
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சமூக வலைதளங்களில் அதிகப்படியான நேரத்தை செலவிடுகிறார்கள். இப்படி சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் பொழுது உடல் நலமும், மனநலமும் பாதிக்கப்படும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சமூக வலைதளங்களை ஒரு நாள் கூட பார்க்காமல் இருக்க முடியவில்லையா? சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிப்பவரா? அடிக்கடி ஸ்க்ரால் செய்து கொண்டே இருப்பவர்களா? அப்படியானால் பிரெயின் ராட் (Brain Rot) பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என கூறப்படுகிறது.
'பிரெயின் ராட்' - ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் மனநலம் அல்லது அறிவு சார்ந்த தன்மை பாதிக்கப்படும் நிலை. தேவையற்ற விஷயங்களை அதிகமாக பார்ப்பதன் விளைவாக ஏற்படும் நிலை இது. இந்த 'பிரெயின் ராட்' என்ற வார்த்தை இணையம் உருவாக்கப்படுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது.
அதிகப்படியான வீடியோக்களை பார்ப்பதும், அடிக்கடி சமூக ஊடகங்களில் சென்று அதிக நேரம் செலவழிப்பதும் என அதிகப்படியான டிஜிட்டல் மீடியாவின் பயன்பாடுகளை 'பிரெய்ன் ராட்' என்று அழைக்கிறோம்.
எந்தவித பயனுமற்ற விஷயங்களை பார்ப்பது என்பது இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. இதனால் மன அழுத்தம், கோபம், ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை, குறிப்பாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கவனச்சிதறல் அதிகரிக்கும். தூக்கம் கெடும். தூக்கம் கெடுவதால் பல நோய்களுக்கு வழி வகுக்கும். இப்படி வலைதளங்களுக்கு அடிமையாவதால் சமூகத்துடன் ஒத்து வாழாமல் தனிமையை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள். உடல் சோர்வையும், மனசோர்வையும் ஏற்படுத்தும் இதிலிருந்து வெளிவர முயல வேண்டும். இதை டிஜிட்டல் டிடாக்ஸ் (digital detox) என்று சொல்வார்கள்.
அதிகப்படியான உபயோகத்தில் இருந்து வெளிவர முதலில் பெற்றோர்கள் ஆன்லைனில் நிறைய நேரம் செலவிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கும் அர்த்தமற்ற, பயனற்ற விஷயங்களை பார்ப்பதால் எவ்வளவு கால விரயம் ஏற்படும் என்பதை புரிய வைக்க வேண்டும். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.இதிலிருந்து விடுபட நடை பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, நீச்சல் போன்ற ஆரோக்கியமான பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டு நண்பர்களுடன் விளையாடுவது, நல்ல புத்தகங்களை படிப்பது, புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வது என நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் இதன் பயன்பாடு வெகுவாகக் குறையும். பொழுதுபோக்குக்காக பயன்படுத்தாமல் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். உலகில் எவ்வளவோ விஷயங்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும், பழகுவதற்கும் இருக்க பயனற்ற ஒன்றிற்காக நேரத்தை செலவிடுவது சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்கும்.
உண்மையில் 'பிரெயின் ராட்' என்னும் ஒரு பாதிப்பு இருப்பதற்கான எந்த விதமான ஆதாரம் இல்லை என்றாலும் தேவையற்ற தகவல்களை சமூக வலைதளம் மூலம் பார்க்க நேரும் பொழுது மனச்சோர்வு, கவனச் சிதறல் மற்றும் உடல் சோர்வு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது இளம் தலைமுறைகளின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். சவால் மிக்க ஆழ்ந்த சிந்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் சமூகத்தின் போக்கையே மாற்றிவிடும். பயனற்ற இம்மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துவது தேவையற்றது என்பதை உணர்ந்து ஆக்கப் பூர்வமான விஷயங்களில் ஈடுபடுவதே தனிநபர் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.