பொதுவாகவே, மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் இன்றியமையாதது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைசுற்றல், படபடப்பு ஏற்படும். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால், இரத்த ஓட்டம் சரியாக இருக்கும். இரத்த ஓட்டம் சரியாக இருந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும். நமது உடலுக்கு தினந்தோறும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குறைந்த அளவு நீர் குடிப்பவர்களுக்கு சிறுநீர் பாதையில் கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம். சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகி அறுவை சிகிச்சையின் மூலம் அதை அகற்றிவிட்டாலும் கூட, மீண்டும் சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகாமல் தடுக்க நாள்தோறும் 2 முதல் 3 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். அப்படி என்றால் அதற்கு இரண்டு பங்கு நீரை அவர்கள் குடிக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிக்காவிட்டால், மூலப்பொருட்களின் அடர்த்தி காரணமாக அடர்த்தியான சிறுநீர் வரும். மேலும், உடல்நலனை பாதிக்கும். சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் மற்றவர்களை விட 1.5 லிட்டர் தண்ணீர் அதிகம் குடிக்க அதுவே மருந்தாக வேலை செய்யும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நீங்கள் குறைந்த அளவு சாப்பிட்டு, போதுமான உடற்பயிற்சி செய்தும் உங்கள் குண்டு உடம்பு குறையவில்லையா? நீங்கள் போதுமான அளவில் தண்ணீர் குடிக்க வில்லை என்று அர்த்தம். உடலுக்குத் தேவையான தண்ணீரைக் குடித்து வந்தால் உடல் எடை ஒரே அளவாக கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பசியை தள்ளிப்போடும் ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. உணவிற்கு சற்று முன் கொஞ்சம் தண்ணீர் குடிக்க குளிர்ச்சியான நீரால் குடல் சுருங்கிவிடும். அதனால் அதிகமாக சாப்பிட முடியாது.
காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். ஒரு புத்துணர்ச்சி வருவதை காண்பீர்கள். போதுமான தண்ணீர் அருந்தும்போது உடலின் முக்கிய பாகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகளை எல்லாம் எளிதாக வெளியேற்றும். உங்கள் சருமத்தில் புதிய பொலிவு வரும். பார்ப்பதற்கு மிகவும் இளமைத் தோற்றம் வந்து விடும்.
மனித மூளையில் தாகம் குறித்த உணர்வைத் தூண்டும் மையம் உள்ளது. இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்னும் உணர்வு நமக்குத் தோன்றுகிறது. 3 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் மூளையில் தாக மையத்தின் தூண்டல் இருக்காது. அதனால் இந்த வயதில் இருப்பவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றாது. அவர்களுடைய தாகத்தை அறிந்து நீரை அளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இரத்த அழுத்தமும் குறையும்.
பெண்கள் கருவுற்றிருக்கும்போது இரண்டரை லிட்டர், தாய்பால் கொடுக்கும்போது 3 லிட்டர் குறைந்தபட்சம் நீர் அருந்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடலில் நீரின் அளவு குறையும்போது இரத்த அழுத்தம் குறைந்து, அடிக்கடி மயக்கம் அல்லது தலைச்சுற்றல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படும். குறிப்பாக, திடீரென உட்கார்ந்து எழும்போது அல்லது உட்காரும்போது இந்த மாதிரியான உணர்வுகள் ஏற்படும். இது உடலில் போதியளவு நீர் இல்லை என்பதையே உணர்த்துகின்றது.
போதியளவு தண்ணீர் குடிக்காவிடில் மலச்சிக்கல் முதல் உடல் சோர்வு வரை ஒட்டுமொத்த நோய்கள் ஏற்படுவதற்கும் இது காரணமாக அமையும். சாப்பிடுவதற்கு முன் 250 மி.லி. தண்ணீர் குடிக்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.