Loan EMI 
பொருளாதாரம்

மாதந்தோறும் EMI தொகையை அதிகப்படுத்துவது நன்மை தருமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

வங்கியில் கடன் வாங்கிய ஒருவர் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை EMI மூலம் கட்டி வரும் போது, EMI தொகையை அதிகப்படுத்தி கடனை விரைவில் அடைக்க நினைக்கலாம். அப்படி நாம் EMI தொகையை உயர்த்திக் கட்டுவது நல்லதா அல்லது வேறு ஏதேனும் வழியைத் தேர்ந்தெடுக்கலாமா என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

வங்கிகளில் வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் மற்றும் நகைக் கடன் என பலவிதமான கடன்கள் வழங்கப்படுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக் கடனையே அதிகளவில் வாங்குகின்றோம். ஏனெனில் சொந்த வீடு தான் இன்று பலரது கனவாக இருக்கிறது. இந்தக் கடனை அடைக்க சம்பளத்தில் ஒரு பகுதியை மாதந்தோறும் EMI வழியாக கட்டி வருகிறோம்.

இஎம்ஐ கட்டும் போது நாம் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் சில வங்கிகள் இஎம்ஐ மூலம், முதலில் வட்டித் தொகையைத் தான் வசூலித்துக் கொள்ளும். அதன்பிறகு தான் அசல் தொகை வசூலிக்கப்படும். ஆகையால் எந்தத் தொகை முதலில் வசூலிக்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. இல்லையெனில் வங்கியில் வாங்கிய கடன் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

சம்பள உயர்வு கிடைத்தால், இஎம்ஐ தொகையை அதிகப்படுத்த நீங்கள் நினைக்கலாம். உதாரணத்திற்கு, ரூ.12 இலட்சம் கடன் வாங்கிய ஒருவர், மாதாமாதம் இஎம்ஐ தொகையாக ரூ.12,500-ஐ 15 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும். அவரும் தொடர்ந்து இஎம்ஐ தொகையை கட்டி வருகிறார். திடீர் சம்பள உயர்வு காரணமாக இஎம்ஐ தொகையை அதிகமாக கட்டினால், கடன் விரைவில் தீர்ந்து விடும் என எண்ணுகிறார். இருப்பினும் அவருக்கு இது சரியாக இருக்குமா அல்லது வேறு ஏதேனும் வழிமுறையைத் தேர்ந்தெடுப்பது நல்லதா என்ற குழப்பம் உண்டாகும். இதேபோன்ற குழப்பங்கள் நம்மில் பலருக்கும் இருக்கின்றன.

நீங்கள் இஎம்ஐ தொகையை அதிகமாக்கி கடனை விரைவில் முடிப்பது நல்ல விஷயம் தான். இருப்பினும், நீங்கள் அதிகமாக கட்ட நினைக்கும் தொகையானது அசலில் தான் வரவு வைக்கப்படும். இஎம்ஐ தொகையில் நீங்கள் ரூ.3,000-ஐ அதிகப்படுத்த நினைக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்தத் தொகையை வங்கியில் கடனைக் குறைக்க கட்டுவதைக் காட்டிலும், ஓராண்டிற்கு ஏதேனும் ஒரு சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்து வாருங்கள். ஓராண்டின் முடிவில் கிடைக்கும் முதிர்ச்சித் தொகை, கடன் வாங்கிய அசல் தொகையில் ஒரு பகுதியைக் குறைக்க உதவியாக இருக்கும். இது ஒரு சிறந்த திட்டமிட்ட முறையாகவும் அமையும்.

மாதந்தோறும் இஎம்ஐ தொகையை அதிகரிப்பதை விடவும், சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் மொத்தத் தொகையையும் கடனை அடைக்க கட்டுவது சிறப்பாக இருக்கும். ஏனெனில் இதில் நமக்கு குறிப்பிட்ட அளவில் வட்டித் தொகையும் கிடைக்கும் அல்லவா! இப்படிச் செய்வதன் மூலமும் கடனை விரைவில் அடைக்க முடியும்.

நிலவின் வெப்பநிலை சரிந்தது எப்படி தெரியுமா?

டிஜிட்டல் திரையுலகில் குழந்தைகளை பாதுகாப்பாக வழிநடத்தும் முறைகள்!

தூக்கணாங்குருவிகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள் - கட்டிடக்கலை வல்லுநர்!

தீபாவளி ஸ்பெஷல் பட்டர் முறுக்கு செய்யலாம் வாங்க! 

படிக்கும்போது தூக்கம் வருகிறதா? அப்போ இவற்றை செய்யுங்கள்!

SCROLL FOR NEXT