

சிறுநீர் பாதை தொற்று(UTI) என்பது சிறுநீரகம் சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர் குழாய் ஆகியவற்றில் பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு பொதுவான பாதிப்பாகும்.
அறிகுறிகள்:
சிறுநீர் கழிக்கும்பொழுது வலி அல்லது எரியும் உணர்வு ஏற்படுவது.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படும். ஆனால் சிறிதளவே வெளியேறும்.
சிறுநீரில் துர்நாற்றம் ஏற்படுவது, சிறுநீர் கலங்கலாக ரத்தம் கலந்து வருவது.
முதுகு மற்றும் இடுப்பு வலி அல்லது அடிவயிற்றில் அழுத்தம், தசைப் பிடிப்பு.
காய்ச்சல், குளிர், முதுகு வலி போன்றவை சிறுநீரகத் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
காரணங்கள்:
பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகளால் சிறுநீர்ப் பாதை பாதிக்கப்படும் பொழுது சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படுகிறது. குறிப்பாக ஈ.கொலி(E.coli) பாக்டீரியா சிறுநீர் பாதையில் நுழைவதால் தொற்று ஏற்படுகிறது.
சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவது பாக்டீரியா பெருக்கத்திற்கு வழி வகுக்கும்.
மலம் கழித்த பின்பு முறையற்ற வகையில் பின்னிருந்து முன்புறம் சுத்தப்படுத்துவது பாக்டீரியா பரவலுக்கு முக்கிய காரணமாகிறது.
குறைவாக தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் வெளியேற்றம் குறைந்து, பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையில் தங்கி வளர நேரிடுகிறது.
மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பின்பு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடற்கூறு மாற்றங்கள் சிறுநீர் தொற்றுக்கு வழிவகுக்கும்.
சர்க்கரை நோய் அல்லது சிறுநீரகக் கற்கள் இருந்தாலும் தொற்று ஏற்படலாம்.
தீர்வுகள் மற்றும் தடுப்பு முறைகள்:
தினமும் போதுமான அளவு (3 லிட்டர்) தண்ணீர் அருந்துவது பாக்டீரியாவை வெளியேற்ற உதவும்.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் வெளியேற்றி விடுவது நல்லது.
காஃபின், ஆல்கஹால் மற்றும் காரமான உணவுகளைக் குறைப்பது சிறுநீர்ப்பை எரிச்சலை தவிர்க்க உதவும்.
கழிவறை பயன்பாட்டிற்கு பின் சுகாதாரத்தைப் பேணுவது அவசியம்.
கிருமிகள் சிறுநீர் பாதையில் பரவாமல் இருக்க, முன் பகுதியிலிருந்து பின் பகுதியை நோக்கி சுத்தம் செய்ய வேண்டும்.
தடுப்பு முறைகள்:
வைட்டமின் சி சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளை தடுக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டிருக்கிறது. எனவே உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்ப்பது நல்லது. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களும், குடைமிளகாய், கிவி போன்றவையும் வைட்டமின் சி நிறைந்தவை.
நல்ல பாக்டீரியா என்றழைக்கப்படும் புரோபயாடிக்குகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், சிறுநீர் பாதையில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உணவில் புரோபயாடிக் நிறைந்த தயிர், மோர், பழைய சோறு, ஊறுகாய், கெஃபிர்(Kefir), சீஸ் போன்ற உணவுகளை சேர்ப்பது நல்லது.
அறிகுறிகள் கடுமையாக இருந்தால் அல்லது காய்ச்சல், குளிர் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிறுநீர் பரிசோதனை (Urine Routine/Culture) செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotics) மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து சிகிச்சை பெறுவது அவசியமாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)