அசிடிட்டி உண்டாக காரணமாகிவிடும்.
அதிக இனிப்பு உடல் சத்துக்களை உறிஞ்சும் அளவில் பாதிப்பை உண்டு பண்ணக் கூடும். பொதுவாக இம்லி வாட்டரை லைட்டான கரைசலாக தயாரித்து அருந்துவது நற்பலன் தரும்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வேறு வகை உடல் உபாதைகளுக்கு தொடர்ந்து மருத்துவ உதவி பெறுபவர்கள், அவர்களின் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் இந்த பானத்தை அருந்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.