சர்க்கரை அளவு திடீரென குறைந்தால் என்ன செய்ய வேண்டும்? உயிரைக் காக்கும் 15-15 விதி!

மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்படும் போது உடனே சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டியவை.
Hypoglycemia | சர்க்கரை அளவு
Hypoglycemia | சர்க்கரை அளவு
Updated on

ஒரு மைதானத்திற்கு தினசரி நடக்கச் செல்லும் பொழுது சில சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென்று தலை சுற்றல் வந்து விட்டால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பிஸ்கட் இருக்கா, சாக்லேட் இருக்கா என்று கேட்பது உண்டு. ஒருமுறை ஒரு பெரியவர் சட்டை பாக்கெட்டில் வைத்து இருந்த ஜீனியை அவர் வாயில் போட்டு உதவி செய்தார்.

இதுபோன்ற சமயங்களில் சர்க்கரை நோயாளிகள் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் எவற்றையெல்லாம் சாப்பிட வேண்டும் தவிர்க்க வேண்டும். மேலும் ர்க்கரை நோயாளிகள் (Diabetics) தங்கள் ஆரோக்கியத்தைக் காக்கவும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை (Blood Sugar Levels) எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சில மிக முக்கியமான, எளிமையான வழிகாட்டுதல்கள் என்னவென்று இப்பகுதியில் காண்போம்.

உணவுக் கட்டுப்பாடு:

​சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் 70% பங்கு நாம் சாப்பிடும் உணவிற்குத்தான் உள்ளது.

கிளைசெமிக் இண்டெக்ஸ் (Glycemic Index): இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகக் கலக்கும் குறைந்த GI கொண்ட உணவுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதற்கு உணவில் ​சேர்க்க வேண்டியவை: கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள், தவிடு நீக்கப்படாத கைக்குத்தல் அரிசி, கோதுமை மற்றும் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் (பாகற்காய், புடலங்காய், முருங்கைக்காய், கீரைகள்).

தவிர்க்க வேண்டியவை: வெள்ளை அரிசி சாதம், மைதா, சர்க்கரை, இனிப்புகள், உருளைக்கிழங்கு மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள்.

பழங்கள்: பலாப்பழம், மாம்பழம், பேரீச்சம்பழம் போன்ற இனிப்பு மிகுந்த பழங்களைத் தவிர்த்துவிட்டு. ஆப்பிள், கொய்யா, மாதுளை மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடலாம்.

இப்படி சாப்பிடுவதால் ஒரு சம நிலையான உணவை சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

சிறிய இடைவெளிகளில் சாப்பிடுதல்:

​ஒரே நேரத்தில் வயிறு முட்ட அதிகமாகச் சாப்பிடக் கூடாது. இது சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்திவிடும். அதற்குப் பதிலாக காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவைச் சற்றுக் குறைத்துக் கொண்டு, இடைப்பட்ட நேரங்களில் (Snack time) சுண்டல், வெள்ளரிக்காய் அல்லது மோர் போன்றவற்றைச் சிறிய அளவில் எடுத்துக்கொள்ளலாம். இப்படி சாப்பிடுவதால் அதிகமாக பசிப்பதை தவிர்க்கலாம். வேலைகளில் சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும்.

Walking | சர்க்கரை அளவு
Walking | சர்க்கரை அளவு

உடற்பயிற்சி:

​தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி (Brisk Walking) செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்யும் போது இன்சுலின் ஹார்மோன் வேலை செய்யும் திறன் அதிகரித்து, தசை நார்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

மன அழுத்தம் மற்றும் தூக்கம்:

​மன அழுத்தம் (Stress) அதிகரிக்கும் போது உடலில் 'கார்டிசோல்' (Cortisol) போன்ற ஹார்மோன்கள் சுரந்து, சர்க்கரை அளவை தானாகவே உயர்த்திவிடும். எனவே, தியானம் அல்லது யோகா மூலம் மனதை அமைதியாக வைத்திருக்கவும்.

​தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.

வழக்கமான பரிசோதனை:

​மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளையோ அல்லது இன்சுலினையோ ஒருநாளும் தவிர்க்காமல் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

​மாதம் ஒரு முறை இரத்த சர்க்கரை அளவையும் (Fasting & Post-Prandial), 3 மாதங்களுக்கு ஒருமுறை HbA1c (சராசரி சர்க்கரை அளவு) பரிசோதனையையும் செய்துகொள்வது நல்லது. சிலர் நோய் கண்ட புதிதில் டாக்டரிடம் சென்று செக் அப் செய்து அவர்களுக்கு அப்பொழுது டாக்டர் பரிந்துரைத்த அந்த மருந்து சீட்டை வைத்துக் கொண்டே பல வருடங்கள் அதே மருந்தை வாங்கி சாப்பிடுவதை காண முடிகிறது. அப்பேற்பட்டவர்கள் இதை கவனத்தில் கொள்வது மிக மிக அவசியம்.

​முக்கியமான எச்சரிக்கை (Hypoglycemia): சில நேரங்களில் சர்க்கரை அளவு திடீரெனக் குறைந்துவிடலாம் (கை, கால் நடுக்கம், தலைசுற்றல், அதிகப்படியான வேர்வை). அத்தகைய அவசரக் காலத்திற்காக எப்போதும் உங்களோடு 2 ஸ்பூன் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் மிட்டாய் கைவசம் வைத்திருப்பது மிக மிக அவசியம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரெனக் குறைவதை 'ஹைப்போகிளைசீமியா' (Hypoglycemia) என்று மருத்துவ உலகில் கூறுவார்கள். இந்த அவசரக் காலத்தில் உடனடியாக சர்க்கரை அல்லது குளுக்கோஸ் சாப்பிடச் சொல்வதற்குப் பின்னால் மிக முக்கியமான அறிவியல் மற்றும் மருத்துவக் காரணங்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டு கடைப்பிடிப்பது மிக மிக அவசியம். அதற்கான சில ஆலோசனைகள்இதோ.

மூளைக்குத் தேவைப்படும் உடனடி ஆற்றல்:

​நமது உடலின் மற்ற பாகங்கள் தங்களுக்குத் தேவையான ஆற்றலைத் தற்காலிகமாகப் கொழுப்பிலிருந்தோ அல்லது புரதத்திலிருந்தோ பெற்றுக் கொள்ளும். ஆனால், நமது மூளையால் 'குளுக்கோஸ்' (Glucose) மூலமாக மட்டுமே இயங்க முடியும்.

​இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது, மூளைக்குச் செல்லும் ஆற்றல் தடைபடுகிறது. இதனால் தான் உடனடியாகத் தலைசுற்றல், குழப்பம், கண்பார்வை மங்குதல், நடுக்கம் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

Diabetes
Diabetes

​சர்க்கரையின் அதிவேக ஜீரணத்திறன் (Fastest Absorption):

​நாம் சாப்பிடும் சாதாரணச் சர்க்கரை (Sucrose) என்பது மிக எளிய கார்போஹைட்ரேட் வடிவமாகும். இதனை உடல் செரிமானம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. வாயில் போட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, இது உமிழ்நீர் மற்றும் வயிற்றின் மூலம் உறிஞ்சப்பட்டு, நேரடியாகவும் மிக வேகமாகவும் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உயர்த்திவிடும். இதனால் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் மூளை மற்றும் இதயம் உடனடியாகப் புத்துணர்ச்சி பெற்று நோயாளி மயக்க நிலைக்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படுகிறார்.

​'15-15 விதி' (The 15-15 Rule):

​கண் மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் சங்கங்கள் (ADA) சர்க்கரை குறையும் போது இந்த விதியைப் பின்பற்றச் சொல்கின்றன:

​சர்க்கரை அளவு 70 mg/dL-க்குக் கீழே குறைந்தால், உடனடியாக 15 கிராம் வேகமாகக் கரையக்கூடிய சர்க்கரையைச் சாப்பிட வேண்டும்.

​(உதாரணமாக: 3 தேக்கரண்டி சாதாரணச் சர்க்கரை, அல்லது 1/2 கப் பழச்சாறு அல்லது 4 குளுக்கோஸ் மிட்டாய்கள்).

​சாப்பிட்ட பிறகு 15 நிமிடங்கள் காத்திருந்து மீண்டும் சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும். அப்போதும் சர்க்கரை ஏறவில்லை எனில் மீண்டும் 15 கிராம் சர்க்கரை சாப்பிட வேண்டும்.

ஏன் சாக்லேட் அல்லது பிஸ்கட் சாப்பிடக் கூடாது?

​பலர் சர்க்கரை குறைந்தவுடன் சாக்லேட், ஐஸ்கிரீம் அல்லது பிஸ்கட் சாப்பிடுவார்கள். அது தவறு. ஏனெனில், அவற்றில் கொழுப்பு (Fat) மற்றும் புரதம் அதிகம் இருக்கும். இவை சர்க்கரையை உடல் உறிஞ்சும் வேகத்தைக் குறைத்துவிடும். நமக்கு அந்த நேரத்தில் தேவை அதிவேகமாக இரத்தத்தில் கலக்கும் சர்க்கரை மட்டுமே.

இதையும் படியுங்கள்:
முடி வளர்ச்சிக்கும் பளபளக்கும் சருமத்திற்கும் சிறந்த தேர்வு எது: பயோட்டினா அல்லது கொலாஜனா?
Hypoglycemia | சர்க்கரை அளவு

முக்கியக் குறிப்பு: சர்க்கரை நோயாளி ஒருவருக்குச் சர்க்கரை குறைந்து அவர் மயக்கமடைந்துவிட்டால், வாயில் சர்க்கரையையோ தண்ணீரையோ வலுக்கட்டாயமாக ஊற்றக் கூடாது. அது மூச்சுக்குழாய்க்குள் சென்று உயிருக்கே ஆபத்தாய் முடியலாம். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குளுக்கோஸ் குப்பி (IV Glucose) ஏற்ற வேண்டும்.

இது போன்ற முதலுதவி குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வதற்கு இந்த கட்டுரையை வாசிப்பது நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுதும், நடைப்பயிற்சி, கூட்டமான இடங்கள், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் நிற்கும் பொழுதும் சிலர் இதுபோல் மயங்கி விழுவதைக் காண முடியும். அப்பொழுது அருகில் இருப்பவர்கள் பதட்டப்படாமல் இந்த சிறு உதவிகளை செய்வதையும் காணலாம். சிலர் இந்த சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் வந்து அவதிப்படுவதும் உண்டு. அதை பார்த்ததும் தான் இந்த கட்டுரையை எழுதத் தூண்டியது.

சர்க்கரை நோயாளிகள் (Diabetes) இரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைப்பதற்கும், எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கும் மருத்துவ உலகம் முதன்மையான ஆதாரமாக ஏற்பது 'நீரிழிவு தட்டமைப்பு' (Diabetes Plate Method) என்னும் ஊட்டச்சத்து வழிகாட்டுதலாகும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் 🍦 கொடுக்கலாமா? சளி பிடிக்குமா? மருத்துவரின் உண்மை அறிக்கை!
Hypoglycemia | சர்க்கரை அளவு
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com