இந்தியாவை சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான கிராமி விருது வழங்கப்பட்டது.
உலகளவில் இசைத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருது தான் கிராமி விருதுகள். அமெரிக்காவை சேர்ந்த தி ரெக்கார்டிங் அகாடமி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியாவை சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்த இசைக்குழுவின் சமீபத்தில் ‘This Moment’ என்ற ஆல்பத்தை வெளியிட்டது. இதனையடுத்து 2024ம் ஆண்டுக்கான கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. கிதார் கலைஞர் ஜான் மெக்லாக்லின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், பாடகர் சங்கர் மகாதேவன், தாள கலைஞர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 8 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த கிராமி விழாவில், சக்தி இசைக்குழு தவிர, மற்ற கலைஞர்களான சூசானா பாக்கா, பொகாண்டே, பர்னா பாய் மற்றும் டேவிடோ ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டனர். கடுமையான போட்டி இருந்தபோதிலும், சக்தி சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான கிராமி விருதைப் பெற்று அசத்தி உள்ளது.
This Moment ஆல்பம் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வெளியானது. சக்தி இசைக்குழுவில் இடம்பெற்ற ஒவ்வொரு இசைக்கலைஞர் தங்கள் சொந்த ஊரில் இருந்து தங்கள் பகுதியை ரெக்கார்டிங் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.