Investment  
பொருளாதாரம்

முதலீட்டை விட முதலீடு செய்யும் நேரம் தான் முக்கியம்! ஏன் தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

முதலீடு செய்ய நினைத்து விட்டால் அதற்கானத் திட்டமிடலை உடனே தொடங்கி விட வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதால் எந்தப் பயனும் இருக்காது. நாம் முதலீடு செய்வது முக்கியமில்லை; எப்போது எந்த நேரத்தில் முதலீடு செய்கிறோம் என்பதே முக்கியம். எந்த வயதில் முதலீடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என இப்போது பார்ப்போம்.

முதலீடு செய்யும் நபர்கள் பெரும்பாலும் அதிக இலாபம் கிடைக்கும் திட்டம் எதுவென்று பார்த்து தான் முதலீட்டைத் தொடங்குகிறார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன. ஒன்று முன்கூட்டியே முதலீடு செய்வது; மற்றொன்று நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது. பொதுவாக நீண்ட கால முதலீடுகள் தான் அதிக இலாபத்தை அளிக்கின்றன. இளம் வயதில் நீண்ட கால முதலீடுகளைத் தேர்வு செய்தால், யார் தயவுமின்றி ஓய்வு காலத்தில் சிறப்பாக வாழலாம்.

பொதுவாக இன்றைய இளைஞர்கள் பலரும் 20 வயதில் இருந்தே சம்பாதிக்கத் தொடங்கி விடுகிறார்கள். இவர்கள் அப்போதே முதலீட்டைத் தொடங்குவது தான் நல்லது. இப்போது தானே சம்பாதிக்கத் தொடங்கியுள்ளோம்; சேமிப்பு, முதலீடு எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சில இளைஞர்கள் நினைப்பதுண்டு. இருப்பினும் இதில் தவறேதுமில்லை. ஆனால், வருங்காலத்தை சிறப்பாக மாற்ற இளம் வயதில் முதலீடு செய்வது தான் சிறந்தது என்ற புரிதலை இவர்கள் உணர வேண்டும்.

ஒருவர் 20 வயதில் ஒரு இலட்சத்தை முதலீடு செய்தால், முதலீட்டு காலம் முழுக்க ஆண்டு வருமானமாக 12% கிடைக்கும். மேலும் கூட்டு வட்டி அடிப்படையில் உங்களின் முதலீட்டுத் தொகை பெருகிக் கொண்டே இருக்கும். உங்களுக்கு 60 வயதாகும் போது ஒரு இலட்ச ரூபாய் முதலீடு 100 மடங்கு உயர்ந்து ஒரு கோடியாக திரும்ப கிடைக்கும். இதற்கு நீங்கள் 40 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும்.

20 வயதிற்கு பதில் ஒருவர் 30 வயதில் ஒரு இலட்சத்தை முதலீடு செய்தால், ஆண்டு வருமானம் 12% மற்றும் கூட்டு வட்டியும் கிடைக்கும். ஆனால் இதில் முதலீட்டுக் காலம் குறைவாக இருப்பதால், உங்களின் முதலீடு 30 ஆண்டுகளில் 30 மடங்கு மட்டுமே உயர்ந்து ரூ.30 இலட்சம் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் 40 வயதில் ஒரு இலட்சத்தை முதலீடு செய்தால், 20 ஆண்டுகளில் 10 மடங்கு மட்டுமே உயர்ந்து, ரூ.10 இலட்சம் கிடைக்கும். பத்து ஆண்டுகள் தாமதமாக முதலீட்டைத் தொடங்கினால், உங்களுக்கு கிடைக்கும் முதிர்வுத் தொகையில் எவ்வளவு மாற்றங்கள் நடக்கிறது என இப்போது தெரிகிறதா!

சிறிய முதலீட்டில் அதிக வருமினத்தைப் பெற நீங்கள் நினைத்தால், காலம் தாழ்த்தாமல் உடனே முதலீட்டைத் தொடங்குங்கள். நீண்ட கால முதலீடுகளுக்கு மற்ற திட்டங்களை விடவும் ஈக்விட்டி ஃபண்டுகள் அதிக வருமானத்தை அளிக்கின்றன. இருப்பினும் இதில் ரிஸ்க் அதிகம் என்பதால், நிதி ஆலோசகரை அணுகி முதலீடு செய்வது சரியாக இருக்கும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT