பொன்மகன் சேமிப்பு திட்டம்
பொன்மகன் சேமிப்பு திட்டம்  pixabay.com
பொருளாதாரம்

நீங்கள் ஆண் குழந்தையின் பெற்றோரா?அப்போ இந்த சேமிப்பு திட்டம் உங்களுக்குதான்!

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

த்திய அரசின் பொன்மகள் சேமிப்புத் திட்டம் (பெண்குழந்தைகளுக்கான சுகன்யா சம்ருத்தி திட்டம்) குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பாலின சமன்பாட்டிற்காக, ஆண் குழந்தைகளுக்காக, தமிழக அரசால் தொடங்கப்பட்ட, பொன்மகன் சேமிப்புத் திட்டத்தைக் குறித்து கேள்விப்பட்டுள்ளீர்களா? உங்களுக்கான பதிவுதான் இது.

ஆண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவுவதற்காக பொன்மகன் சேமிப்புத் திட்டம் 2015 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இதனுடைய முழுப் பெயர் பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம்.

பொன்மகள் சேமிப்பு திட்டத்தின் விதிமுறைகள்:

  • சிறுவன் தமிழ்நாட்டில் வசிப்பவனாக இருக்க வேண்டும்.

  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு உள்ளாக இருக்க வேண்டும்.

  • பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தினை சார்ந்தவனாக இருக்க வேண்டும்.

  • அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயில வேண்டும்.

  • ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண் குழந்தைக்கு மட்டுமே, இதில் அனுமதி உண்டு.

  • 10 வயதிற்கு உட்பட்ட சிறுவன் எனில், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் கணக்கு தொடங்க வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறுவன் எனில், சிறுவனின் பெயரிலேயே கணக்கு தொடங்க வேண்டும்.

சிறப்பம்சங்கள்;

  • குறைந்தபட்சம் ரூபாய்.100 முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூபாய். 500 முதலீடு செய்ய வேண்டும். எனவே, குறைந்த முதலீடுகளும் ஏற்கப்படுகின்றன.

  • அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.5 இலட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம்.

  • முதலீட்டுத் தொகைக்கு 80C வருமான வரிவிலக்கு விதியின் படி வரி விலக்கு உண்டு.

  • ஆண்டிற்கு 9.7% என்ற அருமையான வட்டி விகிதம் வழங்கப்படும். இது அவ்வப்போது, தமிழ்நாடு அரசால் மாற்றப்படலாம். நல்ல வட்டியின் காரணமாக, நல்லதொரு முதலீட்டு பெருக்கம் உண்டு.

  • 15 ஆண்டுக்களுக்கான திட்டம். மறுபடி 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம். சிறுவனின் எதிர்கால படிப்பிற்கு உதவும்.

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அஞ்சலகங்களில் முதலீட்டினைத் தொடங்கலாம்.

  • முதலீட்டிற்கு அரசாங்கத்தின் உத்திரவாதம் உள்ளதால், பணத்தை இழக்கும் அபாயம் கிடையாது.

  • 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அவசரத் தேவைக்கு இதிலிருந்து பகுதிப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

  • 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இதனைக் கொண்டு, கடன் விண்ணப்பிக்க முடியும்.

பொன்மகன் சேமிப்பு திட்டம்

எவ்வாறு தொடங்குவது ?

அருகிலுள்ள அஞ்சலகத்தில், பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

  • விலாசத்திற்கான ஆவணம் (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்றவை)

  • அடையாளத்திற்கான ஆவணம் (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை)

  • வருமானச் சான்றிதழ் (அரசாங்க அலுவலரிடம் இதனைப் பெறலாம்)

  • கடவுச்சீட்டு புகைப்படங்கள் - 2

  • பள்ளிப்படிப்பிற்கான சான்றிதழ்

  • சிறுவனின் வங்கிக் கணக்கு விபரங்கள்

பொன்மகன் சேமிப்புத் திட்டம் என்ற அருமையான கூட்டு வட்டித் திட்டத்தினைப், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பெண் குழந்தைகள் எனில், பொன்மகள் சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆண் குழந்தைகள் எனில், முதல் ஆண் குழந்தைக்கு பொன்மகன் சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டாவது ஆண் குழந்தைக்கு, பொது சேமநல நிதியைப் (public provident fund) பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, இவற்றின் மூலம், குழந்தைகளின் எதிர்கால மேல்படிப்புத் தேவையை எளிதில் கையாளலாம்.

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள இனிப்பான ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT