தினசரி உடற்பயிற்சி செய்வது நம்மை வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும், மனரீதியாக உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும். ஆனால், எந்த ஒரு நல்ல விஷயமும் அளவுக்கு மீறினால் எதிர்மறையான விளைவுகளையே தரும். உடற்பயிற்சியும் அப்படித்தான். சிலர், 'அதிகம் உழைத்தால் அதிக பலன்' என்ற எண்ணத்தில், தங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வை வழங்கத் தவறிவிடுகிறார்கள். இதனால், உடல் அசதி, சோர்வு, காயங்கள் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். உடற்பயிற்சியைத் தவிர்த்து, உங்கள் உடல் ஓய்வு கேட்கிறது என்பதை உணர்த்தும் 7 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. உடற்பயிற்சிக்குப் பிறகு ஓரிரு நாட்கள் தசை வலி ஏற்படுவது இயல்பு. ஆனால், இந்த வலி நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தால், அது உங்கள் தசைகள் மீண்டு வரப் போதுமான நேரம் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும். உடல் சோர்வு நீடித்தால், ஓய்வு தேவை என்று பொருள்.
2. வழக்கமாகச் செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்யக் கடினமாக உணர்வது, வேகம் குறைவது, தூக்கும் எடை குறைவது அல்லது சகிப்புத்தன்மை குறைவது போன்றவை உங்கள் உடல் ஓய்வு கேட்கிறது என்பதன் முக்கிய அறிகுறிகள்.
3. அதிகப்படியான உடற்பயிற்சி, ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி, தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். உடல் களைப்பாக இருந்தாலும் தூக்கம் வராமல் போனால், இது ஒரு எச்சரிக்கை மணியாகும்.
4. அதிகப்படியான உடல் பயிற்சி மன அழுத்த ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கலாம். இது எரிச்சல், மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் வழக்கத்தை விட அதிகமாகக் கோபப்படுவதாக உணர்ந்தால், ஓய்வு தேவை.
5. சிலருக்கு அதிகப்படியான உடற்பயிற்சி பசியின்மையை ஏற்படுத்தும், சிலருக்குக் குறிப்பிட்ட உணவுகளின் மீது அதீத பசியைத் தூண்டும். இவை இரண்டும் உடலில் ஏற்படும் சமநிலையின்மையைக் குறிக்கலாம்.
6. அதிகப்படியான உடற்பயிற்சி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தலாம். இதனால், சளி, காய்ச்சல் போன்ற சிறு நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் ஆளாக நேரிடும். உங்கள் உடல் விரைவில் நோய்வாய்ப்பட்டால், அது ஓய்வுக்கான அறிகுறியாகும்.
7. சிறுசிறு வலிகள், மூட்டு வலி அல்லது புதிய காயங்கள் ஏற்படுவது, உங்கள் உடல் அதிகப்படியான அழுத்தத்தில் உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். இந்தச் சமயத்தில் உடற்பயிற்சியைத் தொடர்ந்தால், அது தீவிரமான காயங்களுக்கு வழிவகுக்கும்.
உங்கள் உடல் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டினால், அதைக் கவனமாகக் கேட்டு ஓய்வெடுப்பது அவசியம். ஓய்வும், சரியான ஊட்டச்சத்தும் தசைகள் மீண்டு வரவும், உடலின் ஆற்றல் அளவை மீட்டெடுக்கவும் அத்தியாவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)