Actor Jaishankar https://cinereporters.com
கலை / கலாச்சாரம்

மறக்க முடியுமா தென்னிந்திய ஜேம்ஸ் பாண்டை?

எஸ்.விஜயலட்சுமி

மிழ் சினிமா வரலாற்றில் ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் ஜெய்சங்கர். திரையுலகில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் ஆகியோர் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். முதலில் சோவின் நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். பின்பு கூத்தபிரானின் நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து, அமரர் கல்கியின் 'அமரதாரா' நாடகத்தில் நடித்து சிறப்பான பெயர் பெற்றார். 'இரவும் பகலும்' என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகும்போது அவருக்கு வயது 27.

தயாரிப்பாளர்களின் நாயகன்: எம்ஜிஆர். சிவாஜி போன்ற பிரபல நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க முடியாத சின்ன தயாரிப்பாளர்களின் ஒரே சாய்ஸ் நடிகர் ஜெய்சங்கர். குறைந்த செலவில் படம் எடுப்பதற்கு முழுமையான பங்களிப்பை கொடுத்தவர் ஜெய்சங்கர். தயாரிப்பாளர்களின் நாயகன், இயக்குனர்களின் நாயகன் என்று பெயர் எடுத்தவர் இவர்.

அதிக சம்பளம் கேட்க மாட்டார். குறைவான சம்பளத்திலும் பாக்கி வைத்தால் கூட அதைக் கேட்டு வாங்க மாட்டார். அருமையான தோழமை குணம் கொண்டவர். படப்பிடிப்பில் இருக்கும்போது பெரிய நடிகர்கள் முதல் கீழ்நிலை பணியாளர்கள் வரை அனைவரிடமும் வித்தியாசம் பார்க்காமல் நட்புடன், கைகுலுக்கி பேசும் இயல்புடையவர். அனைவரிடமும் நல்லுறவு கொண்ட நல்லவர்.

தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்: இவர் அறுபது மற்றும் 70களில் ஆக் ஷன் ஹீரோவாகத் திகழ்ந்தார். அதேபோல, குடும்ப கதைகளிலும் நடித்துப் பெயர் வாங்கினார். நகைச்சுவைப் படங்களிலும் தனிமுத்திரை பதித்தார். துப்பறியும் கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்ததால் இவரை 'தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட்' என்று ரசிகர்கள் அழைத்தனர். ஒவ்வொரு வாரமும் இவருடைய புது படங்கள் ரிலீஸ் ஆன காரணத்தால் இவர் (ஃப்ரைடே ஹீரோ) வெள்ளிக்கிழமை நாயகர் என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் நடித்த, குழந்தையும் தெய்வமும், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், கருந்தேள் கண்ணாயிரம், சி.ஐ.டி. சங்கர், பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு போன்ற படங்கள் பிரபலமானவை. ‘முரட்டுக்காளை’ படத்தில் வில்லனாக தோன்றினார். அதன் பின்பு சில படங்களில் வில்லனாக நடித்தாலும், அவருக்கான ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை.

இவரது தனித்துவமான நடிப்புத் திறன்: இவருடைய கண்கள் மிகச்சிறியன என்றாலும் அதில் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் வல்லவர். அவரது இயல்பான நடிப்பு பாணிக்காக அவர் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார். வீரம் நிறைந்த கதாபாத்திரங்கள் முதல் சிக்கலான வில்லன்கள் வரை பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். பல படங்களில் சோ, நாகேஷ், சுருளிராஜன் போன்ற நகைச்சுவை நாயகர்களுடன் காமெடி நடிப்பிலும் அசத்தினார்.

தயாள குணம்: ஜெய்சங்கர் மிகவும் நல்ல மனம் படைத்தவர். எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு உதவும் இயல்புடையவர். அவரது மறைவிற்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் அவரது மகன் டாக்டர் விஜய் சங்கர் தனது தந்தையின் பிறந்த நாளில் 15 இலவச கண் அறுவை சிகிச்சைகளை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT