

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குக் கால் மட்டும் ஏன் கருப்பாக உள்ளது? இதற்கான காரணம், அறிகுறிகள்(Diabetic symptoms) மற்றும் சிகிச்சைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நீண்ட நாட்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் கால் நரம்புகள் பாதிப்படையும். இந்த நரம்புகள் பாதிப்படையும்போது காலின் வடிவம் மாறுகிறது. காலின் வடிவம் மாறிவிட்டால், ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தின் காரணமாகக் காலில் புண் இருந்துகொண்டே இருக்கும். சில சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் புண் பல வருடங்களாக ஆறாமல் இருக்கும். மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டாலும் இது எளிதில் குணமாவதில்லை.
கால்கள் கருப்பாவதற்கான காரணங்கள்:
முதலில் ரத்தக்குழாயில் ஏற்படும் பாதிப்புகள். இதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:
Peripheral Vascular Disease: இது இதயத்திலிருந்து கால்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்பு. இந்த ரத்தக்குழாய்களில் கொழுப்பு அதிகமாகப் படிந்து ரத்த ஓட்டம் குறையும். இதனால் செல்களைச் சென்றடையும் பிராணவாயு (Oxygen) குறைகிறது. இதன் விளைவாகத் தோல்கள் கருப்பாகும், கால்கள் சில்லென்று மாறிவிடும். இந்த நிலையில் புண் வந்தால் அவ்வளவு எளிதில் ஆறாது.
Varicose Veins: இது அதிக நேரம் நின்றுகொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு வரும். போக்குவரத்து காவலர்கள், டீ மாஸ்டர்கள் போன்றவர்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். நீண்ட நேரம் நிற்பதால் கால்களில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்தம் தேங்க ஆரம்பிக்கும். இதனால் ரத்தக்குழாய்கள் விரிவடைந்து, கால் வீங்கி, கருமை நிறமாக மாறும். ரத்தம் கால்களுக்குச் செல்லாமல் இருந்தாலும் ஆபத்து; சென்ற ரத்தம் மீண்டும் இதயத்திற்குத் திரும்பாமல் தேங்கினாலும் ஆபத்து. இந்த இரண்டு நிலைகளிலும் கால்கள் கருப்பாகும், புண் வந்தால் ஆறாது. இது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்: இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது காலில் எரிச்சல், ஊசி குத்துவது போன்ற உணர்வு, மதமதப்பு மற்றும் உணர்ச்சிக் குறைதல் போன்ற பிரச்னைகள் தோன்றும். உடல் எடை அதிகமாக இருந்தால், காலிலிருந்து ரத்தம் இதயத்திற்குத் திரும்பி வர முடியாத அளவு அழுத்தம் ஏற்படும். இதனாலும் கால் கருப்பாகத் தோன்றும். சிலருக்கு இது பூஞ்சைத் தொற்று (Fungal infection), எக்ஸிமா (Eczema) அல்லது சருமத்தில் ஏற்படும் வறட்சி (Skin Dryness) போன்ற சரும பிரச்னையாகவும் இருக்கலாம்.
தீர்வுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்:
நீண்ட நேரம் நின்று வேலை பார்ப்பவர்கள் இடையிடையே சற்று ஓய்வெடுத்துவிட்டு வேலை பார்க்கலாம்.
உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
காலில் ஏற்படும் புண்களுக்குச் சுய மருத்துவம் பார்க்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
மிகவும் இறுக்கமான காலணிகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)