

இந்திய உணவுமுறைகளில் அரிசி ஒரு முக்கிய அங்கமாகவே உள்ளது. உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகளவில் அரிசி உணவை உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அரிசி இல்லாமல் தென்னிந்திய உணவு முழுமையடையாது. தலைமுறை தலைமுறையாக அரிசி உணவுகள் இப்பகுதி மக்களின் கலாச்சாரம் மற்றும் உடலியக்கத்தோடு இரண்டறக் கலந்துள்ளன.
இப்பகுதியில் பெரும்பாலான உணவுகளுக்கு இதுவே அடித்தளமாகும். குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் தினமும் அரிசி சாப்பிடுகிறார்கள். இது எளிமையான மற்றும் விரிவான உணவுகள் இரண்டிலும் பயன்படுத்தப்படுவதால், தென்னிந்திய உணவுப் பண்பாட்டின் ஒரு இன்றியமையாத பகுதியாக விளங்குகிறது. இது வேகவைத்த சோறாக, இட்லி, தோசை போன்ற நொதிக்கவைக்கப்பட்ட உணவுகளாகவும், பல்வேறு பாரம்பரிய கலவை சாதங்களாகவும் தினமும் உட்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக இல்லதரிசிகள் அரிசியை வாங்கும் போது, பளபளப்பாகவும், எளிதில் வேகக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இப்படி வெண்மையும், அதிக சத்துக்களும் நிறைந்த அரிசி ரகம் தான் தூயமல்லி அரிசி.
தூயமல்லி அரிசி என்பது தமிழ்நாட்டின் பயிரிட்ட பாரம்பரியமிக்க நெல் வகைகளில் ஒன்றாகும். நெற்கதிர் வரும் தருணத்தில் மல்லிகை மொட்டு போல் வெண்மையாக காட்சியளிப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. பூச்சிக்கொல்லி மருந்துகளின்றி விளையக்கூடிய இந்த அரிசி, உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
தமிழர்கள் பாரம்பரிய அரிசியான தூயமல்லி, முற்காலத்தில் மன்னர்களின் விருப்பமான அரிசியாக இருந்தது. இந்த அரிசியை சமைக்கும் போதே தனித்த வாசனையை உணர முடியும்.
தமிழ்நாட்டிற்கே உரித்தான தூயமல்லி அரிசிக்கு தனித்துவ புவிசார் குறியீடு (Geographical Indication) பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதை அடிப்படையாகக் கொண்ட தமிழர் உணவு முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூயமல்லி அரிசி சாதத்தை உட்கொண்டு வந்தனர்.
குறிப்பாக, மெருகூட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு மாற்றான தூயமல்லி அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கிளைசெமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) குறைவாகவும் இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
செரிமானத்தை எளிதாக்கி, உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்க உதவுவதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த அரிசி சிறந்தது. இதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.
இதில் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனை தொடர்ந்து உட்கொள்ளும்போது தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துவதுடன் உடலின் அனைத்து ஜீவாதார உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. குறிப்பாக, உடலை இயக்கும் மத்திய நரம்பு மண்டலத்திற்கு தூயமல்லி அதிக நன்மை பயக்கும்.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சிறுகுடலில் உணவு செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலை போக்குவதுடன் உறுப்புகளின் தேய்மானத்தை சரிசெய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
தூயமல்லி அரிசியில் புரதம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகிய நுண் சத்துக்கள் உள்ளன. இது உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. இதில் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
நீண்ட காலமாக நோய்களால் உடல் தளர்ச்சி அடைந்தவர்கள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது.
சிலருக்கு உடம்பில் அதிகளவு பித்தம் இருப்பதால், அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும். இதைத் தடுக்க தூயமல்லி அரிசியில் உணவு செய்து சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்னைகள் கட்டுக்குள் வரலாம். இதோடு, வாதம், கபம் ஆகியவையும் சரியாகும்.
தூயமல்லி அரிசியை தொடர்ந்து உட்கொள்ள மூட்டுவலி, முதுகுவலி, இடுப்பு வலி போன்ற உபாதைகள் குணமாகும் என சித்த மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
தூயமல்லி அரிசி மட்டுமல்லாமல், அதனுடைய தவிட்டிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதைக் கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்து வந்தால் ஆரோக்கியமாக வளரும்.
இந்த அரிசி பார்ப்பதற்கு பொன்னி அரிசி போல் இருந்தாலும், சற்றே கடினமானதாக இருக்கும். இதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் காரணமாக பிரியாணி, புலாவ் போன்ற உணவுகள் செய்ய இது மிகச் சிறந்த தேர்வாகும்.
மேலும், பாரம்பரிய முறையில் வடித்த சோறு, இட்லி, மற்றும் தோசை செய்யவும் இதைப் பயன்படுத்தலாம். இதன் முழுப் பலனையும் பெற, சமைப்பதற்கு முன் இந்த அரிசியை 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.
பொதுவாக இதனை உள்ளூர் இயற்கை அங்காடிகள் (organic stores), பெரிய உழவர் சந்தைகள், பாரம்பரிய நாட்டு அரிசி விற்பனை அங்காடிகள் (Traditional Rice Mandies) மற்றும் Khadi Kraft கடைகளில் கிடைக்கும். மேலும், இவற்றை Uzhavar Kalam, Ulamart மற்றும் Thendral Natural Foods போன்ற இணையதளங்கள் வழியாகவும் எளிதாக ஆர்டர் செய்து வாங்கலாம்.
ஆன்லைன் சந்தைகளில் ஒரு கிலோ தூயமல்லி அரிசியின் விலை தோராயமாக ரூ.80 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. ஆர்கானிக் மற்றும் பிராண்டட் வகைகளைப் பொறுத்து இதன் விலை மாறுபடும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference