Nandhan Movie Review 
வெள்ளித்திரை

விமர்சனம்: ‘நந்தன்’ கேள்விக்குறியாகும் தமிழ் நாட்டின் சமூக நீதி!

ராகவ்குமார்

‘அரசியல் அதிகாரம் பெறுவதே தலித் விடுதலைக்கு ஒரே வழி’ என்றார் அண்ணல் அம்பேத்கர். இன்றைய சுதந்திர இந்தியாவில் தலித்துகள் அரசியல் அதிகாரம் பெற்றாலும், உரிய மரியாதையுடனும், சுதந்திரமாகவும் செயல் பட முடிகிறதா என்பதை சொல்லும் படம் 'நந்தன்.'

இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 20 அன்று திரைக்கு வருகிறது. ‘இந்தக் காலத்திலும் இப்படி நடக்கிறதா’ என்று கேட்பவர்களை கை பிடித்து காட்டும் முயற்சிதான் இந்த படம் என்று டைட்டில் கார்டில் இப்பட இயக்குநர் சொல்கிறார். இவர் காட்டும் விஷயங்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

Nandhan movie

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது ஒரு கிராமம். பொது பஞ்சாயத்து தொகுதியாக உள்ள இந்த கிராமத்தில் சில பல அரசியல் காரணங்களால் தலித்துகள் மட்டுமே போட்டியிடும் தனி (Reserved) பஞ்சாயத்து தொகுதியாக இது மாற்றப்படுகிறது. அதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த ஜாதிய உணர்வு கொண்ட தலைவர் தன்னிடம் அடிமை போல வேலை செய்யும் தலித் சமூகத்தை சேர்ந்த குழுவானை என்றழைகப்படும் அம்பேத் குமார் (சசிகுமார்) என்பவரை எந்த போட்டியும் இல்லாமல் தலைவராக்குகிறார்.

அம்பேத் குமார் கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து கிராமத்துக்காக சில விஷயங்களைச் செய்கிறார். இதனால் கோபம் கொள்ளும் முன்னாள் தலைவர், அம்பேத் குமாரை ஊர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி அடித்து, அவமானப்படுத்தி, பதவியை ராஜினாமா செய்ய வைக்கிறார். மீண்டும் வேறொரு தலித் நபரை போட்டியின்றி தலைவராக்க முயற்சி செய்கிறார். இந்த முயற்சியால் நடக்கும் அரசியல் கூத்துகளும், அராஜகங்களும்தான் ‘நந்தன்’ திரைப்படம்.

சசிகுமாருக்கு இப்பட நடிப்புக்காக இந்த வருடம் தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளது. பல படங்களில் ஸ்டைலிஷாக, ஆக் ஷன் காட்டும் சசி, நந்தனார் எப்படி வாழ்ந்திருப்பாரோ அதை அப்படியே உணர்ந்து நடித்திருக்கிறார். கருப்பான தோற்றத்தில், அழுக்கான உடையில் வரும்போதும், வேஷ்டி கட்டிக்கொண்டு கம்பீரமாக வலம் வரும்போதும், அவமானபடுத்தப்படும்போதும் சசிகுமாரை இயக்குநர் சரியாகப் பயன்படுத்தி உள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. ஊர் முன்பு அவமானப்படுத்தப்படும் காட்சியில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு ஜாதி திமிர் பிடித்த ஊராட்சி தலைவராக, உள்ளே ஒன்று பேசி வெளியே வேறு மாதிரி நடந்துகொள்ளும் பெரிய மனிதன் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்தி போகிறார் டைரக்டர் பாலாஜி சக்திவேல்.

Nandhan movie

சசிகுமார் மனைவியாக நடிக்கும் ஸ்ருதி பல படங்களில் வந்து போகும் ஹீரோயின்கள் போல் இல்லாமல் நடிக்கவும் செய்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சி முதல் நகரும் விதம் சற்று நாடக தன்மையுடன் இருப்பது ஒருவித குறையே. தனி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரை அமர நாற்காலி தராமல் அவமானப்படுத்துவது, மேலவளவு, புதுக்கோட்டை என நாம் செய்தித் தாள்களில் படித்த விஷயங்கள் படத்தில் இடம் பெறுவதை பார்க்கும்போது, ‘அட, இதுதான் நமக்குத் தெரியுமே’ என்று சொல்லத் தோன்றகிறது.

படம் முடிந்த பின்பு தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட தலித் பஞ்சாயத்து தலைவர்களை பேச வைத்திருப்பது கொஞ்சம் ஆறுதல் தருகிறது. ஜிப்ரானின் இசை தாலாட்டாக உள்ளது. நேதாஜி, அம்பேத்கர், காந்தி போன்ற தலைவர்களை பேக் ட்ராப்பில் காட்டும் இயக்குநர், 'சமூக நீதிக்காகப் போராடிய பெரியாரை' காட்டவில்லை. இயக்குநர் டைட்டிலில் சொல்வது போல இப்படியும் நடக்கிறது என்பதை அந்த இடத்திற்கே சென்று காட்ட முயற்சி செய்திருக்கிறார். ஆனால், இன்னும் அதிக முயற்சி எடுத்திருக்கலாம்.

சோஹா அலிகான் முகப் பளபளப்பிற்கு இந்த மூன்று உணவுகள்தான் காரணம்!

சிறுகதை: களிமண் பிள்யைாரும் மூணு யூனிட் இரத்தமும்!

சருமத்தில் இந்த அறிகுறிகளா? ஜாக்கிரதை! 

மதங்க முனிவர் காட்சி கொடுத்த திருநாங்கூர் மாதங்கீஸ்வரர்!

சிறுகதை: குடிகாரர்களின் குடும்பம்!

SCROLL FOR NEXT